'' விஷ் யு ஹேப்பி நியூ இயர்??? !!!''ஜனவரி ஒன்று, வருஷா வருஷம் வருகிறது. புது வருஷம் தொடங்குகிறதாம் அன்றிலிருந்து? எப்படி? எந்தவிதத்தில்? தலையைச் சொரிந்து கொண்டு தேடினாலும் புரியவில்லை. அது சரி, இதுவரை எந்த வருஷம் புது வருஷமாக பிறக்கவில்லை? டிசம்பர் 31 நாள் போனதும் பாவம் எத்தனை வருஷங்களை ''இதைப்போன்ற கரிய வருஷம் (black இயர்) பார்த்ததில்லை என்று அதற்கு வர்ணம் பூசியிருக்கிறோம்! எத்தனை வருஷங்கள் இது போல் பார்த்துவிட்டோம். ஆரம்பத்தில் நிறைய எதிர்பார்ப்பு. கடைசிநாளில் ''இந்த வருஷம் என்னவோ ரொம்பவும் படுத்தி விட்டது. யாருமே சந்தோஷமாக இல்லை, எத்தனை விதமான எதிர்பாராத இன்னல்கள், துக்கங்கள், சில சந்தோஷங்கள், (அவை ஏன் நிரந்தரமாக இல்லை?) வரும் புது வருஷம் இதுகள் எல்லாம் இல்லாத சிறந்த வருஷமாக அமையட்டும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. ஒருவரை ஒருவர் ''விஷ் யு ஆல் ஹேப்பினஸ் '' என்று கை குலுக்கி வாழ்த்துகிறோம். மேலே கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு பார்க்கிறான் (போன வருஷ காலண்டரிலும் இருந்தவன் இப்போது புது பால் பேப்பர் காலண்டரிலும் சிரிக்கிறான்). ''தம்பி உன் சந்தோஷம் (happiness) உன் கையில்தானடா இருக்கிறது'' என்று சொல்லாமல் சொல்கிறான். பண்டைய காலங்களில் புது வருஷங்களில் -- ஆங்கிலேயர் தொடங்கி வைத்த இந்த மாதிரி வருஷங்களை அவர்கள் ஆதரிக்கவில்லை. எல்லோரும் ஒன்றுகூடி இறைவனை பிரார்த்தித்து நன்றி கூறினார்கள். ஒற்றுமை நிலவியது. தான தருமங்கள், அன்ன தானம், அனைவருக்கும் உணவு என்று இருப்பதை பகிர்ந்து கொண்டார்கள். ஆலயங்களில் விசேஷ வழிபாடு நடத்தினார்கள். அவனருளால் அவன் தாளை வணங்கினார்கள். சென்ற எத்தனையோ வருஷங்களும் ஆரம்பிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புகளோடு, வாழ்த்துகளோடுதான் இவ்வாறு உதய மாயின. முடியும்போது அப்பப்பா, இதுபோல் இனி வரும் வருஷமோ, வருஷங்களோ இருக்கக்கூடாது என்று அங்கலாய்ப்பது என்று நின்றது? இதிலிருந்து என்ன புரிகிறது. வருஷங்கள் எல்லாமே ஒன்றுதான். இயற்கை என்றும் மாறவில்லை. நமது பார்வையில்தான் வித்தியாசம், எதிர்பார்ப்பு. மனிதனின் வாழ்க்கை அவனது மனம் போன வழியில் அமைகிறது. மனதின் விருப்பு வெறுப்பு, எதிர்பார்ப்பு, அதால் வரும் ஏமாற்றம், அது உற்பத்தி செய்யும் கோபம், தாபம், பழி வாங்கும் உணர்ச்சி, மன்னித்தல் மறத்தல், இவை கலந்து கட்டியாகி அவனை அலைக்கழிக்கின்றது. அமைதி இழக்கிறான். உடலும் உள்ளமும் ஆரோக்யத்தை தொலைத்து விடுகின்றன. அவதிப்படுகின்றன. ''நான்'' ''எனது'' இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும். எது நடக்கிறதோ அதில் நமக்கொரு பங்கும் இல்லை. அது இறைவன் சித்தப்படியே ஒரே சீராகவே என்றும் அமைந்து வருகிறது. ஜனவரி, டிசம்பர் எல்லாம் நாம் போடும் கணக்குகள். இறைவன் படைப்பில் மாமரமும் தென்னை, வாழை, ஜந்துக்கள் உயிரினங்கள் எல்லாமோ ஒன்றே போல், மாறுதல் இன்றி தோன்றி மறைகின்றன. மனிதன் மாறிக்கொண்டே வருகிறதின் காரணம் அவன் மனத்தில் தோன்றும் எண்ண சுழல்களின் மாறுதல்கள் . ''மனசு''தான் மனிசன், ''மனது''தான் மனிதன், mindதான் man. எனவே ஆதாரம் அதே. அதன் இயக்கத்தில் தான் நாம் இயங்குகிறோம். தவறுகள் நம்மால்தான் நிகழ்கின்றன. சந்தோஷம் நாம் உண்டாக்கிக் கொள்வதுதான். மற்ற எதன் மேலோ, எவர் மேலோ, நமது காரிய விளைவுகளை சாட்டுவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு அல்ப திருப்திக்காக. இதால் ஏற்படும் திருப்தி, பொறுப்பின்மை, குறிப்பிட்ட காலத்திற்கு வேண்டுமானால் நிம்மதியைத் தரலாம். ஆனால், வேரில்தான் ஒரு மரத்தின் உச்சாணிக்கிளை இலையின் வளர்ச்சி உள்ளது என்ற ரகசியம் புரிந்து விட்டால் ''எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன்னுடைய செயலே'' என்பதின் அர்த்தம் புரியும். வரும் வருஷங்களையும் சென்ற வருஷங்களோடு ஒப்பிடத் தோன்றாது. வரும் கால வருஷத்திய பலனை ஜோசியரிடம் கேட்கத் தோன்றாது. ''உன்னை நீ அறிவாய்'' என்பது ஒவ்வொருவரும் தத்தம் ஆன்ம சோதனையில் ஈடுபடுவதை உணர்த்தும் வாக்கியம். வெளி உலகைவிட உள் உலகம் மிக பிரம்மாண்டமானது. மௌனம் தான் சகலமும் விவரமாக உணர்த்தும் மொழி. கிடைத்ததில் திருப்தி தான், அதற்கு அவனிடம் செலுத்தும் நன்றி தான் மிகச்சிறந்த ஆரோக்யமான செல்வச் செழிப்பு. பண்பட்ட மனம்தான் புது வருஷ பரிசு. காணும் யாவும் அவனே, கருத்தில் உறைபவனும் அவனே என்னும்போது உள் நின்று ஒளிரும் அந்த சக்திதான் வெளியேயும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பது தெரியும். அன்பு எவரிடமும் எதனிடமும் சுரக்கும். இயற்கையோடு ஒன்றி வாழ வழி தெரிந்துவிடும். அது தான் அவனும் எதிர்பார்ப்பது.