சிவ வாக்கியம் கலத்தில் வார்த்து வைத்தநீர் கடுத்ததீமுடுக்கினால் கலத்திலே கரந்ததோ கடுத்ததீ குடித்ததோ நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ மனத்தின்மாயை நீக்கிலே மனத்துள்ளே கரந்ததே. விளக்க உரை: வெண்கலப்பானையில் பிடித்து வைத்த நீரை அடுப்பில் வைத்து தீயை அதிகமாக எரியவிட்டால், அப்பானையில் உள்ள நீர் முழுவதும் சுண்டிப்போய் ஆவியாகிவிடும். அப்பணியில் முழுவதும் வைத்த நீர் அதிலேயே கரைந்து மறைந்ததா? கடுமையாக எரியவிட்ட தீ குடித்ததா? அல்லது நிலமாகிய மண்ணில் கரைந்ததா? அணைந்ததும் அடங்கிய ஆகாயத்தை அடைந்ததா? என்பதை சிந்தியுங்கள். அந்த நீர் ஆவியாகி ஆகாயத்தை அடைந்ததுவே உண்மை என்பதைப் புரிந்து கொண்டு நம் மனதினுள்ளே உள்ள மாயையான பாவங்களையும், குற்றங்களையும் நீக்கி அதே மனதை இறைவன் பால் செலுத்தி தியானம் செய்து வந்தால் நம் ஆன்மாவை மனமாகிய ஆகாயத்தில் கரைக்கலாம். எப்படி நீரானது பானையில் தீயால் மறைந்ததோ அது போல தியானத்தீயால் ஆகாயம் ஆளலாம்.