புள்ளிகளில் பூத்த புது மலர் ! "புள்ளிகளில் பூத்த புது மலர்" என்ற கோலப் புத்தகத்தின், முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே எழுதுகிறேன். கோலம் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். "முகத்திற்கு அழகு திலகம்; அகத்திற்கு அழகு கோலம்" என்பது உண்மை. கோலம் இடும் கலை நம் நாட்டில் தொன்று தொட்டு வளர்ந்து வரும் கலைகளில் ஒன்று. நல்ல இசையைக் கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் பரவசம், நல்ல நடனத்தைப் பார்க்கும்போது உண்டாகும் இன்பம், கோவிலுக்குச் செல்லும்போது ஏற்படும் தெய்வீக உணர்வு அனைத்தும் ஒருங்கே ஒரு நல்ல கோலத்தைப் போடும்பொழுது உண்டாகும் என்பதில் ஐயமில்லை ! பொதுவாகப் பார்ப்பின் இது புள்ளிகளும், புள்ளிகலைச் சுற்றி கோடுகளும் கொண்ட வரைபடம் போல் தோன்றும். ஆனால் கணிதக்கண் கொண்டு பார்த்தால் தான் அதிலுள்ள இருபக்க, நான்குபக்க, ஆறுபக்க ஒத்தமைப்பு (symmetry) நமக்குப் புலனாகும். கோலம் என்பது வெறும் கோடுகள் அல்ல. கோலத்தின் நடுவில் வைக்கும் புள்ளி சிவனையும், சுற்றி வளையும் கோடுகள் சக்தியையும் குறிக்கும். கோலம் போடும்போது முதுகு வளைந்தே இருக்க வேண்டும். அகம்பாவத்துடன் இல்லாமல் குனிந்து இருந்தால் தான் வளைந்து நெளிந்து சிவத்தை அடைய முடியும் என்பதே கோலம் போடுவதின் தத்துவமாகும். இதிலிருந்தே இக்கலையின் பெருமையைத் தெரிந்து கொள்ளலாம் ! அழகுக்கும், அறிவுக்கும், ஆன்மீக உணர்வுக்கும் வழி வகுக்கும் ஒரு பண்பான கலையாகும். பொழுது புலருமுன் வாசலில் கோலமிடும் பொழுது குனிந்து வளைந்து போடுவதால் உடலுக்குத் தகுந்த பயிற்சி கிடைக்கிறது. நன்றாகப் போடவேண்டும் என்ற ஆர்வம் மனதை ஒருங்கிணைக்கின்றது. சுருங்கச் சொல்லின் அமைதியான, கவனம் சிதறாமல் கோலம் இடுவது மனதை ஒடுக்கி தியானம் செய்வதற்கு ஒப்பாகும். பண்டிகை நாட்களில் சிறிய கோலமிட்டு அதைச் சுற்றி செம்மண் பட்டை இட்டுவிட்டுப் பார்த்தால், எளிமையில் அழகு மிளிருவதைக் காணலாம் ! பூஜை அறையிலோ அல்லது சுவாமி படங்களுக்கு முன்போ ஒரு சிறிய கோலமிட்டு ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்தால் தெய்வீகம் அங்கு வந்து குடியிருப்பதைக் காணலாம். இது தான் அந்தக் கலையின் மகிமை ! கையில் நம்மவர் போடும் கோலத்தை இந்த விஞ்ஞான யுகத்தில் கணிப்பொறியிலும் போடுகின்றார்கள். இக்கலையில் ஆய்வு செய்து முனைவர் (doctor) பட்டம் பெற்றவர்கள் பலர் என்றால். இந்த நுண்கலையின் புலமை புரியும். இன்று இது கணிதத்துறையின் ஒரு பகுதியென்றே சொல்லலாம். கோலங்கள் பச்சரிசி மாவு, கோலப்பொடி கொண்டு போடலாம் என்பது போக இன்று வண்ணப் பொடிகள், மலர்கள், மணிகள், நவதானியங்கள், கடற்சோவிகள், காகிதத் தூள்கள், உப்பு, உமி, தவிடு, பழங்கள், காய்கறிகள் கொண்டும் போடலாம். தரையில் மட்டுமன்றி தண்ணீருக்கு அடியிலும், மேலும், இடையிலும் கோலமிடுவதும் உண்டு. கோலத்தில் புள்ளிக் கோலம், கோட்டுக் கோலம், பறவைக் கோலம், விலங்குகள் கோலம், கிழமைக் கோலம், விழாக்காலங்களில் போடும் கோலம், ஒரு காரியத்தை எண்ணிப் போடும் கோலம் என்று பலவகை உண்டு. கோதையருக்கே உரியது கோலக்கலை ! அன்றும், இன்றும், என்றும் நிலையாக வளர்ந்து வரும் கலையை நாமும் கற்று, நமக்கு அடுத்த தலைமுறைக்கும் இதில் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும். "கோலம் என்பதே புள்ளியும் கோடும் தான் வாழ்க்கை என்பதே பள்ளமும் மேடும் தான்" என்ற வாழ்க்கையின் தத்துவத்தையே சொல்லும் கோலக்கலை எத்தனை பண்புடையது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும் ! அன்புடன், சித்ரா.
Peacock Kolam This is an imaginative kolam drawn on Kanda Sashti, thinking of Murugan. Love, Chithra.
What a feast for our eyes. Dear Ms C, All these kolam pictures are sheer feast for our eyes. Thanks for all the efforts you are taking to upload all these picture. Am definitely going to try the floral ones . Vandhana