இளையவர் இல்லம் மகன் பவன் கூறியது கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் தைலாம்பாள். "அம்மா நாளைக்கு நானும் வித்யாவும் முதியோர் ஓய்வு இல்லம் பார்க்க போகிறோம்...நீயும் அப்பாவும் வர வேண்டும். காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விடலாம்" என்றான். "ஆமாம் அம்மா..நீங்கள் வந்து பார்த்து பிடித்திருக்கிறது என்று சொன்னால்தான் எனக்கு திருப்தி" என்றாள் மருமகள் வித்யா. "நான் அப்படி என்ன சொல்லி இவளை திட்டினேன்? வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்கிறாள்..கொஞ்சம் கூட மாட வந்து சமையலை கவனித்து கொள் என்று நேற்று சொன்னதுக்காக மகனிடம் சொல்லி எங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க பார்க்கிறாள்... என்னதான் பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்கி துடைக்க, தோய்த்த துணிகளை உலர்த்த என்று வேலை செய்ய ஆட்கள் இருந்தாலும் மற்ற வேலைகள் இல்லையா? காலையில் டிஃபன், மதியம் சாப்பாடு, அவ்வபோது காஃபி என்று வகை வகையாக செய்ய வேண்டும்.. துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு, சோப் லிக்விட் ஊற்றி துவைக்க வேண்டும்..சமயத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் மோட்டார் போட்டு நேரத்துக்கு அதை ஆஃப் செய்ய வேண்டும்...மாலை காய்ந்த துணிகளை எடுத்து வந்து மடித்து வைக்க வேண்டும். பார்க்க சின்ன வேலை போல்தான் தெரியும். ஆனால் இந்த வயதில் அதை செய்வதற்கு எத்தனை சிரமம்? சமையலுக்கு மாமி போட்டுக் கொள்ளலாம் என்று வித்யா கூறினாலும் இவருக்கும் பிள்ளைக்கும் வாய் வக்கணை...நான் சமைத்தால்தான் பிடிக்கும்.. வேலைக்கு செல்லும் போதெல்லாம் வித்யா கூட மாட ஒத்தாசை செய்து விட்டுதான் செல்வாள். இரவு வட இந்திய சமையல் செய்து அசத்துவாள்...சப்பாத்தி, பராத்தா, கோபி சப்ஜி, மஞ்சூரியன், மட்டர் பன்னீர் மசாலா, பாலக் பன்னீர், வடா பாவ் என்று அவள் செய்யும் ஒவ்வொன்றும் தனி ருசி. அப்படி இருந்தவள் இப்போது ஒரு வாரமாக சமையல் கட்டு பக்கம் எட்டி பார்ப்பதில்லை. எனக்கும் வயதாகி விட்டது..முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை..அதான் அவளை கொஞ்சம் ஒத்தாசை பண்ணு என்று சொன்னது தப்பா? அவளுக்கு நான் கேட்டது பிடிக்கவில்லை..அதான் பவனை தூண்டி விட்டு எங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் பார்க்கிறாள்...அவள்தான் சொன்னால் என்றால் இவனுக்கு புத்தி எங்கே போனது?" தைலாம்பாள் தனக்கு தானே புலம்பிக் கொண்டு அவரிடம் ஒரு பாட்டம் சொல்லி அழுதாள். "இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணற? ஒரு வயதுக்கு மேல் நாம் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது..அவர்கள் நமக்கு நல்லதுதான் நினைக்கிறார்கள். வீட்டு வேலையில் இருந்து உனக்கும் விடுதலை... எனக்கும் வாக்கிங் போறது. மற்ற நண்பர்களுடன் பொழுது போக்கு என்று நேரம் போகும்" என்று சொன்ன கணவரை எரிச்சலுடன் பார்த்தாள். காலையில் சொன்னபடி ஆறு மணிக்கே கிளம்பி விட்டார்கள்...தைலாம்பாள் யாரிடமும் பேசாமல் உம்மென்று இருந்தாள். "அம்மா..இப்ப பார்க்க போகிற இல்லம் சகல வசதிகளும் கொண்டது..தனி வீடு... மூணு நேரமும் ருசியான சாப்பாடு... பிரயேர் ஹால்..பஜன்,. சுற்றிலும் மரங்களும் செடிகளும் கொண்ட நடைபயிற்சி சாலை. நமக்கு தேவையான போது நாமே சமைத்து சாப்பிட வசதி.. என்ன காசு கொஞ்சம் அதிகம்தான்.. ஆனால் அப்பாவின் சேமிப்பு இருக்கு..மாதா மாதம் பென்ஷன் வருகிறது..அதைக் கொண்டு சமாளித்து விடலாம்..அது போதவில்லை என்றால் நாங்கள் போட்டு சமாளிக்கலாம். நாங்களும் வாரம் ஒரு முறை வந்து பார்க்க வசதியாக நம் வீட்டிலிருந்து ஒரு மணி தூரத்தில் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே போன வித்யாவை கோபத்துடன் பார்த்தாள். "இவரோட சேமிப்பும், பென்ஷனும் இவளோட கண்ணை உறுத்துது...அதை வெச்சு சமாளிப்பாளாம்..ஏன் இவ கொடுத்தா கொறஞ்சா போய்டுவா" மனதினில் கறுவினாள். ஒரு மணி நேரத்தில் அந்த ஓய்வூதிய இல்லத்தில் வந்து சேர்ந்தார்கள்...வித்யா சொன்ன மாதிரி சகல வசதிகளுடன் இருந்தது..அவர்களுக்கு காலை டிஃபன் அங்கே பரிமாறப்பட்டது...நல்ல ருசி.. "அம்மா இந்த வீடு உங்களுக்கு பிடிச்சிருக்கா?" என்று கேட்ட விதயாவைப் பார்த்து "உம்" என்று முனகினாள்...எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்ன கணவரை கோபத்துடன் பார்த்தாள். "உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சா எங்க அப்பா, அம்மாவுக்கும் கண்டிப்பா பிடிக்கும்" என்று சொன்ன வித்யாவை திகைப்புடன் நோக்கினாள். "என்ன உன்னோட அப்பா அம்மாவுக்கா?" "ஆமாம் அம்மா..அவா திருச்சியில் தனியா இருக்கா..என்னோட அம்மா ஆறு மாசம் முன்னாடி கீழே விழுந்து இப்போ ஓரளவுக்கு சரியா இருக்கா..ஆனா முன்ன மாதிரி வேலை செய்ய முடியல...வெளியிலே வாங்கி சாப்பிடறது ஒத்துக்க மாட்டேங்கறது. நானும் அவர்களுக்கு ஒரே பொண்ணு... என்னாலும் அவர்களை அடிக்கடி போய் பார்த்துக்க முடியல...இங்கே வீடு பார்த்து கொடுத்தாலும் அம்மாவுக்கு வேலை செய்ய முடியாது..அதான் வசதியான இந்த இல்லம் பார்த்து கொண்டு விடலாம் என்ற ஐடியா வந்தது...அப்பாவோட சேமிப்பும், பென்ஷனும் போதும்..இனிமே யாருக்கு சேமிச்சு வைக்கணும்...வயசான உங்களுக்கு பிடிச்சா அவாளுக்கும் பிடிக்கும் அதான் உங்களை கூட்டிக் கொண்டு வந்து காமிச்சேன்..நீங்கள் நல்லா இருக்கு என்று சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...அடுத்த வாரமே அவர்களை இங்கே கூட்டிக் கொண்டு வரணும்" என்று சந்தோஷமாக பேசிய வித்யாவைப் பார்த்து மனதினில் வெட்கப்பட்டாள். காரில் திரும்பி வரும் போது வித்யா மிகுந்த சோர்வுடன் வாந்தி எடுத்துக் கொண்டே வந்தாள்... "என்னம்மா சாப்பிட்டது ஒத்துக்கலயா" என்று பரிவுடன் கேட்டாள் தைலாம்பாள் "இல்லம்மா ஒரு வாரமா இப்படித்தான் இருக்கு" "என்னது ஒரு வாரமா? நாளு தள்ளி போயிருக்கா?" வித்யா சற்று யோசனை செய்து விட்டு "ஆமாம்மா...நான் ஏதோ பித்த வாந்தியா இருக்கும் என்று நினைச்சேன்"என்றாள் வெட்கத்துடன். "ஓ. அதான் இவளால் எனக்கு சமையலில் உதவி செய்ய முடியல...தங்கமான குணத்துடன் இருக்கும் இவளை எப்படி என்னால் தப்பாக நினைக்க முடிந்தது? கண்ணால் காண்பதும் பொய்..காதால் கேட்பதும் பொய்" என்பது இதுதானோ என்று தன் மேலே கோபம் கொண்டாள். "உனக்கு என்ன என்ன பிடிக்கும் சொல்லு.. நான் வகை வகையாக செய்து தரேன்.. இப்ப சாப்பிட்டால்தான்... குழந்தை பிறந்தவுடன் சாப்பிட முடியாது" என்று சொன்ன தைலாம்பாளை ஆசையுடனும் கட்டிக் கொண்டாள் வித்யா.. படித்ததில் பிடித்தது.