1. ஒராயிரம் வருடங்களாய் தேக்கிய காதலை ஒற்றை முத்தத்தில் என்னுள் பதிக்கிறாய் இருளுக்குள் விரைகின்றன* பெருநகரின் மிகச்சிறிய வாகனங்கள் 2. முத்தவிதையொன்று உயிர்ப்பிக்கிறது எண்ணற்ற விருட்சங்களையும் ஒரு கையறு கணத்தையும். 3. எங்கிருந்தோ வந்த பறவையொன்று நம் முத்தத்தின் மீது அமர்ந்தது. அதன் சிறகை உனக்கும் இறகொன்றை எனக்கும் தந்துவிட்டு மறைந்தது. இரண்டையும் துறந்துவிட்டு மீண்டுமொரு முத்ததினுள் பறக்கத்துவங்குகிறோம். தொலைவில் பறந்துவருகின்றன* சிறகுகளற்ற பறவைகள். 4. ஒரு பெரும் இழப்பை ஒரு முத்தத்தில் மீட்டெடுக்கிறேன். இழப்புகள் பல்லாயிரம் ஒன்றுசேர்ந்து என் உடலைச் சுற்றி சுற்றி மிதக்கின்றன முத்தங்களாய். 5. விடைபெறலில் பெறப்படுகின்ற* முத்தங்கள் எப்போதும கண்ணீரின் முத்தவடிவங்களாகி பரிதவிக்கின்றன. விடைபெற்று நகர்ந்த பின் ஓவென்று அழுதபடி உடன் ஓடிவருகின்றன. கொஞ்ச தூரத்தில் மூச்சிரைத்து ஓட முடியாமல் நின்றுவிட்டு களைத்து இதழ்களுக்கு திரும்பிவிடுகின்றன. எந்தவொரு முத்தத்தையும் எப்போதும் உடன் எடுத்துச்செல்ல முடிவதில்லை. உடன் வருவது முத்தமிட்ட பேரமைதியும் முத்தம்பெற்ற பேரானந்தத்தின் கணங்கள் மட்டுமே. -நிலாரசிகன்.
All are good but I liked the first two more, NilaRaseegan! Happy to see your entries again here. As usual, your lines rock! -rgs