தலை வலி, தாத்தாவிற்கு துணை, டியூடரிங் என்று எந்த சாக்கையும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அதுஅதற்கு ஒரு பதில் வைத்திருந்தான். போக வில்லை என்றால் அத்தை வருத்தப்படுவார்கள் என்று அவன் அவ்வளவு சொன்ன பிறகு அவளால் மென்மேலும் மறுக்க முடியவில்லை. நேரே சுகிர்தன் வாங்கிய இடத்திற்கு தான் அழைத்துச்சென்றான். 2 கிரவுண்ட் நிலம். அங்கே சுகிர்தன் மட்டும் யாரோ ஒரு ஆளுடன் மும்முரமாக நிலத்தைக் காட்டி என்னவோ பேசிக் கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்தவுடன் கையாட்டினான். ஐயோ..இங்கே சுகிர்தனோடு இவளை தனியே விட்டு நளந்தன் தன் 'கமிட்மென்ட்'டை பார்க்க சென்றுவிடுவானே.. சுகுனம்மாவையும் காணவில்லை என்று மிதுனா கலக்கமுற்றாள். ஆனால் அதற்கு அவசியமே இல்லாதது போல நளந்தன் அங்கிருந்து நகரவில்லை! அங்கே பேசிக் கொண்டிருந்தவர் சுகிர்தனின் சொந்தக்காரர் தானாம். அவர்கள் வீடு அருகில் இருப்பதால் ரிஜிஸ்டிரேஷன் முடிந்ததும் மதியமே நிலத்தை ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டிற்கு சுகுனம்மாவும் சுகிர்தனும் சென்றனராம். ரொம்ப நாள் கழித்து சந்திப்பதால் பேச நிறைய இருக்கிறதென்று வீட்டுப் பெண்கள் அங்கேயே தங்கிக் கொள்ள, சுகிர்தனும் அந்த மனிதர் மட்டுமாக பைக்கில் அங்கு வந்தனராம். சற்று நேரம் நிலம், சுற்றி செல்லும் ரோடு, அதன் அகலம், வரி என பலவும் பேசிவிட்டு, "சரி விஜய், நீ எங்கோ செல்ல வேண்டும் என்றாயே.. நீ போவதானால் போ. நான் இவளை பாலண்ணா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்." என்றான் சுகிர்தன். அந்த 'பாலண்ணாவும்', "ஆமாம்.. ஒரு அரை மணியில் எங்க வீட்டுக்கு போய்விடலாம். பக்கம் தான். சுகா, பெரியம்மா ஒத்துக் கொண்டார்கள். இன்று இரவு டின்னர் எங்க வீட்டில் தான்.காலையில் அந்த தரகர் வீட்டிற்கு நானே உன்னை கொண்டு விடுகிறேன்" என்றார். "நீங்கள் பைக்கில் போங்க பாலண்ணா. நான் ஒரு ஆட்டோவில் மிதுனாவோடு வருகிறேன்" சுகிர்தன் சொல்ல சொல்ல மிதுனா இந்த இக்கட்டை தவிர்க்க வழியின்றி தவித்தாள். அறியாதவர் தெரியாதவர் வீட்டிற்கெல்லாம் அவள் எதற்கு? அவனுக்குதான் அவர் சொந்தக்காரர். அவர்கள் வீட்டில் விருந்து சாப்பிட்டு.. அதன் பின்னும் இவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தால்.. இரவும் அங்கேயே தங்குவது போல தெரிகிறது.. அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இப்போது அவர்களோடு வரவில்லை என்று சொன்னால்..அவள் திரும்பி செல்வது எப்படி? நளந்தனும் எங்கோ செல்வான் போலிருந்தது.. சுகிர்தனிடம் வண்டி இல்லை. ஆட்டோவில் தான் செல்லவேண்டும். தனியே அவள் செல்ல சுகிர்தன் ஒத்துக் கொள்வானா? சுகிர்தன் தன் கூட வந்தாலும் சங்கடம் தான். அவனுக்கும் அலைச்சல். தவிப்போடு நளந்தனைப் பார்த்தாள். அவளை ஒரு பார்வை பார்த்த நளந்தன், "அங்கே தாத்தா இவளைத் தேடுவாரடா , சுகி. அங்கே வீட்டில் இவள் இல்லை என்றால் அவருக்கு ஏமாற்றமாக இருக்கும். அத்தையிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். நீ மட்டும் இவரோடு போ. பத்ரியிடம் கொடுக்கவேண்டிய ஒரு டாகுமென்ட் காப்பியை வேறு வீட்டிலேயே மறந்து விட்டு விட்டேன். எப்படியும் வீட்டிற்கு திரும்பி செல்லவேண்டும். அப்படியே இவளையும் வீட்டில் விட்டு விடுகிறேன்" என்று சொல்லி மிதுனாவின் நெஞ்சில் பாலை வார்த்தான். சம்பிரதாயத்திற்காக மேலும் ஒரு முறை வற்புறுத்திய அந்த பாலண்ணா அவர்களிருவரும் தயங்க, "சரி உங்க வசதிப்படி செய்யுங்க" என்று விட்டுக் கொடுத்தார். வீட்டுக்காரரே மேற்கொண்டு வற்புறுத்தாத போது, அதற்குமேல் அவர் வீட்டிற்கு சுகிர்தன் எப்படி வரிந்து கட்டிக் கொண்டு வரவேற்பான்? மிதுனாவோடு நேரம் கழிக்க முடியாதது ஏமாற்றமே என்றாலும் அவனும் சரி என்று ஒத்துக் கொண்டான்.