பன்னிரு பெரும்பாம்புகளிடையே என்னுடலும் வைக்கப்பட்டிருக்க, திண்ணிய அப்பொழுதில் எனையே அந்நியமாய் பார்த்துக் கொண்டிருக்க வந்தது பல்நிறச் சுவாலையொன்று. சொன்னது என் நாச் சுவையதென! நின்றது மெல்லத் தழலாடி, பின்பு சென்றதெங்கே? அதை அறியேனே! தொடர்ந்தது அடர்மஞ்சள் தீயும்! உன் உறுப்புகள் இயங்கியதென்னாலே ! எனப் பகர்ந்தது அடங்கிப் பின் ஓயும் நேரத்தே எழுந்தது பசியதொன்றே! "உன் வயிற்றில் பசியென இது வரை நான் இருந்தேன்; இன்றென் நிலை மீளுகிறேன்! சிறையிருந்தே உனையடிமையும் கொண்டேன் இனி விடுதலை நம் இருவருக்குமென்பேன்! " என உரைத்தது விலக, அப்போதே புரிந்தது மேலும் சில தழலும் முன்பே எனை நீங்கியதென்பதுவே! இறுதியிலே தயங்கிய படி ஒளிரும் செந்நீலச் சுடரும் முன் வரவே, சொல்! நீ யாரென நான் வினவ, அக்கேள்வியும் சற்றே எதிரொலிக்க அதுவே என் சொல்லும் சிந்தனையும்! என உணர்ந்தேன், பின்னர் காத்திருந்தேன். "உன்னை முன்பும் பற்றிக் கொண்டிருந்தேன்! உன் மீள்வருகைக்குக் காத்திருப்பேன்!" எனச் சொல்லிச் சென்றது. விழி நிறைந்தேன்!
பற்பல சுடரொடு பசியும் ருசியும் நிற்பின்றியங்கி உயிர்ப்புடன் நமையிருத்தும்- காலம் சென்றபின் நெருப்பிடை நீட்டிய நேரத்தும் நம் சிந்தையும் சொற்றிறமும் நீங்காது கனன்றிருக்கும் எனில் மீள மீள வருகை புரிவது நிற்பதேது ? நயமுங்கள் கருவும் கவியுமெனினும், நான் விழைவதச்சுடரும் அணைந்திடவே ! சிந்தனையுதவி--- சும்மாயிரு.. சொல்லற.. (கந்தரநுபூதி- அருணகிரி நாதர்).
நல்ல பின்னூட்டம் பவித்ரா. நன்றி! நான் கொண்ட பொருள் சற்றே மாறுபட்டது - சிந்தனையையும், சொல்லையும் [மொழியையும்] மனித குலத்துக்கே பொதுவென்று கொண்டு, அது மென்மேலும் மெருகேறிக் கொண்டே வருவதெனக் கொள்ளலாம். தனி நபருக்கெனில் இதை ஒரு தீரா ஆசையெனக் கொள்ளலாம். நம் இழை அறுபடாது தொடராதா? எனும் நப்பாசை தான். -rgs