சரியாக காலை மணி ஐந்து . முனுசாமி பசு மாட்டைக் கொண்டுவந்து போர்டிகோவில் இருந்த ஒரு கம்பத்தில் கட்டினான் . “சாமி ! முனுசாமி வந்திருக்கேன்”, என்று குரல் கொடுத்தான் வீட்டின் உள்ளே இருந்து ஒரு பெரியவர் நிதானமாக நடந்து வந்தார். முனுசாமி உயரமான இரண்டு பால் குவளைகளை அவருக்கு முன்னே கொண்டு வந்து கவிழ்த்துக் காண்பித்தான். “பார்த்துக்கொள்ளுங்கள் சாமி” என்றான். “அது சரி அங்கே என்ன மூன்றாவதாக ஒரு உயரமான பாத்திரம் வைத்திருக்கிறாயே, அதைக் கொண்டுவந்து காண்பி”, என்றார். முனுசாமி தயங்கித் தயங்கி அதனை எடுத்து வந்தது காண்பித்தான். “இதிலே இருக்கும் தண்ணீர் மாட்டின் மடியை சுத்தம் செய்வதற்காக சாமி”, என்றான் முனுசாமி. சொன்னபடியே அந்த குவளையை எடுத்துக் கொண்டு போய் தண்ணீரைத் தெளித்து மாட்டின் மடியை சுத்தம் செய்துவிட்டு பால் கறக்க ஆரம்பித்தான். “சொய்ங் , சொய்ங் “, என்று பால் கறக்கும் சப்தம் கேட்டது பெரியவர் இரும ஆரம்பித்தார் . அவர் தலையில் பச்சை கலர் மஃப்ளர் கட்டி இருந்தார் ; ஒரு கம்பளியைப் போர்த்திக் கொண்டும் இருந்தார். அதைஅப்போதுதான் முனுசாமி கவனித்தான். “என்ன சாமி உடம்பு சரியில்லையா ?”, என்று கேட்டான் “ஆமாம்பா , ஒரே ஜுரம் . நாளைக்கு காலையில் என்னால் இங்கே வர முடியாது . எனக்கு பதிலாக என் பேரன் வந்து உட்கார்ந்து கொள்வான்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பத்தாம் வகுப்பு படிப்பது போல் இருந்த ஒரு பையன் உள்ளே இருந்து வந்தான். அவன் கையில் செல்போன் ஒன்று இருந்தது . அதிலிருந்து பாட்டு சத்தம் மெலிதாக வந்து கொண்டிருந்தது. அவன் அதை உற்று நோக்கியவாறு அதன் மீது விரலை அசைத்து அசைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான் . பெரியவர் “ முனுசாமி , இதோ இவன் தான் என்னுடைய பேரன்; என் பெரிய பெண்ணுடைய பையன். ரொம்பவும் புத்திசாலிப் பையன். அவன் வகுப்பிலேயே அவன் தான் முதல் ரேங்க்” என்றார் பெரியவர். முனுசாமி பால் கறந்து கொண்டே “தம்பி,உங்க பேர் என்ன தம்பி?” என்று கேட்டான் . அதற்கு அந்தப் பையன் கண்ணை போனை விட்டு எடுக்காமலேயே , “ஹரி” என்று பதில் சொன்னான் . அப்பொழுது பெரியவர்,” அவன் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறான் ; ரொம்ப நன்றாக விளையாடுவான் ; அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகத்தில் இருக்கிற எல்லா நாடுகளிலிருந்தும் இவன் கூட விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவன் ஒரு குரூப்புக்கு லீடர் தெரியுமா?” என்று ரொம்ப பெருமையாக முனுசாமியிடம் சொன்னார். அதற்குள் அந்தப் பையன் “தாத்தா நான் இன்னும் ஒரு கேம் விளையாடுவதற்குள் எனக்கு “மெகாநைட் கிடைத்துவிடும்” என்று மிகுந்த உற்சாகத்துடன் சொன்னான், ஆனால் அவர் முகத்தைப்பார்த்து பேசவே இல்லை,அவன் கவனம், பார்வை, விரல்கள் எல்லாம் அந்த செல்போனிலேயே பதிந்து இருந்தன. இதுதானோ விவேகானந்தர் சொன்ன concentration ? ஆனால் அவர் attachment and detachment இரண்டையும் அல்லவோ பயிற்சி செய்யச் சொன்னார் ? முனுசாமி பாலைக் கறந்து கொடுத்துவிட்டு,” தம்பி, என்ன படிக்கிறாய் ?”என்று கேட்டான் . அதற்கு ஹரி,” பிளஸ் 2” என்று சொன்னான், ஆனால் முனுசாமியின் முகத்தைப் பார்க்கவே இல்லை. தாத்தா தான் முனுசாமியிடம் “அவன் பனிரெண்டாம் கிளாஸ் படிக்கிறான்”, என்று சொன்னார். பையன் ரொம்ப ஜரூராக மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருந்தான் . முனுசாமி ஹரியை கொஞ்சம் உற்றுப் பார்த்துவிட்டு, கறந்து வைத்திருந்த பால் மொத்தத்தையும் எடுத்து, அஞ்சு லிட்டர் அளந்து பெரியவர் வைத்திருந்த பாத்திரங்களில் ஊற்றினான் . “நான் வரேன் சாமி, நான் வரேன் தம்பி”, என்று கூறி விடை பெற்றுக் கொண்டு பால் குவளைகளை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு மாட்டை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டான். -------------------------------------------------- தாத்தா பேரனிடம் வந்தார். “ ஹரி, நாளைக்கு காலையில் முனுசாமி அஞ்சு அுநவவ் ஞ்சே காலுக்கு வந்து விடுவான் . அவனிடம் நீ குவளையை கவிழ்த்துக் காண்பிக்கச் சொல்ல வேண்டும். அதிலே தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு தண்ணீர் கலக்காத சுத்தமான பசும் பால் கிடைக்கும். அதற்காக நான் லிட்டருக்கு 10 ரூபாய் கூடத்தருகிறேன் “, என்று சொன்னார். “சரி தாத்தா, நான் பார்த்து கொள்கிறேன்”, என்றான் பேரன். கவனத்தை மொபைலிலிருந்து திருப்பாமலேயே . ------------------------------------------------------ மறுநாள் காலை 5 மணி. தாத்தாவுக்கு ஜுரம் விட்டபாடில்லை. முனுசாமி மாட்டை கொண்டுவந்து போர்டிகோவில் உள்ள கம்பத்தில் கட்டினான். இன்னும் விடிந்த பாடில்லை. இருட்டாகத்தான் இருந்தது. போர்டிகோவில் ஒரு 15 வாட்ஸ் பல்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. ஹரி உள்ளே இருந்து செல்போனுடன் வந்து போர்ட்டிகோவில் படியில் உட்கார்ந்து கொண்டான். முக்கால் இருட்டாகத்தான் இருந்தது. எதுவும் சரியாக, தெளிவாக தெரியவில்லை. வரும்போதே முனுசாமி இரண்டு பால் குவளைகளை மாட்டிற்கு மறுபுறம் இருந்த பெஞ்ச்சில் வைத்து விட்டான். இன்னும் இரண்டு பால் குவளைகளை கொண்டு வந்து ஹரியிடம் காண்பித்து “பார்த்துக்கொள் தம்பி “ என்று அவைகளை கவிழ்த்துக் காண்பித்தான். ச்இ “ஆஹா, கேம் முடிந்தது”, என்று செல்போனில் இருந்து சற்றே தன் கவனத்தை வெளியே திருப்பினான் ஹரி. “தண்ணி இல்லை, ஓகே! “,என்று ஹரி சர்டிபிகேட் கொடுத்த உடன் முனுசாமி “அப்போ நான் பால் கறக்கலாமா?”, என்று கேட்டான். “சரி சரி”, என்று தலையை ஆட்டிய ஹரி மறுபடியும் செல்போனுக்குள் மூழ்கிப் போனான். முனுசாமி பால் கறக்க ஆரம்பித்தான் ஆனால் வழக்கம் போல கேட்கும் “சொய்ங்,சொய்ங்”, என்ற சத்தமே இல்லை. ஹரி ஒரு ஐந்தே ஐந்து வினாடிகள் தன்னுடைய கவனத்தை செல்போனில் இருந்து வெளியே திருப்பினான். அதற்கு மேல் விட்டால் எதிரி வந்து அவனுடைய மூன்று டாப்பையும் ( crown ) கழற்றிக்கொண்டு போய்விட வாய்ப்புண்டு. பிறகு Mega Knight ஐ தற்காலிகமாக மறந்து விட வேண்டியதுதான் . அந்த 5 வினாடிகளில் முனுசாமியை கவனித்தான் . முனுசாமி மாட்டிற்கு இந்தப் பக்கம் உட்கார்ந்து கொண்டு இரண்டு தொடைகளுக்கு இடையே குவளையை வைத்திருப்பது ஒரு 15 அடி தூரத்தில் இருந்து தெரிந்தது. இருட்டு வேறு. “ சரி, சரி, அங்கிள் பால் கறந்து கொண்டிருக்கிறார், ஓகே.” உடனே ஹரி தன் கவனத்தை செல்போனுக்குள் செலுத்த ஆரம்பித்தான். ( இதற்குத்தான் மனதை உள்முகமாகத் திருப்புவது என்று பெயரோ ? அந்தர் தியானமோ ? ஹரி சுவாமிஜி, சாஷ்டாங்கம்! ) முனுசாமி பத்து நிமிடத்திற்குள் பாலைக் கறந்து கொண்டு வந்து விட்டான். ( மாட்டிற்கு அந்தப் பக்கம் இருந்த பெஞ்ச்சில் என்ன வேலை?) ஹரி செல்போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். தாத்தா கொடுத்திருந்த பாத்திரங்களில் பாலை வாங்கிக் கொண்டான். “நான் வருகிறேன் தம்பி”, என்று சொல்லிவிட்டு முனுசாமி மாட்டை கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க ஆரம்பித்தான். ஹரி பால் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல ஆரம்பித்தான். முனுசாமி நான்கு பால் குவளைகளைக் கையில் எடுத்துக்கொண்டு , மாட்டை ஓட்டிக்கொண்டு காம்பௌண்டுக்கு வெளியே சென்றான். காம்பௌண்ட் கதவுகளை மூடித் தாளிட்டான். அங்கே ஒரு ஒற்றை மாட்டு வண்டி இருந்தது. பால் குவளைகளை வண்டியில் வைத்து விட்டு காளை மாட்டை வண்டியில் பூட்டி வீட்டுக்கு கிளம்பலானான்.
semma. எனக்கு கதை ரொம்ப பிடிச்சுருக்கு. கடைசியா ஒரு காளை வெச்சு ஏமாத்தினது நல்ல கற்பனை. நீங்க சொன்ன மாதிரி செல்போன் ஒரு மாயசூழல் தான்.
@Rith @periamma தங்களுடைய பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது இரு பக்கமும் கூரான வாளாக இருக்கிறது ; அதனால் நன்மைகளும் உண்டு , தீமைகளும் உண்டு. தொலைக்காட்சி முன் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டு இருக்கும் பெண்மணி நிசப்தமாக கண்ணீர் விடுவதை நானே பார்த்திருக்கிறேன். அவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கும் தொலைக்காட்சி பெட்டிக்கும் இடையே பையனோ பெண்ணோ குறுக்கே போக மாட்டார்கள் ; போனால் முதுகு சிவந்து விடும் என்பது அனுபவ பூர்வமாக அந்தப் பையனுக்கும் பெண்ணுக்கும் தெரியும். ஒரு கதாபாத்திரம் சொல்லப்போகும்,” ஆம்” அல்லது “இல்லை” என்ற ஒற்றை வார்த்தையில் அவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் வாசற் கதவு தட்டப் பட்டால் அதை அவர் சட்டை செய்யவே மாட்டார் அல்லது பயங்கரமான கோபம் வரும். வந்திருப்பது யாராக இருந்தாலும் சரி, ஒருவேளை சொந்தக்காரர்கள் யாரேனும், கணவனும் மனைவியுமாக வெற்றிலை,பாக்கு, அழைப்பிதழ் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கல்யாணத்துக்கு அழைப்பதற்காக் கூட வந்திருக்கலாம், அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. “ ஆமானா, இல்லையா” அது ஒன்றே குறி. News கேட்பதற்கு அனுமதி இல்லை. இது பற்றி எல்லோரும் நிறைய சொல்லிவிட்டார்கள் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. அடுத்தபடியாக செல்போன். மாய மந்திரக் கதைகளில்,” இந்த குளத்தில் மூழ்கி எழுந்தால் உன் வீட்டில் இருப்பாய்,” என்று வரும். செல்போனில் மூழ்கினால் எங்கேயும் எழுந்து இருப்பதாக தோன்றவில்லை. நம்முடைய முகத்தைப் பார்க்காமலேயே பேசிப்பேசி ஒரு நாளைக்கு முகம் மறந்து போய்,” நீ யார்?” என்று கேட்பார்கள் போலத் தோன்றுகிறது. பெரியம்மா சொன்னது போல இது ஒரு அசுரன்தான். தினப்படி வேலையே நின்று போய்விடுகிறது. வேண்டி விரும்பி ஒரு மாயச் சுழலில் விழுந்து விடுகிறோம். சுற்றுப்புறத்தையே மறந்து விடுகிறோம்.அவசரமான அவசியமான வேலைகளும் நினைவில் இருப்பதில்லை. “உலகமே ஒரு நாடக மேடை, நாம் எல்லோரும் நடிகர்கள்”, என்று கூறுவார்கள். “கடவுள் தான் நம்மை ஆட்டிப் படைக்கிறார்”, என்பர். டெலஸ்கோப்பில் குழலுக்குள் குழலாக இருப்பது போல இப்போது உலகத்திலேயே ஒரு மாய உலகம் நம்முடைய மனதில் உருவாகி விட்டது அல்லது உருவாக்கிவிட்டார்கள். இதெல்லாம் ஏன் தான் கண்டுபிடித்தார்களோ, இன்னும் என்னென்ன கண்டுபிடிக்க போகிறார்களோ? நல்லபடியாகவே நன்மைக்கு மட்டும்கையாண்டு, ஒரு வரைமுறைகளுடன் இருந்தால் நன்மையே எனத் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு டிவி ஒரு மணி நேரம் மட்டுமே அல்லது இரண்டு சீரியல்கள் மட்டுமே என்று இருக்கலாம். அதேபோல செல்போன் அவசியமாகப் பேசுவதற்கு, சுருக்கமாக பேசுவதற்கு மட்டுமே. பொழுது போக்கு என்றால் அரை மணி நேரம் மட்டுமே. இப்படி அவரவர்க்கு ஏற்றார் போல வரையறுத்துக்கொண்டு கண்டிப்புடன் கடைபிடித்தால் நன்மையே என்று தோன்றுகிறது. முகத்துக்கு முகம் பார்த்து கண்ணுக்குக் கண் பார்த்து பேச வேண்டும். காதில் இருக்கும் இயர்போனை கழற்றி வைத்துவிட்டு காது கொடுத்து கேட்டுக் கொள்ள வேண்டும். முகம் புன்னகையுடன் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம் செல்போன் பார்க்க வேண்டும் என்றால், காலையிலும் மாலையிலும் அரைமணி நேரமாவது தியானம் செய்ய வேண்டும். “நடக்கிற விஷயமாகச் சொல்லுங்கள்”, என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது. உண்மைதான். நானும் விதிவிலக்கல்ல என்று தான் தோன்றுகிறது. இரண்டு பேர்களாவது படித்தீர்களே என்று எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதற்காக மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்! K.Suji.