கல்லூரிக் காதல்! கல்லூரி செல்கையிலே அக் காரிகையைக் கண்ணுற்றேன் கண்டவுடன் இனம் புரியாக் கவர்ச்சி வயப்பட்டேன் இதுதான் காதலா? அறியத் தலைப்பட்டேன். அவளின்றி நானில்லை முழு மனதாய் உணர்ந்திட்டேன். பார்த்த நாள் முதலவள் பார்வைக்கு ஏங்கி நின்றேன்; பேருந்தில் பயணித்தால் பக்கத்தில் தான் நின்றேன். கடைக்கண் நோக்குக்காய் காலமெல்லாம் காத்திருந்து (ஓர் நாள்) கண்வீச்சால் தாக்குற்று கதி கலங்கிப் போனேன் நான். பார்வை பட்டவுடன் பெயரறிய முற்பட்டேன்; அவள் புத்தகத்தின் அட்டையில் பெயரைப் படித்து விட்டேன். தினமும் அவள் செல்லும் பேருந்தில் பயணித்தும் தைரியம் வரவில்லை என் தாக்கத்தை எடுத்துரைக்க. ஒருதலைக் காதலிடை உழன்று தவித்திட்டேன். ஒரு முறையாவது பேசத் துடித்தேன் தான். “மன்மத பாணங்கள் என்னைத் துளைத்தெடுக்க மானே! நீ என் மனதைப் புரிந்து கொள்வ தெப்போதோ?” மனதிற்குள் பொறுமினேன்; மாலை வரின் மறுகினேன். மந்திரமாய் அவள் பெயரை மனதார உச்சரித்தேன். என் மனதின் பரிதவிப்பை மன்மதன் நன்கு உணர்ந்தாற்போல் ஏற்றதோர் வாய்ப்பை எளிதாக அனுப்பி வைத்தான். அடைமழையில் சிக்கி அழகி அவள் தவிக்கையில் ஆட்டோவில் என்னை அப் பக்கம் வர வைத்தான். அதன் பிறகென்ன? அடுத்த நாள் பேருந்தில் அவளருகில் அமர விட்டாள். பெயர் சொல்லிக் கூப்பிட்டாள்; புன் முறுவல் மலர விட்டாள்; கதை கதையாய் பேசி கனவுலகில் மிதக்க விட்டாள்; ஆனால் காதல் எனும் சொல்லைக் கடைசி வரைச் சொல்லவில்லை. “கல்மனதோ உன் மனது? காதல் வண்டு துளைத்து உந்தன் உள்மனது கனியாதோ?உருகுகிறேன் உன் இதழ் பருக” இன்னும் எத்தனையோ ஏக்கங்கள் எடுத்துரைக்க இயலாமல் கவிதையாய் வடித்து அவள் கருத்துக்கு சமர்ப்பித்தேன். “கவிதையென்பதே மடை திறந்த வெள்ளமாய் வரும் உள்ளுணர்வின் பாய்ச்சல். உன் படைப்பில் காதல் எனும் பெயரில் காமம் தூக்கி நிற்றல் காண். காமம் உடல் சார்ந்த ஒன்று; வெகு விரைவில் அடங்கிவிடும்; காதல் பொங்கி வருமாயின் காமம் அதில் மூழ்கிவிடும். காதலுக்கு மூப்பில்லை; முதிர்ந்த காதல் அழிவதில்லை. காமத்தை தவிர்த்து நல் காதலுக்கு கவிதை எடு. அத்தகைய கவிதையே உன் உள்ளுணர்வின் வெளிப்பாடு. அதுவே என் காதலிடம் நான் விழையும் பண்பாடு.” எத்தனைச் சுருக்கமாய் எடுத்துரைத்தாள் தன் மனதை அன்று தான் நானறிந்தேன் அவளும் என்னை விரும்பியதை. அன்றிலிருந்து இன்று வரை நான் வரைந்த கவிதைகளில் காதலுக்கு முதலிடம்; காமத்திற்கு இடம் வைக்கவில்லை. கல்லூரிக் காதல் எனில் உடன் படிக்கும் தோழ்மையுடன் காதல் வயப் படுவதே என்றே நாம் உணர்கின்றோம். காதலியின் மனக்கல் கனிந்து ஊறி மலர்ந்த இக் காதலும் கல்லாரி நாள் உதித்த கல்லூறிக் காதலன்றோ? அன்புடன், RRG 08/01/2020