சாதாரண மனிதர்களால் எளிதில் முடியாதவற்றை, இயற்கைக்கு மாறானவையாகத் தோன்றுவதை அற்புதமாக நிகழ்த்திக் காட்டுவது மகான்களின் தனிச்சிறப்பு. ஏனெனில் அவர்கள் அந்த இயற்கையையே வென்றவர்கள். அதனால் தான் அவர்கள் சித்தர்களாகவும், ஞானிகளாகவும், யோகிகளாகவும், மகான்களாகவும் விளங்குகின்றனர். ஸ்ரீ அரவிந்தர் சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமல்லாமல் மகா யோகியாகவும் விளங்கியவர். ‘சாவித்ரி’ என்னும் மகா காவியத்தைப் படைத்தவர். சகமனிதர்கள் மீது மட்டுமல்லாமல் மிருகங்கள் மீதும் அளவற்ற அன்பு பூண்டவராக ஸ்ரீ அரவிந்தர் விளங்கினார். ஆசிரமத்தில் ஒரு பூனை இருந்தது. அதன் பெயர் சுந்தரி. அதற்கு அந்தப் பெயரைச் சூட்டியதே ஸ்ரீ அரவிந்தர் தான். அதற்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவற்றின் பெயர் பிக் பாய், கிக்கி. ஒரு முறை கிக்கியை தேள் ஒன்று கொட்டி விட்டது. விஷத்தின் தாக்கத்தால் அது துவண்டு விழுந்து விட்டது. உடனே அந்தப் பூனைக் குட்டியைப் பிழைக்க வைப்பதற்காக சாதகர்கள் ஸ்ரீ அரவிந்தரிடம் அதனைக் கொண்டு சென்றனர். மேசை மீது அதனைப் படுக்க வைத்தனர். அந்தப் பூனைக் குட்டியின் கண்களையே சற்று நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ஸ்ரீ அரவிந்தர். அதுவும் தனது சோர்ந்த கண்களால் ஸ்ரீ அரவிந்தரையே உற்று நோக்கியது. சற்று நேரம் சென்றிருக்கும், ‘மியாவ்’ எனக் கத்தியவாறே துள்ளி குதித்துக் கொண்டு எழுந்து வெளியே ஓடி விட்டது அது. பார்வையாலேயே நோய்களைப் போக்கும் வல்லமையை ஸ்ரீ அரவிந்தர் பெற்றிருந்ததைக் கண்டு ஆசிரமவாசிகள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்