இன்று வாத்தியார் சுஜாதாவின் பிறந்த நாள். சுஜாதா எழுத வந்த காலகட்டம் சாதாரணமானது அல்ல. எழுத்துலகையும் இலக்கியத்தையும் சாமானிய மனிதனிடமிருந்து வெகுதூரத்திற்கு கொண்டு சென்றுவிட்ட கடினமான இலக்கியவாதிகள் நிறைந்திருந்த காலம் அது. அவர்கள் மத்தியில் எல்லோரையும் தமிழைப் படிக்கவைத்து, வாசகவெளியில் அவர்கள் விட்டுவைத்த வெற்றிடத்தைத் தன் குறும்பும் துள்ளலும் நிறைந்த எழுத்துகளால் இட்டு நிரப்பினார். தமிழை எளியவனுக்கு எளிமையாக்கினார். தமிழை விஞ்ஞானப் படுத்தினார். புது இரத்தம் பாய்ச்சினார். தமிழை உலகமயமாக்கினார். தமிழர்களுக்குத் தமிழின் சிறப்பை தனக்கே உரிய பாணியில் உணர வைத்தார். சுஜாதாவின் எழுத்தால் ஈர்க்கப்பட்டுத் தமிழ் படித்தவர்கள் எத்தனை லட்சம். அவரது எழுத்தால் கவரப்பட்டு எழுத்தாளர் ஆகத் துடித்தவர்கள் எத்தனை பேர். எழுத்தாளர் ஆனவர்கள் எத்தனை பேர். சுஜாதா என்ற சகாப்தம் இல்லையென்றால் பலர் இன்று தமிழில் எழுதிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை எவ்வளவு சுருக்கமாகச் சொன்னால் புரியும் என்பதை சுஜாதாவிடம் கற்க வேண்டும். பலரை கார்ப்பரேட் மேலாண்மைகளுக்கும், நவீன தகவல் பரிமாற்றத் திறன்களுக்கும் முன்னோடியாக மாற்றினார். ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும் என அவரே சொல்கிறார், ''எழுத்தாளன் என்பவன் இரண்டு ஆளாக இருக்கவேண்டும் (Dichotomy). முதலில் எழுத்தாளனாக; பிறகு, தான் எழுதியதைத் தானே படித்துப் பார்க்கும்போது வாசகனாக! உன் எழுத்து உனக்கே போரடித்தால் வாசகன் எப்படி அதை ரசிப்பான்?" இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் சோக நிலையைப் பற்றியும் ஒரு பேட்டியில் தனக்கே உரிய ஸ்டைலில் சொல்கிறார், 'நான் வாழ்நாள் முழுக்க எழுத்தில் சம்பாதித்ததை வைத்துக்கொண்டு என்னால் ஒரு நாள் கூட முழுசாக வாழ்ந்திருக்க முடியாது'. அவரது எழுத்திற்குரிய நியாயமான கூலி கிடைத்திருக்குமேயானால் இந்நேரம் ECRல் பாதி பங்களா அவருடையதாகத்தான் இருந்திருக்கும். சுஜாதாவின் எழுத்துகளைத் தீவிர இலக்கியவாதிகள் இலக்கியம் என ஒத்துக்கொண்டதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இலக்கியத்தை வரையறுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லையே. இப்படி சொல்லும் இலக்கிய எழுத்தாளர்கள் யாரும் வள்ளுவனைப் போலவோ, கம்பனைப் போலவோ எழுதுவதில்லை. காலத்திற்கேற்ப தமிழ் தனது நடையை மடைமாற்றியே சென்றிருக்கிறது. பெருகி ஓடி வரும் காட்டாற்று வெள்ளத்தைக் கோப்பையில் அடைக்க நினைத்தால் என்ன நியாயம்? சுஜாதாவின் இலக்கிய ஞானம் என்னவென்பதைப் புரிந்தவர்கள் இந்த குறுகிய கருத்தைச் சொல்லவே மாட்டார்கள். அவர் அறியாத இலக்கியம் இல்லை, மத நூல் இல்லை, ஆழ்வார்ப் பாசுரம் வாசித்துக்கொண்டே குரானையும் வாசிக்கும் மனோவல்லமை படைத்தவர். கடுமையான தமிழ் இலக்கியங்களையும், உலக மொழிகளின் சிறந்த படைப்புகளையும் அனாயாசமாகப் படித்து அறிந்து, அந்த பேரிலக்கியங்களை சாமானிய நடுத்தர மக்களிடமும், ரிக்ஷாகாரனிடமும், குமாஸ்தாக்களிடமும் எளிய நடையில் கொண்டு சென்ற சாதனையாளர். இலக்கியத்தையும், வழக்குத் தமிழையும் இணைத்து ஒரு மகா யுகப் புரட்சியே செய்தார். சுஜாதா என்ற மாபெரும் கலைஞனுக்கெல்லாம் இறைவன் கூடுதலாக ஒரு 200 ஆண்டுகள் ஆயுள் கொடுத்திருக்கலாம். அல்லது கொடுத்த 100 ஆண்டுகளாவது முழுமையாகக் கொடுத்திருக்கலாம், இன்னும் வெளிவராமல் அவரது மூளைக்குள்ளேயே புதைந்து இறந்து போன படைப்புகள் எத்தனை எத்தனையோ? அவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு தமிழ் எழுத்தைத் தேடித்தேடிப் படிக்கும் வாசகர்களும், அவரால் உருவாகும் எழுத்தாளர்களும் இருக்கும்வரை, சுஜாதா எனும் வாத்தியார் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்! From FB jayasala 42
I fully agree with the person who wrote this eulogy in FB. I duff my hats to him. This reminds me of his bio a part of which appear in the link: அன்புடன் வாழுங்கள் Thanks for sharing. Regards.