உன் விரல் என் தலை வருடுகையில், உன் விழி என் முகம் நோக்குகையில், உன் மொழி என் காதினைத் தீண்டுகையில், உன் செயலைப் பிறர் விதந்தோதுகையில் நான் அடைந்த இன்பம் ஒன்றே தான். அதற்கீடாய் வேறெதும் வாராது. இதை சொல்லிக் கொண்டே இருப்பேன் நான். அதில் எனக்கொரு தயக்கமும் கிடையாது. நீ இங்கிருந்த உன் சிறுபொழுதும், விரைவில் வளர்ந்த அப்பொன் பொழுதும், உன் குரல் கேட்ட அப்பெருநாளும், மீண்டும் வருமா என மனமேங்கும். எங்கோ ஒரு மூலையில் நீ இருக்க, இங்கே கொடும் தனிமையில் நான் வாட, "எங்கும் நடப்பது தான்!" எனப் பிறரும் சொல்வார்; செல்வார்; என் விழி கசியும். என் பகல்கள் அனைத்தும் ஒன்றாக முடிந்தனவோ, அதனால் தான் இரவும் இன்னும் நீள்கிறதோ? அறியேனே! நீ வரத் தொலையும் இத்தனியிருளே!