1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பழமொழி விளக்கம்

Discussion in 'Posts in Regional Languages' started by saidevo, Jul 13, 2012.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    061. பழமொழி: இடுவாள் இடுவாள் என்று ஏக்கமுற்று இருந்தாளாம்; நாழி கொடுத்து நாலு ஆசையும் தீர்த்தாளாம்.
    பொருள்: யஜமானி நிறையக் கொடுப்பாள் என்று வேலைக்காரி ஆசையோடு இருந்தபோது, அவள் யஜமானி அந்த வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம்.

    விளக்கம்: நாழி என்பது கால் படி அளவு: ’உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். (நல்வழி 28).’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண், உடை, பூ, மஞ்சள். (இன்று அவை ஊண், உறக்கம், ஷாப்பிங், டி.வி. என்று மாறிவிட்டது வேறு விஷயம்.)

    *****

    062. பழமொழி: இலவு காத்த கிளி போல.
    பொருள்: பருத்தி மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி போல.

    விளக்கம்: இலவம் என்றால் பருத்தி மரம். இலவம் பஞ்சு, பஞ்சு வகைகளில் தரமானது. இலவு என்பது இலவம் மரத்தின் காய்களைக் (உண்மையில் அவை pods--விதைப் பைகள்) குறிக்கும். பருத்தி மரக்காய்கள் முற்றி வெடிக்கும்போது உள்ளிருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிட, கிளி ஒன்றும் உண்ணக் கிடைக்காது ஏமாறும்.

    *****

    063. பழமொழி: ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.
    பொருள்: ஒருவன் ஏறமுடியாத மரத்தில் எண்ணமுடியாத அளவுக்கு காய்களாம்.

    விளக்கம்: இந்தப் பழமொழி ஒரு விடுகதையாக, இராகி (கேழ்வரகு) கதிர்கள்பற்றிக் கேட்கப்படுகிறது.

    *****

    064. பழமொழி: கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல.
    பொருள்: தோப்பில் உள்ள நரி பல்லைக் காட்டிப் பயமுறுத்தியதுபோல.

    விளக்கம்: கொல்லைக்காடு என்பது ஒரு தோப்பைக் குறிக்கிறது. சவுக்குத் தோப்பில் நரி உலாவும் என்பார்கள். ஆனால் இந்தக் கொல்லைக்காட்டு நரிகள் காட்டு நரிகள்போல் கடுமையானவை அல்ல. எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும்.

    கோபாலகிருஷ்ண பாரதி தன் ’நந்தன் சரித்திரம்’ படைப்பின் 43-ஆவது பாடலில் ’கொல்லைக்காட்டு நரி’யைக் குறிப்பிடுகிறார். அவர் பிறந்த ஊரின் பெயரிலும் ’நரி’ இருக்கிறது: அது நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம்.
    Some links:???????????? ????????? ???????? (???????? ?????????? etc)- Nandanar songs of Gopalakrishnabharati
    Gopalakrishna Bharati

    *****

    065. பழமொழி: போனதுபோல வந்தானாம் புது மாப்பிள்ளை.
    பொருள்: பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல.

    விளக்கம்: புது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல.

    *****

    066. பழமொழி: கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
    பொருள்: அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான்.

    விளக்கம்: கூத்து என்றால் நடனம். பரமசிவனுக்குக் கூத்தன் என்றொரு பெயருண்டு. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். எனவே கூத்தாடி களைத்து சூரியன் கிழக்கில் உதிப்பதை எதிர்நோக்கியிருப்பான். அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான். ஆசிரியர் ’கல்கி’ தன் ’பொன்னியின் செல்வன்’ புதினத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் இரவில் நடைபெறும் ஒரு குரவைக் கூத்து பற்றி எழுதியுள்ளார்.

    *****

    067. பழமொழி: பாப்பாத்தி அம்மா, மாடு வந்தது, பார்த்துக்கொள்.
    பொருள்: பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு.

    விளக்கம்: ஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். காலையில் பசுக்களைத் தொழுவத்திலிருந்து கட்டவிழ்த்து ஓட்டிச் சென்ற இடையன் மேய்ச்சல் நேரம் முடியும் மாலை ஆனதும் தன் வீடு திரும்பும் அவசரத்தில் பசுக்களை அந்தப் பாப்பாத்தி வீட்டில், தொழுவத்தில் கட்டாமல் விட்டுவிட்டு இவ்வாறு சத்தம்போட்டுக் கூறிவிட்டுத் தன்வழி போனான்.

    வேலையில் முழு ஆர்வமில்லாமல் சம்பளத்தில் குறியாக இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    068. பழமொழி: முப்பது நாளே போ, பூவராகனே வா.
    பொருள்: வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.

    விளக்கம்: வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள் விளக்க நிகண்டு). பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது.

    *****

    069. பழமொழி: பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை தூக்கிகொண்டு அலைய வேண்டியதாச்சு.
    பொருள்: ஒரு பட்டுப்புடவையை அவள் உடுத்த இரவல் கொடுத்தேன். கூடவே நான் ஒரு மணை ஆசனத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போகவேண்டி வந்தது!

    விளக்கம்: என் பட்டுப்படவை அழுக்காகிவிடுமே என்ற கவலைதான்!

    *****

    070. பழமொழி: அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது.
    பொருள்: பக்கத்து வீட்டில் கடன் வாங்குவது, பிருஷ்டபாகத்தில் வந்த சிரங்குபோல.

    விளக்கம்: அண்டை வீட்டில் கடன் வாங்கினால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் மனம் தவிக்கும். உட்காரும் இடத்தில் புண் வந்தால் உட்காரும்போதெல்லாம் வலிக்கும்.

    *****
     
  2. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    071. பழமொழி: அம்பலம் வேகுது.
    பழமொழி: அதைத்தான் சொல்லுவானேன்? வாயைத்தான் நோவானேன்?
    பழமொழி: சந்தை இரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே.

    பொருள்: இந்தச் சத்திரம் பற்றி எரிகிறது.
    பொருள்: அதைச் சொல்வது ஏன்? பின் என் வாய் வலிக்கிறது என்பானேன்?
    பொருள்: உங்கள் இருவரது சந்தை இரைச்சலில் குடியிருந்து நான் கெட்டேனே.

    விளக்கம்: இந்த மூன்று பழமொழிகளுக்குப்பின் ஒரு கதை உண்டு: சத்திரம் என்பது வழிப்போக்கர்களுக்காகக் கட்டியது. அங்கு யாரும் நிரந்தரமாகத் தங்கக் கூடாது. ஒரு சத்திரத்தில் ஒரு அரைச் சோம்பேறி, ஒரு முக்கால் சோம்பேறி, ஒரு முழுச் சோம்பேறி மூவரும் குடிபுகுந்து வேளா வேளை வயிறாக உண்டு உறங்கிப் பொழுதைப் போக்கி வந்தார்கள். சத்திரத்தின் சொந்தக்காரன் எவ்வளவு முயன்றும் அவர்களை விரட்ட முடியவில்லை. ஒரு நாள் அவன் சத்திரத்துக்குத் தீ வைத்துவிட்டான். நெருப்பைப் பார்த்த அரை சோம்பேறி சொன்னது முதல் பழமொழி. அதற்கு பதிலாக முக்கால் சோம்பேரி இரண்டாவது பழமொழியில் உள்ளவாறு கூறினான். இவர்களின் உரையாடலைக் கேட்ட முழுச் சோம்பேறி கூறியது மூன்றாவது பழமொழி.

    *****

    072. பழமொழி: உத்தியோகம் தடபுடல், சேவிக்கிறவர்கள் இன்னாரினியார் என்றில்லை, சம்பளம் கணக்கு வழக்கில்லை, குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு.

    பொருள்: என் வேலையில் ஒழிவில்லாத ஆடம்பரம்; யார்யாரோ என்னை அண்டி வணங்குகிறார்கள். எனக்கு வரும் சம்பளத்துக்குக் கணக்கு வழக்கில்லை. (இருந்தாலும்) எருதை விற்றுப் பதினைது ரூபாய் அனுப்பச் சொல்லு.

    விளக்கம்: கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் பட்டணத்துக்கு வேலை தேடிப் போனான். அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. அதைத் தன் உறவினர்களிடம் சொல்வது கௌரவக் குறைச்சல் என்று அவன் எதிர்மறையாக மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.

    அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் வேலையில் எனக்கு ஓய்வு இல்லை. என் முதலாளிகள் யார் என்று தெரியவில்லை. எனக்குத் தரும் சம்பளம் இன்னும் சரியாக முடிவாகவில்லை. எனவே, எருதை விற்றுப் பதினைந்து ரூபாய் அனுப்பச் சொல்லு. குண்டை என்றால் எருது. வராகன் என்பது மூன்று ரூபாய்க்கு சற்று அதிக மதிப்புள்ள பொன் நாணயம்.

    *****

    073. பழமொழி: குந்தித் தின்றால் குன்றும் மாளும்.
    பொருள்: குன்றளவு சொத்து உள்ளவனும் வேலையில்லாமல் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவன் சொத்து விரைவில் கரைந்துவிடும்.

    விளக்கம்: மலையளவு சொத்துக்கள் சேர்த்த இன்றைய அரசியல்வாதிகள் எவ்வளவு குந்தித் தின்றாலும் அவர்கள் சொத்து கரைவதில்லை. கரைவது (குவாரியாகப் பொடிபட்டு) ஊரில் உள்ள குன்றுகளும், இன்னபிற பொதுச் சொத்துக்களும்தாம்.

    *****

    074. பழமொழி: நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.
    பொருள்: நடந்து செல்பவனுக்கு நாட்டில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாகப் பாயில் படுத்தூங்குகிறவனை அந்தப் பாயும் வெறுக்கும்.

    விளக்கம்: சோம்பேறிக்கு நண்பர்கள் கிடையாது; சுறுசுறுப்பாக இருப்பவர்கள் எங்கு இருந்தாலும் சமாளித்துவிடுவார்கள்.

    *****

    075. பழமொழி: கொட்டிக் கிழங்கு பறிக்கச்சொன்னாள் கோபித்துக்கொள்வார் பண்டாரம், அவித்து உரித்து முன்னே வைத்தால் அமுதுகொள்வார் பண்டாரம்.
    பொருள்: படைத்தால் உண்ணும் பண்டாரம் தான் வேலை எதுவும் செய்யமாட்டார்.

    விளக்கம்: கொட்டிக் கிழங்கு ஒரு செடி எனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.

    கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் இக்கிழங்கை சமைத்துச் சாப்பிட சுவையுடன் இருக்கும். இதனை பொரியலும் செய்யலாம். இக்கிழங்கை மாவாக்கிக் கஞ்சியாகக் கரைத்து கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோயும் சரியாகும். கொட்டிக்கிழங்குத் தூளை தேங்காய்ப் பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்கு மேல்பூச்சாக போட சீக்கிரம் ஆறிவிடும்.
    ???? ?????? ????????? ???????????????- 17 benefits kotti kizhangu prabbak kizhangu - Boldsky Tamil

    *****
     
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    076. பழமொழி: தெண்டச் சோற்றுக்காரா, குண்டு போட்டு வா அடா!
    பொருள்: வேலை ஒன்றும் செய்யாமல் தண்டச்சோறு தின்பவனே, எட்டு மணிக்கு குண்டு போட்டதும் வாடா!

    விளக்கம்: அது என்ன குண்டு, எட்டுமணி? ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது அவர்கள் அமைத்திருந்த கோட்டை அலுவலகங்களில் இருந்து நேரத்தைக் குறிக்க தினமும் இரண்டு முறை துப்பாக்கிக குண்டுகள் (காற்றில்) சுடப்படும். இப்படித்தான் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து காலை விடியும்போது ஒரு முறையும் இரவு எட்டு மணிக்கும் குண்டுச் சத்தம் ஒலிக்கும். இரவு எட்டு மணி என்பது ஆங்கிலேயர் இரவுச் சாப்பாட்டு நேரத்தை அறிவிக்க.

    *****

    077. பழமொழி: ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
    பொருள்: ஞானத்துக்கும் கல்விக்கும் உணவு மிக முக்கியம்.

    விளக்கம்: திருமூலரின்
    உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
    திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

    என்ற பாடல் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

    *****

    078. பழமொழி: உண்பது நாழி உடுப்பது நான்கு முழம், எண்பதுகோடி நினைந்து எண்ணும் மனம்.
    பொருள்: உண்பதற்கு ஒரு படி அரிசி இருந்தால் போதும். உடுப்பதற்கோ நான்கு முழம் துணி போதும். ஆனால் மனத்திலோ கோடிகோடி ஆசைகள்.

    விளக்கம்: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கூறியிருந்தாலும், ஆசைகளின் உந்துதலில் மனம் தன் குறைந்த தேவைகளுக்கு மிக அதிகமாகவே நாடுகிறது.

    *****

    079. பழமொழி: உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி.
    பொருள்: உன்னையும் என்னையும் பிடித்தபிறகு, உலகாளும் தேவியின் தலையிலேயே கையை வை.

    விளக்கம்: கேட்டது எல்லாம் செய்துகொடுத்தும் மேலும் ஒன்று கேட்பவனை/கேட்பவளைக் குறித்துச் சொன்னது. உதாரணமாக, பாண்டவர்கள் சூதாட்டத்திலே தோல்வியுற்று அனைத்தும் இழந்தபோது, திரௌபதி ஒரு சபதம் ஏற்றாள்: துச்சாதனனும் துரியோதனனும் கொல்லப்படும் அன்றுதான் தன் கூந்தலை முடிப்பது என்று. கண்ணனின் அநுக்கிரகத்தால் இவை நிறைவேறியபின் அவள் மீண்டும் ஒரு சபதம் செய்தாள், தன் குழந்தைகளைக் கொன்ற அசுவத்தாமன் கொல்லப்படும் வரை அவள் தன் கூந்தலை முடிவதில்லை என்று. அப்போது கண்ணன் அவளிடம் இப்பழமொழியைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

    *****

    080. பழமொழி: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
    பொருள்: இருப்பதே போதும் என்று திருப்தியுற்ற மனமே அது தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மருந்து ஆகும்.

    விளக்கம்: ரஸவாதத்தால் உலோகங்களைப் பொன்னாக்கும் முயற்சி உலகெங்கும் முயற்சிக்கப்பட்ட ஒன்று. ஆனால், அப்படிப் பொன்னாக்க முயல்வது பேராசையின் அறிகுறி. அதைவிட, இருப்பதே போதும், தேவையானது தேவையான நேரங்களில் வந்துசேரும் என்ற மனம் இருந்தால் அந்த ரஸவாதம் மற்ற உலோக மனங்களையும் பொன்னாக்க வல்லது.

    *****
     
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    081. பழமொழி: அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ?
    பொருள்: வெய்யிலில் சூடான அரிவாள் தண்ணீர் பட்டால் குளிரும். உடல் ஜுரம் அதுபோல ஆறுமா?

    விளக்கம்: இது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. ஒரு முட்டாள் வெய்யிலில் சூடான ஒரு அரிவாளைப் பார்த்தானாம். அதற்கு ஜுரம் என்று எண்ணி அவன் அதைக் குளிர்ந்த நீரில் நனைக்கவே, அந்த ’ஜுரம்’போய் அது மீண்டும் குளிர்ச்சியானதாம். வீட்டில் ஒருநாள் அவன் தாயாருக்கு ஜுரம் வந்தபோது அவன் அவளைக் குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில்போட, தாயார் குளத்தில் மூழ்கி இறந்தாளாம்.

    *****

    082. பழமொழி: எட்டுவருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.
    பொருள்: எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.

    விளக்கம்: எருமைக்கடா என்றது அடிமுட்டாளைக் குறித்தது. எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம். இதுபோன்று அடிமுட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்:

    எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல.
    கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழு போன இடம்.
    கழுதைப்பால் குடித்தவன் போலிருக்கிறான்.
    காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
    குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல் செய்கிறாய்.
    கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிறதுபோல.
    நெல்லுக் காய்க்கு மரம் கேட்டவன்போல.

    *****

    083. பழமொழி: நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி.
    பொருள்: நடக்கவே கஷ்டப்படும் குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல.

    விளக்கம்: லவாடி என்ற சொல் வேசி என்று பொருள்பட்டாலும் இந்கு ஒரு வயதான குதிரையைக் குறிக்கிறது. ஒரு வேலையையே ஒழுங்காக முடிக்கத்தெரியாத முட்டாள் ஒருவன் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் அரைகுறையாகச் செய்வது போல என்பது செய்தி.

    *****

    084. பழமொழி: புட்டுக்கூடை முண்டத்தில் பொறுக்கியெடுத்த முண்டம்.
    பொருள்: ஒரு கூடை நிறைய முட்டாள்கள் இருந்தால் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் அவன்.

    விளக்கம்: புட்டுவெல்லம் என்பது பனைவெல்லம். அதை வைக்கும் ஓலைக்கூடைக்கு புட்டிற்கூடை என்று பெயர்; இச்சொல் மருவி புட்டுக்கூடை என்றாகியது. கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தைவிட பனைவெல்லம் பொதுவாக மட்டமாகக் கருதப்படுகிறது. பனங்கற்கண்டு ஒரு மருந்துப்பொருளாகப் பயன்பட்டாலும், பனைவெல்லத்தைக் கரும்பு வெல்லம் போலவோ, சர்க்கரை போலவோ பயன்படுத்த முடியாது. முன்பெல்லாம் கிராமங்களில் காப்பிக்கு பனைவெல்லத்தைத்தான் பயன்படுத்தினர். கருப்பட்டிக் காப்பி என்றே அதற்குப் பெயர். கரும்பு வெல்லம் போலன்றி கருப்பட்டியில் கசடு இருக்கும்.

    முண்டம் சொல்லுக்கு அறிவில்லாதவன் என்றொரு பொருள் உண்டு. தலையில்லாத உடம்பை மூன்டம் என்றதால் அறிவிலி ஒருவனுக்கு இப்பெயர் வந்திருக்கலாம்.

    *****

    085. பழமொழி: இரிஷி பிண்டம் இராத் தாங்காது.
    பொருள்: கருவாக நேற்று உருவான குழந்தை இன்று பிறந்ததுபோல.

    விளக்கம்: ஒரு ரிஷியானவர் அவர் அன்னை அவரைக் கருத்தரித்த இரவிலிருந்து மறுநாள் விடிவதற்குள் பிறந்துவிடுவாராம்! எதிர்பார்த்தது நடக்கும் என்று தெரிந்தும் அதற்காக அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    086. பழமொழி: எள்ளு என்கிறதுக்குமுன்னே, எண்ணெய் எங்கே என்கிறான்?
    பொருள்: எள்ளைக் கொடுத்தால் உடனே அதில் எண்ணையை எதிர்பார்க்கிறான்.

    விளக்கம்: தேவையில்லாமல் அவசரப்படுபவர்களைக் குறித்துச் சொன்னது. இதே பழமொழி கொஞ்சம் மாறுபட்ட வடிவில், "எள் என்பதற்கு முன்னே எண்ணெயாய் நிற்கிறான்" என்று, குருவை மிஞ்சிய சீடனாக நிற்கும் ஒருவனைக் குறித்து வழங்குகிறது. இத்தகையவன் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்.

    *****

    087. பழமொழி: குளம் உடைந்து போகும்போது முறைவீதமா?
    பொருள்: குளமே உடைந்துவிட்டபோது அதனைச் சீர்திருத்துவது யார் முறை என்று கேட்டானாம்.

    விளக்கம்: ஆபத்துக் காலங்களில் ஒவ்வொருவரும் தன்னால் அதிகபட்சம் முடிந்த அளவு உதவேண்டும் என்பது செய்தி.

    *****

    088. பழமொழி: நாய்க்கு வேலையுமில்லை, நிற்க நேரமுமில்லை.
    பொருள்: எந்த வேலயும் இல்லாமல் ஒரு நாய் அலைவதுபோல, கவைக்குதவாத பொழுதுபோக்கு வேலைகளை வைத்துக்கொண்டு அவன் தான் எப்போதும் ’பிஸி’ என்கிறான்.

    விளக்கம்: "சிலருக்குப் பொழுது போகவில்லை, எனக்கோ பொழுது போதவில்லை" என்று சிலர் சொல்வார்கள். அவர்கள் செய்யும் வேலைகளை பார்த்தால் அவை ஒன்றுக்கும் உதவாத வேலைகளாக இருக்கும்.

    *****

    089. பழமொழி: மூத்திரம் பெய்கிறதுக்குள்ளே முப்பத்தெட்டு குணம்.
    பொருள்: சிறுநீர் கழிக்குபோதுகூட அவனால் பொறுமையாக இருக்கமுடியாது.

    விளக்கம்: "க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம்" என்ற பழமொழியும் இதே போன்றது. இரு பழமொழிகளும் சலன புத்தியுள்ளவர்களைக் குறித்துச் சொன்னவை.

    *****

    090. பழமொழி: ஆகட்டும் போகட்டும், அவரைக்காய் காய்க்கட்டும், தம்பி பிறக்கட்டும், அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும், உன்னைக் கூப்பிடப்போறேனோ?

    பொருள்: தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது.

    விளக்கம்: மறதியையும் தாமதத்தையும் குறித்து வழங்கும் பழமொழி.

    *****
     
  5. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    091. பழமொழி: கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
    பொருள்: கடல் வற்றிவிட்டால் மீன்களைப் பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம்.

    விளக்கம்: ஒரு குளம் வற்றும் தருவாயில் இருந்தபோது அதில் இருந்த மீன்களை ஆசைகாட்டிப் பாறையில் உலர்த்தித் தின்ற கொக்கின் கதை நமக்குத் தெரியும். ’ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருப்பது’ கொக்கின் இயல்பே. ஆயினும் கடலில் மீன் பிடிக்கும்போது கொக்கு அவ்வாறு இருந்தால் என்ன ஆகும்? இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி.

    *****

    092. பழமொழி: நனைத்து சுமக்கிறதா?
    பொருள்: பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம்.

    விளக்கம்: இப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று ஒத்திப்போடுபவனுக்கும் இது பொருந்தும். முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி.

    *****

    093. பழமொழி: பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான்.
    பொருள்: நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம்.

    விளக்கம்: செய்யவேண்டியதை உரிய காலத்தில் செய்யாததன் விளைவைப் பழமொழி சுட்டுகிறது.

    *****

    094. பழமொழி: எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
    பொருள்: வணிகன் தீர ஆலோசனை செய்தே ஒரு காரியத்தில் இறந்குவான். மூடனோ முன்யோசனையின்றிக் காரியத்தில் இறங்கிவிட்டுப் பின் விழிப்பான்.

    விளக்கம்: ’எண்ணுதல்’ என்ற சொல்லில் சிலேடை நோக்குக. செட்டியானவன் பணத்தை எண்ணி மட்டும் கொடுப்பதில்லை; கொடுத்தால் திரும்ப வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான். மட்டி என்கிற மூடனானவன் பணத்தையும் விளைவுகளையும் எண்ணாமல் செயலில் இறங்குவதால் அவதிக்குள்ளாகிறான்.

    *****

    095. பழமொழி: ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான், பலபேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.
    பொருள்: ஒருவனைக் கொன்றவனுக்கு தண்டனை விரைவில் கிடைத்து அவன் மாள்வான். ஆனால் பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்பவனாக இருப்பான்.

    விளக்கம்: ஒருவனைக் கொல்பவன் சுயநல நிமித்தம் அதைச் செய்கிறான். பலரைக் கொல்பவனின் நிமித்தம் (motive) எதுவாக இருந்தாலும் அவனது படைபலம் அவனை அரியணையில் அமர்த்துகிறது. இருப்பினும், அவனது நிமித்தம் பொதுநலத்தைத் தழுவி இராவிட்டாள் காலம் காலனாக மாறி அவன் கணக்கை இயற்கையாகவோ செயற்கையாகவோ முடிக்கும்.

    *****

    096. பழமொழி: துறவிக்கு வேந்தன் துரும்பு.
    பொருள்: துறவி தன் உயிரின் நிலைமையும் யாக்கை நிலையாமையும் நன்கு அறிந்தவர். எனவே ஒரு மன்னனின் ஆணைகள் அவரை ஒன்றும் செய்ய முடியாது.

    விளக்கம்: இந்தப் பழமொழியை நிரூபிக்கும் வகையில் பரமஹம்ஸ யோகானந்தாவின் ’ஒரு யோகியின் சுயசரிதம்’ புத்தகத்தில் ஒரு கதை உள்ளது (அத்தியாயம் 41). அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின்போது அந்த மன்னன் தக்ஷசீலத்தில் முகாமிட்டிருந்தான். அப்போது அவன் தக்ஷசீலத்தில் பெயர்பெற்ற சந்நியாசியான ’டண்டமிஸ்’-ஸை அழத்துவர ஆள் அனுப்பினான். வர மறுத்தால் துறவியின் தலையைச் சீவிக் கொன்றுவிடும்படி ஆணை அந்த தூதுவனுக்கு. ஆனால் அந்த யோகி தான் படுத்திருந்த நிலையிலிருந்து தன் தலையைக் கூட நிமிர்த்தாமல் அந்த தூதுவனுக்கு ஆன்மீக விளக்கம் அளித்து தான் மரணத்துக்குப் பயப்படவில்லை என்றும், மன்னர்கள் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் கூறிவிட, கலவரம் அடந்த தூதுவன் தன் மன்னனிடம் போய் விவரம் கூறினான். ஆச்சரியம் அடைந்த அலெக்ஸாண்டர் தக்ஷசீலத்தில் இருந்த பல பிராமணத் தவசிகளை வரவழைத்துக் கேள்விகள் கேட்டு ஆத்மாவின் உண்மையைப் புரிந்துகொண்டு, கல்யாணா (இவர் பின்னர் கிரேக்கர்களால் காலனாஸ் என்று அழைக்கப்பட்டார்.) என்ற யோகியைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். அவர் ஒரு குறிப்பிட்ட நாளில் பாரசீகத்தில் ஸுசா என்ற நகரில் மாஸிடோனியாவின் அனைத்துப் படைகளுக்கு முன் தன் வயதான உடலை நீத்தார். தனக்கு மிக நெருங்கிய தோழர்களைத் தழுவி விடைபெற்ற அவர், அலெக்ஸாண்டரிடம் அவ்வாறு செய்யாமல், "நான் உன்னை பின்னர் பாபிலோனில் சந்திக்கிறேன்" என்று மாத்திரமே குறிப்பிட்டார். அலெக்ஸாண்டர் மறு வருடமே பாபிலோனில் மரணம் அடைந்தான்.

    *****

    097. பழமொழி: அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி.
    பொருள்: அம்மியில் எவ்வளவு அரைத்து வழித்தாலும் அதன் கல் அப்படியே இருக்கும். அதுபோல நாவிதன் அசிரத்தையாக முடி வெட்டினாலும், குடுமி நிச்சயம் தங்கும் (குடுமியைச் சிரைக்கக்கூடாது என்பது பழைய மரபு).

    விளக்கம்: மற்றவர்களின் உடைமைகளை பற்றிக் கவலைப்படாது கர்வத்துடன் இருக்கும் ஒருவனைக் குறித்துச் சொன்னது.

    *****

    098. பழமொழி: ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் பாட்டில்லை.
    பொருள்: ஏற்றம் இறைப்பவன் பாடும் பாடலை எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் பாடுபர்வகளோ கிடையாது.

    விளக்கம்: ஏற்றக்காரனின் பாட்டு அவன் மனம்போனபடி சிறுசிறு சொற்றொடர்களில் இருக்கும். அதற்கு பதில் அளித்து உடனே பாடுவது முடியாது. உதாரணத்துக்கு ஒரு ஏற்றப்பாட்டு (கம்பர் கேட்டது):

    மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே
    தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே.

    தன் செயலுக்கு விமரிசனங்கள் கூடாது என்று சொல்லுபனுக்கு இந்த பழமொழி உதாரணம் காட்டப்படுகிறது.

    *****

    099. பழமொழி: கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது.
    பொருள்: தன் உரிமையாளன் வளையல் விற்பவனாக இருந்தபோது கழுதை அனுபவித்த வேதனையை, உரிமையாளன் மாறி வண்ணன் ஆனபிறகும் அனுபவித்ததாம்.

    விளக்கம்: இருவருமே கழுதையின் மீது அதிக சுமையேற்றி அதைத் துன்புறுத்துவது சகஜம்.

    *****

    100. பழமொழி: சாலாய் வைத்தாலும் சரி, சட்டியாய் வைத்தாலும் சரி.
    பழமொழி: சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி.
    பழமொழி: வெளுத்து விட்டாலும் சரி, சும்மாவிட்டாலும் சரி.

    பொருள்: மூன்று பழமொழிகளுக்குமே பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள்.

    விளக்கம்: பழமொழிகளின் பொருள் ஒரு கதையில் உள்ளது. அரசன் ஒருவன் தன் நாட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை ஒரு குயவன், ஒரு நாவிதன் மற்றும் ஒரு வண்ணானிடம் ஒப்படைத்தான். இம்முவருமே தாம் செய்யும் தொழிலில் சிறந்தவர்களேயன்றி மற்றபடி படிக்காதவர்கள் என்பது அரசனுக்குத் தெரியும். இவர்கள் இவ்வாறு இருந்தபோது ஒரு நாள் அயோக்கியன் ஒருவன் ஒரு ஏழைக்குடியானவனை நையப் புடைத்துவிட்டான். அடி வாங்கிய குடியானவன் குயவனிடம் சென்று முறையிட்டு, தன் முறையீட்டின் கடைசி வரியாக முதல் பழமொழியைக் கூறினான்.

    குடியானவன் சொல்ல நினைத்தது, "அல்லதை அகற்றி நல்லது செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. உன் உசிதம்போல் செய்." இந்தப் பொருள்பட அவன் குயவனுக்குத் தெரிந்த சொற்களைப் பயன்படுத்திக் கூறினான் (சால் என்றால் பானை). ஏற்கனவே மடையனான அந்தக் குயவன் இவன் தன்னை பரிகாசம் செய்வதாகக் கருதி, குடியானவனை உதைத்து அனுப்பும்படிக் கட்டளையிட்டான். உதை வாங்கிய குடியாவனன் நாவிதனிடம் சென்று முறையிட்டுத் தன் முறையீட்டை நாவிதன் அறிந்த சொற்களால் இரண்டாம் பழமொழியில் உள்ளவாறு முடித்தான். நாவிதன் அதை சொந்த அவமதிப்பாகக் கருத, குடியானவன் மீண்டும் அடி வாங்கினான்.

    கடைசியாக, குடியானவன் தனக்கு நேரிட்ட அநியாயங்களை வண்ணானிடம் சென்று முறையீட்டுத் தன் முறையீட்டை மூன்றாம் பழமொழியைக் கூறி முடித்தான். வண்ணானும் அந்தச் சொற்களால் தன்னைப் பரிகாசம் செய்வதாகக் கருதிவிட, குடியானவன் இப்படி இந்த மூன்று ’அதிகாரிகளிடமும்’ தர்ம அடி வாங்கினான்.

    தன் கல்வியாலோ உழைப்பாலோ அன்றி வேறுவிதமாக திடீர் என்று செல்வமோ, அதிகாரமோ பெற்ற அற்பர்கள் (upstarts) எவ்விதம் நடந்துகொள்வார்கள் என்பதைப் பழமொழிகள் உணர்த்துகின்றன.

    *****
     
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    101. பழமொழி: தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும்.
    பொருள்: தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள்.

    விளக்கம்: ஒரு ஊரின் தலையாய அதிகாரிக்கு மணியக்காரர் என்று பெயர். மணியம் என்பது ஊர், கோயில் முதலியவற்றில் மேல்விசாரணை செய்வதாகும்.

    *****

    102. பழமொழி: ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.
    பொருள்: ஊர் மக்களின் அந்தரங்க அவலங்கள் எல்லாம் வண்ணானுக்குத் தெரிந்துவிடும்.

    விளக்கம்: ஊர் மக்களுடைய துணிகளை வண்ணான் வெளுப்பதால் அந்தத் துணிகளில் உள்ள அழுக்கு, கறை போன்றவற்றின் மூலம் வண்ணான் ஊர் மக்களின் அந்தரங்க வாழ்வில் உள்ள குறைகள் பற்றித் தெரிந்துகொள்கிறான். இன்று இதே நிலையில் நம் வீட்டு வேலைக்காரி இருக்கிறாள்!

    *****

    103. பழமொழி: அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
    பொருள்: அண்ணாமலையாருக்குச் செய்யும் விரிவான பூசையின் 64 உபசாரங்களைத் தரிசனம் செய்வதற்கு பூசாரிக்கு 74 உபசாரங்கள் செய்து அவர் தயவைப் பெற வேண்டும்.

    விளக்கம்: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கவேண்டும் என்று இதுபோன்று இன்னொரு பழமொழி வழக்கில் உள்ளது.

    *****

    104. பழமொழி: அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
    பொருள்: அதிகாரியின் வீட்டில் உள்ள ஒரு சிறு துரும்பும் குடியானவன் போன்ற எளியவர்களை ஆட்டிவைக்கும்.

    விளக்கம்: ஒரு பழமொழியின் வசீகரம் அதில் உள்ள செய்தியை அழுத்தமாக, வியப்பூட்டும் உவம-உருவகங்களைப் பயன்படுத்திச் சொல்வதில் இருக்கிறது. கோழிமுட்டையை அதிகாரி வீட்டு அடிமட்ட வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை கூறியது மெச்சத்தக்கது. ஒரு அதிகாரியின் வேலையாட்கள் தம் யஜமானரின் அதிகாரம் தமக்கே உள்ளதுபோலக் காட்டிக்கொண்டு எளியோரை வதைக்கும் வழக்கம் பழமொழியில் அழகாகச் சுட்டப்படுகிறது.

    *****

    105. பழமொழி: வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை.
    பொருள்: எந்தக் குழந்தையும் தன் ஆசிரியரை எப்போதும் புகழ்ந்து பேசுவதில்லை.

    விளக்கம்: வாத்தியார் பிள்ளையை மெச்சுவது உண்டு. ஆனால் பிள்ளைக்கு வாத்தியார்மேல் எதாவது குறை இருக்கும். அதுபோல எந்த வேலைக்காரனுக்கும் தன் யஜமானர்மேல் குறை இருக்கும்.

    *****

    106. பழமொழி: ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி?
    பொருள்: ஊரில் உள்ள யாசகர்களில் மிகவும் குறைவாக கவனிக்கப்படுகிறவன் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி.

    விளக்கம்: ஊரின் பெரிய, புகழ்பெற்ற கோவில்களின் வாசலில் யாசகத்துக்காகக் காத்திருக்கும் ஆண்டிகளைப்போல் ஊரின் ஒரு மூலையில் உள்ள ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் தங்கியிருக்கும் ஆண்டி கவனிக்கப்படுவானா?

    *****

    107. பழமொழி: ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?
    பொருள்: கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது? (எல்லாக் கல்லையும் திருப்தியுடன் வணங்குவது இலயாத காரியமாக இருக்கும்போது).

    விளக்கம்: எல்லோரும் இந்னாட்டு மன்னர் ஆனால் யார்தான் சேவகம் செய்வது? ஒரு பெரிய குடும்பத்தில் ஆளாளுக்கு அதிகாரம் பண்ணும்போது அந்தக் குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் வேலைக்காரனின் பாடு இவ்வாறு ஆகிவிடும்.

    *****

    108. பழமொழி: ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
    பொருள்: ஒரு சிறிய விஷயத்தைக் கண் காது மூக்கு வைத்துப் பெரிதாக்கி அதையும் ஒரு கதையாக்கிக் கூறுதல்.

    விளக்கம்: ஈர் என்பது பேனின் முட்டையானதால் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளது. ஆனால் பேனுக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை இப்படி இருக்கலாமோ? ஒரு புள்ளி அளவுள்ள ஈர் என்ற பேன் முட்டையானது அது பொரிந்தால் கண் வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது. அந்தப் பேனையும் பெரிதாக்கினாள் (உதாரணமாக ஒரு நுண்நோக்கியால் பார்த்தால்) அது பெருமாளின் அவதாரம் போலத் தோன்றுமோ என்னவோ? வேறு விளக்கம் தெரிந்தவர் கூறலாம்.

    *****

    109. பழமொழி: கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.
    பொருள்: ஒரு இனிய பொருளை மேலும் மேலும் விரும்பி உபயோகிக்கும்போது அது திகட்டிவிடுகிறது.

    விளக்கம்: இது போன்ற பிற பழமொழிகள்:
    பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
    சேரச் சேரச் செடியும் பகை.
    நித்தம் போனால் முற்றம் சலிக்கும்.
    படுக்கப் படுக்கப் பாயும் பகை.

    *****

    110. பழமொழி: வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.
    பொருள்: ஒரு மருத்துவரின் குழந்தையின் உடல்நலக்குறைவு அவ்வளவு எளிதில் குணமாகாது. அதுபோல ஒரு ஆசிரியரின் குழந்தை அவ்வளவு நன்றாகப் படிக்காது.

    விளக்கம்: ஏன் இவ்விதம்? வைத்தியர், வாத்தியார் இருவருமே தம் குழந்தையின் பால் உள்ள பரிவில் விரைவில் குணமாக/முன்னுக்கு வர, வெகுவாக மருந்து/கல்வி ஊட்டுவதால்.

    *****
     
  7. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    111. தமிழில் ’அளவு’ என்ற பொருள்பற்றிச் சில பழமொழிகள் உள்ளன. அவை பெரும்பாலும் தரத்தைவிட அளவையே நாடும் மனிதர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

    பழமொழி: இத்தனை அத்தனையானால் அத்தனை எத்தனையாகும்?
    பொருள்: இப்போது உள்ளது நீ விரும்பும் அளவானால் நீ விரும்பும் அளவு எத்தனை?

    விளக்கம்: இந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு ஆன்மீக வழியில் பொருள்கூறலாம். இத்தனை என்பது விரல் அளவே உள்ள நம் ஆத்மா. அத்தனை என்பது இதுபோலப் பல ஜீவாத்மாக்கள். இது போன்று விரல் அளவேயுள்ள ஜீவாத்மா பரமாத்மா என்றால் பரமாத்மாவின் அளவு எத்தனை இருக்கும் என்று வியப்பதாகக் கொள்ளலாம்.

    இதுபோன்று கீழ்வரும் பழமொழிகளில் முதலாவதுக்கு ஆன்மீக விளக்கம் கூறலாம். மற்றவை மேற்சொன்னவாறு அளவைமட்டுமே விரும்புவோரைக் குறித்தவையே.

    விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்?
    கழுதைப் புட்டை கை நிரம்பினால் போதும்.
    கொசுவு மூத்திரம் குறுணி. [கொசுவு=கொசு, குறுணி=ஒரு மரக்கால் அளவு]
    மலிந்த சரக்கு/பண்டம் கடைத்தெருவுக்கு வரும்.

    *****

    112. அருமை, அதாவது ஒரு பொருள் கிடைபது அரிதாகிவிட்டதைக் குறித்துச் சில பழமொழிகள். இவை தானே விளங்குவன.

    பழமொழிகள்:
    அத்திப் பூ கண்டது/பூத்தது போல.
    அன்னப்பிடி வெல்லப்பிடி ஆச்சுது.
    சோறு வெல்லமாய்ப் போச்சுது.
    உத்தியோகம் குதிரைக் கொம்பாயிருக்கிறது.
    கார்த்திகைப் பிறை கண்டவன் போல.
    காற்றிலே கருப்பிலே கண்டதில்லை/நினைக்கவில்லை.
    பிண்டம் பெருங்காயம் அன்னம் கஸ்தூரி.

    *****

    113. அருமையின்மை, அதாவது ஒரு பொருள் அதிகமாக, எளிதாகக் கிடைப்பது பற்றி:

    பழமொழிகள்:
    அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ? [ஆண்டிச்சி=பிச்சைக்காரி]
    இந்தப் பழமொழி சில துறவிகளின் ’வறுமை’ பற்றி அங்கதமாகச் சொல்லப்படுகிறது.

    உரல் பஞ்சம் அறியுமோ?
    பெரும்பாலும் எல்லா சமையல் பொருள்களும் உரலில் இடிக்கப்/பொடிக்கப் படுகின்றன. வறுமைக் காலத்தில்கூட பொடிக்க எதேனும் இருக்கும்.

    கல்யாணத்திலும் பஞ்சமில்லை, களத்திலும் பஞ்சமில்லை.[களம்=நெற்போர்]
    கொல்லன் தெருவிலே ஊசி விற்கிறதா?
    தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?
    வேடனுக்குத் தேன் பஞ்சமா, மூடனுக்கு அடி பஞ்சமா?

    *****

    114. அனுபவம், அதாவது பட்டறிவு பற்றிச் சில:

    பழமொழிகள்:
    அப்பன் அருமை செத்தால் தெரியும், உப்பின் அருமை உப்பில்லாதேபோனால் தெரியும்.
    காவடிப் பாரம் சுமக்கறவனுக்குத் தெரியும்.
    தலைநோவும்/தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
    நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
    பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு, கெட்டால் தெரியும் கோமுட்டிக்கு.
    பார்த்தால் தெரியுமா, பட்டால் தெரியுமா வருத்தம்?

    *****

    115. பழமொழி: இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்தாற்போல.
    பொருள்: ஒரு குழந்தை பெற்றவள் இரண்டாவது பெறும் வேறு ஒருத்திக்கு மருத்துவம் பார்க்க விரும்பினாளாம்.

    விளக்கம்: இடைச்சன்=இரண்டாம் பிள்ளை, தலைச்சன்=முதல் பிள்ளை.

    *****

    116. பழமொழி: தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
    பொருள்: நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.

    விளக்கம்: ஆசிரியர் கல்வி பயிற்றுவிக்கும்போது நடைமுறை உதாரணங்களையும் உலக அனுபவங்களையும் விளக்கிக் காட்டவேண்டும். அப்படி போதிக்கப்படாத கல்வியை உடலில் சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில் ஏற்றமுடியாது.

    *****

    117. பழமொழி: நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
    பொருள்: கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?

    விளக்கம்: சமீபத்தில் தெரிந்துகொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது.

    *****

    118. பழமொழி: புதிய வண்ணானும் பழைய அம்பட்டனும் தேடு.
    பொருள்: வண்ணான் புதியவனாகவும் நாவிதன் பழகியவனாகவும் இருப்பது நல்லது.

    விளக்கம்: ஏன் இப்படி? வண்ணானனிடம் இருக்கவேண்டியது உடல் வலிமை; அது புதிய, இளம் வண்ணானிடம் அதிகம் இருக்கும். நாவிதனிடம் இருக்கவேண்டியது (நமக்கு ஏற்றபடி முடிவெட்டும்) திறமை; அது பழகியவனுக்கே கைவரும். இதுபோன்ற இன்னொரு பழமொழி:
    வால ஜோசியனும், விருத்த வைத்தியனும் நன்று. (வால=வாலிப, இளம்; விருத்த=வயதான)

    *****

    119. பழமொழி: அப்பியாசம் கூசா வித்தை.
    பொருள்: அனுபவத்தில் விளையும் கல்வியே நம்பிக்கை தரும்.

    விளக்கம்: கூசா என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி கூஜா என்று பொருள் தருகிறது. அப்படியானால் கூசா/கூஜா வித்தை என்பது என்ன? ஆசிரியருக்கு கூஜா தூக்கி அவரைத் தாஜா செய்து அவர் அனுபவங்கள் மூலம் அறிய முயல்வதா? தெரிந்தவர் விளக்கலாம். ’அப்பியாசம் குல விருது’ என்பது இன்னொரு பழமொழி.

    *****

    120. பழமொழி: எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.
    பொருள்: எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது?

    விளக்கம்: அந்நியர் நம்மை ஆண்ட காலத்தில் ஹிந்துக்கள் ஐரோப்பியர்களைக் குறித்துச் சில சமயம் இவ்வாறு கூறி வந்தனர்.

    *****
     
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    121. பழமொழி: பங்காளத்து நாய் சிங்காசனம்மேல் ஏறினது என்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
    பொருள்: வங்காள நாட்டைச் சேர்ந்த நாய் தன் யஜமானனின் சிம்மாசனத்தில் ஏறியதைப் பார்த்த கழுதை, தானும் அதுபோல் செய்ய நினைத்துத் தன் யஜமானனின் வெள்ளாவிப் பானையில் ஏறியதாம்.

    விளக்கம்: வங்காளத்தை ஆண்டவர்கள் நாய் வளர்த்தனர் போலும். தனக்கு ஆகாததைச் செய்து மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது செய்தி.

    *****

    122. பழமொழி: அம்பாத்தூர் வேளாண்மை யானை கட்டத் தாள், வானமுட்டும் போர்; ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.
    பொருள்: ஆம்பத்தூரில் அறுவடைக்குப் பின் மிஞ்சும் நெல் தாள்கள் யானையைக் கட்டும் அளவுக்கு வலிமையாம், நெல் போரோ வானம் முட்டும் உயரமாம். இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்!

    விளக்கம்: பொய் சொன்னது ஏன்? இதுதான் கதை: (வெள்ளையர் ஆட்சியில்?) அம்பத்தூருக்கு வரி வசூல் அதிகாரி வந்தபோது ஊர்த்தலைவர் பழமொழியின் முதல் பாதியைக் கூறினாராம், நல்ல விளச்சல் என்று பொருள்பட. கூடவே அவர் தன் கையை உயர்த்திப் பேசி, விரலில் உள்ள தங்க மோதிரத்தைச் சூசனையாக அதிகாரிக்குக் காட்டினார், வரியைக் குறைத்தால் மோதிரத்தை கையூட்டாகத் தரத் தயார் என்ற சைகையுடன். அதிகாரி மகிழ்ந்து பழமொழியின் இரண்டாவது பாதியைச் சொல்லி அதையே தான் குறித்துக்கொள்வதாகக் கூறினார். அதிகாரிக்குத் தெரியும், தன் கலெக்டருக்குச் சரியான கணக்குக் கட்டுவதைவிட, ஊர் விவசாயிகளைத் திருப்திப்படுத்துவது லாபகரமானது என்று.

    *****

    123. பழமொழி: உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
    பொருள்: உறவினர்களுக்கு உணவிட்டால் வீட்டைச்சுற்றி எறும்புப் புற்றுதான் வளரும். அதுவே ஊரார்குச் சோறிட்டால் அது நமக்கு நல்ல பெயரைத் தரும்.

    விளக்கம்: அன்னதானத்தின் சிறப்பைப் பற்றிச் சொன்னது.

    *****

    124. பழமொழி: வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
    பொருள்: வாழைப்பழங்களை மரியாதை நிமித்தம் வெகுமதியாக வாங்கிக்கொண்டு போன பெண் வாசலில் காத்திருக்க, தன் வாக்கு சாதுரியத்தால் இன்னொரு பெண் உடனே வரவேற்கப்பட்டு வீட்டின் நடுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

    விளக்கம்: முகஸ்துதிக்கு மயங்காதவர் உண்டோ?

    *****

    125. பழமொழி: ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்.
    பொருள்: தற்புகழ்ச்சியின் உச்சி இது.

    விளக்கம்: இதுபோன்ற பிற பழமொழிகள்: ’வானத்தை வில்லாக வளைப்பேன்’, ’மணலைக் கயிறாகத் திரிப்பேன்’.

    *****

    126. பழமொழி: துள்ளாதே துள்ளாதே குள்ளா! பக்கத்தில் பள்ளமடா!
    பொருள்: குள்ளன் அவனுக்குத் தற்புகழ்ச்சி அதிகம், ரொம்பத் துள்ளினால் பள்ளத்தில் விழுவோம் என்று அறியான்.

    விளக்கம்: எப்படிப்பட்ட தற்புகழ்ச்சிக்காரனுக்கும் அவன் சவாலை எதிர்கொள்ள ஒருவன் இருப்பான் என்பது செய்தி.

    *****

    127. பழமொழி: பொரிமாவை மெச்சினான் பொக்கைவாயன்.
    பொருள்: பல்லில்லாதவன் பொரிமாவைச் சாப்பிட்டு ’ஆஹா, இதுபோல் உணவு உண்டோ?’ என்றானாம்.

    விளக்கம்: ஒவ்வொருவரும் அவரால் முடிந்தது மற்ற எதையும்விட உயர்ந்தது என்று மெச்சிப் புகழ்வர்.

    *****

    128. பழமொழி: ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?
    பொருள்: ஆண்டி ஒருவனுக்கு உணவிடும்போது அது அவனுக்காகவா? அல்லது அவன் கையேந்தும் சுரைக் குடுக்கைக்காவா?

    விளக்கம்: கொடுப்பதைப் புகழ்ச்சியை எதிர்பாராமல் கொடுக்கவேண்டும் என்பது செய்தி. உணவை ஆண்டியின் சுரைக் குடுக்கையில்தான் இட்டாலும், அவன் முகத்தைப் பார்த்து அதை அவன் மெச்சுகிறானா என்று எதிர் பார்த்தால் கொடுத்ததன் பலன் கிட்டாது.

    *****

    129. பழமொழி: சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.
    பொருள்: இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும்.

    விளக்கம்: கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:
    பரமசிவன் கழுத்தில் இருந்து
    பாம்பு கேட்டது: கருடா, சௌக்யமா?
    யாரும் இருக்கும் இடம் இருந்துகொண்டால்
    எல்லாம் சௌக்யமே, கருடன் சொன்னது.

    இது போன்ற இன்னொரு பழமொழி: ’வைத்தியன் கோடுத்தால் மருந்து, இல்லாவிட்டால் மண்ணு.’

    *****

    130. டம்பம், ஆடம்பரம், ஜம்பம் குறித்த சில பழமொழிகள் (பொருள், விளக்கம் தேவையில்லை):
    பழமொழிகள்:
    அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
    ஆழாக்கு அரிசி, மூவாழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார்.
    ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.
    கறிக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கவோ?
    குடிக்கிறது கூழ், கொப்புளிக்கிறது பன்னீர்.
    பெருமை ஒரு முறம், புடைத்து எடுத்தால் ஒன்றுமில்லை.

    *****
     
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    131. பழமொழி: எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான்.
    பொருள்: என் கணவனும் நீதி மன்றத்தில் வேலை செய்கிறார்.

    விளக்கம்: இவள் கணவர் கோர்ட்டில் ஒரு பியூனாகவோ குமாஸ்தாவாகவோ இருப்பார். அதைப் பட்டும் பாடாமலும் இவள் ஆடம்பரமாகச் சொல்லிக்கொள்கிறாள். இந்தப் பழமொழி இந்நாளில் சங்கீதக் கச்சேரி செய்யும் ’தேங்காய் மூடி பாடகர்’ குறித்தும் சொல்லப்படுகிறது. [கச்சேரி என்ற சொல்லுக்குத் தமிழில் உத்தியோக சாலை என்று பொருள், அது எந்த உத்தியோகாமானாலும்.]

    *****

    132. பழமொழி: ஜாண் பண்டாரத்துக்கு முழம் விபூதி/தாடி.
    பொருள்: குள்ளப் பண்டாரத்தின் விபூதிப்பட்டை/தாடி அவர் உயரத்தைவிட அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது!

    விளக்கம்: தன் நிலைக்குத் தகாத மரியாதையைகளை எதிர்பார்ப்போர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    133. பழமொழி: மடப் பெருமைதான் நீச்சு தண்ணீருக்கு வழியில்லை.
    பொருள்: மடத்தின் பெருமை பெரியதுதான், ஆனாலும் அங்கு சோறு-தண்ணீர் கிடைக்காது.

    விளக்கம்: நீச்சுத்தண்ணீர் என்பது நீர்+சோறு+தண்ணீர் என்ற சொற்களின் சேர்க்கை. அது நீராகாரத்தைக் குறிக்கும். ’தோப்பு துரவு, நிலம் நீச்சு’ என்று சொல்கிறோம். இங்கு துரவு என்பது மணற்கேணியையும் நீச்சு என்பது நீர் நிறைந்த நெல்வயல்களையும் குறிக்கும்.

    *****

    134. பழமொழி: வீடு வெறும் வீடு, வேலூர் அதிகாரம்.
    பொருள்: வீட்டில் காசுக்கு வழியில்லை, அதிகாரமோ வேலூர் நவாப் போல.

    விளக்கம்: வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க, விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது.

    இதுபோன்று அளவுக்கு மீறிய ஆசைகள் குறித்த வேறு சில பழமொழிகள்:

    "உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்."
    "கிடக்கிறது ஓட்டுத்திண்ணை, கனாக் காண்கிறது மச்சுவீடு."
    "காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கவேண்டும்."
    "ஏழாயிரம் பொன்பெற்ற குதிரை இறப்பைப் பிடுங்கையில், குருட்டுக் குதிரை கோதுமை ரொட்டிக்கு வீங்கினதாம்." [இறப்பு=தாழ்வாரக் கூறையின் இடுக்கு]

    மனிதனின் வறுமை இறைவனையும் தொற்றிக்கொள்கிறது!
    "ஆண்டியே அன்னத்துக்கு அலையச்சே தன் லிங்கம் பால்சோற்றுக்கு அழுகிறது."
    "ஆவுடயாரையும் (நந்தி) லிங்கத்தையும் ஆறு கொண்டுபோக, சுற்றுக்கோவில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுததுபோல."
    "பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறார், அனுமார் தத்தியோன்னம் கேட்கிறார்."

    *****

    135. பழமொழி: பல்லக்குக்கு மேல்மூடி யில்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பில்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.
    பொருள்: கவலையும் வருத்தமும் பணக்காரனுக்கும் உண்டு, ஏழைக்கும் உண்டு.

    விளக்கம்: பணக்காரன் துணியைப் போர்த்தி பல்லக்கை மூடிக்கொள்ளலாம்; செருப்பில்லாத ஏழை என்ன செய்ய முடியும்? அதாவது, பணக்காரன் தன் மெய்வருத்தம் சரிசெய்துகொள்ளலாம். ஏழைக்கு அது முடியாது.

    *****

    136. பழமொழி: காலக்ஷேபத்துக்குக் கூலிக்குக் குத்தினாலும், கமுக்கட்டு வெளியே தெரியப் போகாதாம்.
    பொருள்: வயிற்றுப் பாட்டுக்காக உரலில் நெல் குத்துவது வேலையானாலும், அந்த ஏழைப்பெண் தன் அக்குள் தெரியுமாறு உடுக்கமாட்டாள்.

    விளக்கம்: நெல் குத்தும்போது கைககளைத் தூக்கவேண்டி வரும். இன்றைய கதை வேறு.

    *****

    137. பழமொழி: கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்கவேண்டும்.
    பொருள்: வறுமையானாலும் வெட்கப்படாமல் தன்னிலையில் மானமரியாதையுடன் இருக்கவேண்டும்.

    விளக்கம்: குட்டு என்பதற்கு மானம், மரியாதை என்றொரு பொருள் உண்டு. ’கூழாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கி கட்டு’ என்ற பழமொழியும் இதுபோன்று வறுமையிலும் செயல்களில் மானம் மரியாதை வேண்டும் அறிவுறுத்துகிறது.

    *****

    138. பழமொழி: பசி வந்தால் பத்தும் பறக்கும்.
    பொருள்: பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி வழங்குகிறாது.

    விளக்கம்: பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி. (வேறு விளக்கம் இருந்தால் தெரிவிக்கலாம்).

    *****

    139. பழமொழி: வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு.
    பொருள்: ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும்.

    விளக்கம்: ஒரு ஏழை மற்றொரு ஏழையிடம் யாசித்தபோது, இரண்டாவது ஏழை சொன்னது.

    *****

    140. பழமொழி: உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.
    பொருள்: கஞசம் தரும் விருந்துக்கு இணையானது இல்லை (அங்கதமாகச் சொன்னது).

    விளக்கம்: உலுத்தன் என்றால் உலோபி, கஞ்சன் என்று பொருள். இதுபோன்று இன்னும் சில பழமொழிகள்:
    "எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான்."
    "எட்டி பழுத்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன?"
    "கட்டாணித்தன்மாய்க் கலியாணம் செய்தான்." [கட்டாணி=உலோபி]
    "தானும் இடாள், இட்டவர்களைப் பார்த்தறியாள்."

    "விடாக்கண்டன் கொடாக்கண்டன்" அல்லது "விடாக்கெண்டன், கொடாக்கெண்டன்"
    [கென்டன் என்றால் மிண்டன் என்றால் வலியவன்; கண்டன் என்றால் வீரன்.]

    *****
     
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    141. பழமொழி: ஆனால் அச்சிலே வார், ஆகாவிட்டால் மிடாவிலே வார்.
    பொருள்: சரியாக இருந்தால் அச்சில் கொட்டு, இல்லாவிட்டால் திரும்ப கொதிக்கும் பானையில் கொட்டு.

    விளக்கம்: பொற்கொல்லன் தங்கத்தை உருக்கிப் பரிசோதிக்கும்போது மாசற்று இருந்தால் நகை செய்யும் அச்சில் கொட்டுவான். மாசு இருந்தால் மீண்டும் அதைக் கொதிக்கும் பானையில் கொட்டி உருகவைப்பான். ஏதோ ஒரு வழியில் காரியத்தை முடிப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    142. பழமொழி: இராஜ முகத்துக்கு எலுமிச்சம்பழம்.
    பொருள்: ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல.

    விளக்கம்: மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்சம்பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது, எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக, சிக்கனமாக முடிப்பார்கள் என்பது செய்தி.

    *****

    143. பழமொழி: தண்ணீரில் அடிபிடிக்கிறது.
    பொருள்: தண்ணீரிலும் காலடித் தடங்களைக் கண்டறிவது.

    விளக்கம்: மிகவும் சாமர்த்திய மானவன் என்று அறியப்பட்ட ஒருவனைக் குறித்து அங்கதமாகச் சொன்னது.

    *****

    144. பழமொழி: நீண்டது தச்சன், குறைந்தது கருமான்.
    பொருள்: தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும்.

    விளக்கம்: தச்சன் மரத்தைத் துண்டங்களாக அறுத்து வேலை செய்பவன். கொல்லனோ இருபைக் காய்ச்சி அடித்து நீளமாக்கி வேலை செய்பவன். எல்லோர்க்கும் ஒன்றுபோல் ஆகாது என்பது செய்தி.

    *****

    145. பழமொழி: மழைக்கால இருட்டானாலும், மந்தி கொம்பு இழந்து பாயுமா?
    பொருள்: மழை மூட்டத்தால் இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா?

    விளக்கம்: நீ ஏமாந்து போகலாம் என்றதற்குப் பதிலாக ஒருவன் உரைத்தது.

    *****

    146. பழமொழி: கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.
    பொருள்: சிலம்பம் கற்றவன் தன் ஆட்டத்தில் இடறி விழுந்தால் அதுவும் அவன் ஆட்டக்கலையில் ஒரு வகை என்பான்.

    விளக்கம்: கரடி என்ற சொல்லின் திரிபு கெரடி. கரடி என்றால் சிலம்பம் என்று ஒரு பொருள் உண்டு. வரிசை என்றால் முறை, ஒழுங்கு, வகை என்று பொருள். வல்லவன் ஒருவன் தன் தவறை ஒப்பாதது குறித்துச் சொன்னது.

    *****

    147. பழமொழி: சட்டி சுட்டதும், கை விட்டதும்.
    பொருள்: ஏண்டா அடுப்பில் இருந்த மண் கலையத்தை இறக்கும்போது கீழே போட்டாய் என்றால், சட்டி சுட்டுவிட்டது என்றதுபோல.

    விளக்கம்: ஒரு நொண்டிச் சாக்கைக் குறித்துச் சொன்னது.

    *****

    148. பழமொழி: பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
    பொருள்: இந்தப் பணத்தை எண்ணிச் சொல் என்றதற்கு, எண்ணிப் பார்த்துவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை அதனால் பணத்தைத் திருப்பித்தற இயலாது என்றானாம்.

    விளக்கம்: ஒரு பொதுவான நம்பிக்கையைக் காரணம் காட்டி நொண்டிச் சாக்கு சொன்னது.

    *****

    149. பழமொழி: ரெட்டியாரே ரெட்டியாரே என்றால், கலப்பையை பளிச்சென்று போட்டதுபோல்.
    பொருள்: யாரோ யாரையோ ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இந்த உழவன் கலப்பையைக் கீழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம்.

    விளக்கம்: ரெட்டியார் என்றது தெலுங்கு தேச உழவர்களை. யாரையோ குறித்து ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இவன் தன்னைத்தான் கூப்பிடுவதாகச் சொல்லி, உழுவதை நிறுத்திவிட்டுக் கலப்பையைக் கேழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம். சிரத்தை இல்லாமல் சோம்பேறியாக வேலையில் இருப்பவர்களைக் குறித்துச் சொன்னது.

    *****

    150. பழமொழி: இது சொத்தை, அது புளியங்காய்ப்போல்.
    பொருள்: இது புழு அரித்துச் சொத்தையாக உள்ளது, அதுவோ புளியங்காய் போலப் புளிப்பாக உள்ளது என்று நிராகரித்தது.

    விளக்கம்: எதை எடுத்தாலும் குறை சொல்லுவனைக் குறித்துச் சொன்னது.

    *****
     

Share This Page