மான் வாழ்க்கை வாழ்கின்ற உலகம்! கானலை மெய் என்றேக் கொள்ளும் ! தான் மட்டும் வாழ்ந்திட எண்ணும் ! ஆன வரையில் ஆணவம் துள்ளும் ! உள்ளம் அதில் துணிவெதும் இல்லை ! முள் சூழ்ந்த மலரிடம் மயங்கித் தள்ளாடும் பொன் வண்டைப் போல, கள்ளத்தை நம்பிக் காலத்தைத் தள்ளும் ! நிழலென் றோரிடம் தேர்ந்து கொள்ளும் ! சுழலென்று உணராது பாய்ந்திடும் வெள்ளம் ! உழல் வாழ்க்கை இனிதென்று சொல்லும் ! தழலிட்ட மலராகத் தன்னையேக் கொல்லும் ! பாதையிது பயணம் இது என்றேப், பொதுவாக வகைப் படுத்திக் கொள்ளும் ! அது இருந்தாலும் தன்வழி தடுமாறும் ! மதிமயங்கி நிதமும் நிலை மாறும் ! கூட்டத்தில் ஒன்றாக இலக்கின்றி மேயும் ! நாட்டம் பலவற்றில் தடம்புரண்டு சாயும் ! தீட்டிய அம்புடன் வேடனைக் கண்டால் , ஓட்டம் பிடித் தொளியப் பாயும் ! மானுக்குச் சொன்னதெல்லாம் மனதுக்கும் உண்டு ! வீணாக மதிமயங்கும் மனிதர்கள் இயல்பு ! கானகத் தனிமைக்குள் தன்னையே இழந்துத் துணை தேடும் பிணையாக வாழ்வு ! ஓரிடமும் நிலையின்றித் தள்ளாடும் மானாகப், போராடும் துணிவின்றி அலைகின்ற மனதோடு, தீராத ஆசைகளில் திகட்டாமல் திளைப்பதிலே, சோர்கின்ற வரையினிலே வாழ்நாளும் வீணாமே ! பொய்மான் பின்னோடு போகின்றோம் என்ற மெய்யுணராது வாழ்வோம் பலர் இங்கு ! உய்யும் வழியதனை உணர்ந்தாலும் கொள்ளோமே ! மாயைக்குள் உழலுவதே உயர்வென்று சொல்வோமே ! எல்லோர்க்கும் ஏதோவோர் மான் தேடல் ! நல்லார்க்கும் விதி வசத்தால் உண்டாமே ! அல்லார்க்கும் பொய்மானில் மதி செல்லும் ! வல்லார்கள் சிலரே தாம் வெல்வார்கள் ! மான் மயக்கம் தீர்ந்திட்டால் மாண்புறலாம் ! தேனமுதம் நிலையாக நாம் பெறலாம் ! மான் வாழ்க்கை குற்றமில்லை என்றாலும் மான் போன்றே வாழ்ந்தழிதல் மடமையன்றோ ? Regards, Pavithra
நல்ல கவிதை! மான் வாழ்க்கை என்னவென்று தெரியாது! ஆனால் மான்களை நிறைய கண்டதுண்டு! அதிலும் தண்ணீருக்காக கொட்டும் பனியிலும் உரைந்த ஏரியிலும் திரிந்து நெடுஞ்சாலையில் வண்டியில் சிக்கி உயிரிழந்ததை பார்த்தபோதெல்லாம் மனம் கனக்கும் !
நிலை கொள்ளாமல் தவிக்கும்படியான , சஞ்சலமான சுபாவமுடைய மான் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும், இரை தேடியோ அல்லது இரையாகவோ . கண்ணில் தெரியும் கானல் நீரை நம்பி ஏமாறும். கூட்டத்திலேயே இருந்து தனித்துவம் இழக்கும். இலக்கின்றி பயந்து ஓடும். காயப்படக்கூடிய உள்ளத்தோடு எப்போதும் அஞ்சியே இருக்கும். நிலை கொள்ளாமல் உழலும். நிதம் போகும் தடமென்றாலும், திசை தெரியாமல் திணறும். தன்னைப் பிறர் நேசிப்பதை விரும்பும், நெருங்கி வந்தாலோ நம்பாமல் மிரளும். மாற்றத்தை விரும்பாது ஒரே போல வாழும். இருக்குமிடம் இல்லாமல் போனால் ஒரே நொடியில் அதை உதறும், வேறிடத்தில் தனைப் பொருத்திக் கொள்ளும். எப்போதும் சுக வாழ்வே விரும்பும். ஆபத்தை அழகாலே அழைக்கும் .அந்த ஆபத்தை முன்கூட்டி உணரும். இருந்தாலும்,போராடத் தெரியாமல் வீணில் உயிர் துறக்கும்.
மனித மனமும் மான் போன்றே. ஏதோவொன்றைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும். ஆசைகளில் அலைப்புறும். ஆசையே அழிவுக்கு கொண்டு செல்கிறது என்பதை உணர்ந்தும், புறந்தள்ளும். விளக்கிடை விட்டிலாய் வாழ்வை இழக்கும். நிலையின்றி நினைவுகளில் உழலும். தன்னைத் தானே உயர்வாய் உணரும், தன்னைப் பிறர் மதிக்க விரும்பும். உண்மை நேசம் நெருங்கி வந்தால் பதறிப் புறந்தள்ளும். சுகமாக இருப்பதையே விரும்பும். தன அச்சங்களைத் துணிவோடு எதிர் கொள்ளாமல் பதுங்கும். அறிவற்று அடிபட்டு நோகும். அப்படியேத் தொடர்ந்திருந்தால், அறியாமையோடே சாகும். இக்கருத்தைத் தான் உள்ளிட்டேன். நன்றி, நண்பரே ! நன்றி , தோழி ![/QUOTE]
அந்த நிலையில் இருக்கும் நம்மைக் கண்டு அந்தப் பெருங்கருணைப் பெருந்தகையும் வாடுவதை இல்லையென எப்படிக் கொள்வது ?
@periamma பெரியம்மா, என் எண்ணத்தைப் பதிவிட்டேன். உங்கள் பின்னூட்டத்தைப் பரிசளிப்பீர்களா ? @vaidehi71, விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி !
பவித்ரா என் மனம் இலவம்பஞ்சு போல் மாறி விட்டது .அடிபட்டு அடிபட்டு இது தான் வாழ்க்கை என்று தெரிந்த பின் மான் மனம் மாறி விட்டது .நடப்பது நடக்கட்டும் நாராயணன் செயல் என்று வாழ்க்கையை நடத்தி செல்கிறேன் .
வருந்தாதீர்கள் பெரியம்மா, பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பது மனித இயல்பு. பிரச்சனைகளைக் கொடுக்கும் போதே அதற்கான தீர்வுகளையும் காட்டித் தருவது, இறை மாண்பு. இறைவனிடம் சரணடைந்துவிட்ட உங்கள் மனம் இலவம் பஞ்சாய் மாறியதில் வியப்பென்ன ? நீங்கள் கொடுத்து வைத்தவர், பெரியம்மா ! கேட்டதும் கொடுக்கும் கிருஷ்ணனைப் போல நான் விழைந்ததும் பின்னூட்டம் அளித்த உங்கள் பெருந்தன்மையான குணத்திற்கு நன்றிகள் பல.