நீ வரக் கூடும் வழிகளில் எல்லாம் என்னிரு விழியும் பதிந்திருக்கும்! உன் பெயரை மட்டும் நாளெல்லாம் என் நா உச்சரித்துக் கொண்டிருக்கும்! நாம் இணைந்திருந்த நாட்கள் எல்லாம் கனவே போல் தோற்றம் கொண்டிருக்க, நான் காத்திருக்கும் இப்பொழுதெல்லாம், நெடுந்தொடர் மலை போல் மிகக் கனக்க, எறும்பு அருகில் ஊர்ந்தால் கூட, செவி கேட்க, உடல் மிகப் பதற, எழும்பி மறையும் இரவி கூட என் சோகம் உணராமல் போக, அரும்பாய் இருந்த மலரெல்லாம், மலர்ந்தே பின்னும் விரைவில் வாட, இரும்பா என்ன உன் நெஞ்சம்? எனும் கேள்வியில், என் பாழ்மனம் மூழ்க, நீ வந்தாய்! அதனை வெகுமுன்பே என் உள்ளம் எனக்குச் சொல்லியது! அனிச்சைச் செயலாய் என் முழு உடலே ஒரு புது இன்பத்தில் துள்ளியது! மொழி அறியும் முன்பே குழந்தையது தன தாயை அறிவதனைப் போலே, விழி காணும் முன்பே என் மனது, உன் நினைவில் பொங்கியது மேலே! காத்திருந்தேன் இந்நாள் வரை நானே, பூமித்தாயின் பெரும்பொறையுடனே! பார்த்திருப்பேன் உன்னை இனிமேலே, என் விழிகள் மூடிடும் வரைதானே!
If there is something that I can write till my last breath, that is this longing feel, madam. Such a lovely feel it is, that I am drenched forever in it. Thanks for your appreciation. -rgs