முல்லையாற்றின் முகப்பு தட்டி பெரியாத்துத் தண்ணி ஓடி வர, தண்ணீர் அள்ளி தலையில் தெளிக்க சனம் அத்தனையும் கூடி வர, வீட்டுக்காரி தங்கவடம் சுப்பாஞ்செட்டி அடகுக்கடை சேர, சீரகச்சம்பா விதைநெல்லும், பத்துமூடை உரமும் தள்ளி வீதி வழி நான் செல்ல, பொங்கலிட்டு,படையலிட்டு முதல்நாற்றை வயலில் நட, பூரித்து தான் நின்றேனே 'விவசாயி' என்ற இறுமாப்பில். தென்மேற்குப்பருவக்காற்றின் தாலாட்டு தலை தடவ, களை எடுத்து நாத்துநட்ட எம்பெண்கள் பாட்டுக் கேட்க, செழித்து வளர்ந்து சிரித்து நின்ற நெற்கதிர்கள் வயல் நிறைக்க, அறுவடை செய்தநாளில் நான் களைத்துத்தான்போனேனே. 'அப்பா' என்றுஅழைத்த மகள் கலைத்தது என் கனவை அல்ல. இன்னும் 'நான்விவசாயி' என்று எண்ணிக் கொள்ளும் நினைப்பையும் தான். - சுபாஷினிமகேஷ்
ஒருமுறை விவசாயி, கடைசி வரையிலும் விவசாயி தான். நேர்மையான, யதார்த்தமான,நெஞ்சைத் தொடும் வரிகள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது வழக்கு . நீருக்குத் திண்டாடுவதிலிருந்து, சோறிடும் சேற்றிடங்கள் கட்டிடங்களாக மாறத் தொடங்கியதிலிருந்து, இன்று உழுபவர்களைக் கணக்கெடுத்தால் வருங்காலத்திற்கு உணவுப் பண்டமே எஞ்சாது எனும் நிலைமை. சுழன்றும் ஏர் பின்னதாயிருந்த உலகம் இப்போது ஏராளனை ஏளனம் செய்யும் இடமாகிவிட்டதெப்படி ?
உங்கள் கவிதை அப்படியே பெரியாற்று பாசன நிலங்களையும் அதை செம்மைபடுத்தி விவசாயம் செய்யும் விவசாயியின் உழைப்பையும் கண் முன்னே நிறுத்தியது .வயல்வெளிகள் எல்லாம் வீடுகளாக மாறியதைக் கண்டு கண்ணீர் வடிப்பவர்களில் நானும் உண்டு .முதல் கவிதை முத்தான கவிதை .மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படை விவசாயம் என்பதை எடுத்து காட்டும் கவிதை மிக நன்று