[font="]1. உனக்கும் எனக்கும் இடையில் மூன்று நதி ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நதியில் ஒரு ஓடமும் இரண்டாம் நதியில ஒரு இலையும் மிதப்பதை மூன்றாம் நதியில் அமர்ந்திருக்கும் நீள்தாடி கிழவன் ரசித்துக்கொண்டிருக்கிறான். கற்பனைகளாலான கயிற்றில் நாம் கட்டப்படுகிறோம். நம் பாவத்தின் அறிக்கைகளை வெளியிடும் நாளில் கட்டுக்கள் அவிழ்ந்து மீண்டும் இணைகிறோம். நம்மிடையே நிற்காமல் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது அதே நதி. 2. யார் யாரோவாக அறிமுகமாகிறோம். யாதுமாகி உள் அமர்கிறோம். எதுவுமற்று சாம்பலென உதிர்கிறோம். 3. அன்பெனப்படுவது ஒரு வதை. வதையெனப்படுவது ஒரு மாயை. மாயையெனப்படுவது ஒரு துயர் துயரெனப்படுவது அன்பின் மற்றொரு பெயர். 4. தாயின் ஸ்பரிசங்களோடு தொடுகின்ற விரல்களை பெற்றிருக்கிறாய். நீலக்கடலின் ஆழ்ந்த அமைதி உன் விரல்களெங்கும் விரவிக்கிடக்கிறது. வலிகளை கண்ணீர்த்துளிகளால் நீக்குகிறாய். மார்போடு அணைத்துக்கொண்டு நீங்குதலின் அர்த்தங்களை தெருவெங்கும் சிதறவிட்டபடி கதறும் சருகுகளின் மேல் நடந்து செல்கிறாய். மீண்டும், மழைக்கு காத்திருக்கிறாள் சிறுமி. -நிலாரசிகன்.[/font]
என்ன சொல்ல nr? எப்போதோ வருகிறீர்கள்... வார்த்தை சிதறல்களால் எண்ணங்களை சிதறடித்துவிட்டு செல்கிறீர்கள்.... அடுத்த (கவிதை)மழை எப்போதோ? நாங்களும் காத்திருக்கிறோம்.
அபி, எப்பொழுதாவதுதானே மழையும் பெய்கிறது என் அடுத்த கவிதை நூல் "வெயில் தின்ற மழை" உயிர்மை பதிப்பகம் இம்மாதம் டிசம்பர் 26 வெளியிடுகிறது. கலந்துகொண்டால் மகிழ்வேன். இதைப்பற்றிய அறிவிப்பு என்னுடைய வலைப்பூவில் இருக்கிறது. நன்றி, நிலாரசிகன்.
இதில் இரண்டாம் கவிதை எனக்கு மிகப் பிடித்தது நிலாரசிகன். நிறைய யோசிக்க வைக்கிறது அது. உங்கள் அடுத்த கவிதை நூல் வெளியாவது குறித்து மிகவும் மகிழ்ச்சி நிலாரசிகன். மனமார்ந்த வாழ்த்துக்கள். -ஸ்ரீ
வெயில் தின்ற மிச்சத்தை இங்கே சொல்ல வந்திட சொல்" எனப் பெய்திடும் மழை வார்த்தை பிரயோகம் மிக அருமை. வாழ்த்துக்கள்
உங்கள் வலைப்பூவில் ஏற்கனவே வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தேன். சிங்கையில் இருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை. இன்னும் பல புத்தக வெளியீடுகள் நிகழுமல்லவா. கண்டிப்பாக கலந்துகொள்வேன்.:cheers