தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் நன்னாளாம், பழையன கழிந்து புதியன புகு மின்னாளில் - புத்தாடை உடுத்தி, புதுப் பானை மெருகேற்றி, புது அரிசி அதிலிட்டு, பாலில் பொங்க விட்டு ஆடியில் விதை விதைத்து, நடவு செய்து, களை எடுத்து, நேரத்தே நீர்பாய்ச்சி நேர்த்தியான உரமிட்டு நெல்மணியை கண்மணியாய் நேரமெல்லாம் காத்து வந்த உழவர் நிலை சிறக்கட்டும், (அவர்) ஊதியம் பெருகட்டும், மும்மாரி பொழியட்டும், முப்போகம் நிலைக்கட்டும், பயிர்வளர்ச்சி பெருகி பஞ்சம் பறந்தோடட்டும், காவேரித்தாய் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடட்டும், கழனியெல்லாம் நிறையட்டும், கதிர் முற்றி தொங்கட்டும் குறைவின்றி விளையட்டும் குதிர்கள் நிறைந்து வழியட்டும் வேளாண்மை பெருகி வேலையின்மை ஒழியட்டும் தொழில் துறையில் முன்னேற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும் பெண்களுக்கு தீங்கிழைப்போர் ‘பொசுக்’ கென்றே போகட்டும், (நம்) பண்பாடு சிறப்புற்று பாரெல்லாம் பரவட்டும் வளமை குடியேறட்டும், வறுமை வெளியேறட்டும், தடைகள் தெறிக்கட்டும், தடங்கல்கள் விலகட்டும் கிளர்ச்சியும் கலவரமும் காணாமல் போகட்டும் அமைதி நிலவட்டும், ஆனந்தம் பெருகட்டும், நோய்கள் நொடிக்கட்டும், நுண் கலைகள் சிறக்கட்டும், விஞ்ஞானம் வளரட்டும், விழிப்புணர்ச்சி ஓங்கட்டும், நல்லாட்சி நிலைக்கட்டும், (உலக) நாடெல்லாம் போற்றட்டும், சுற்றமும் உற்றமும் சேர்ந்து மகிழட்டும் ஒற்றுமை ஓங்கட்டும், ஒவ்வாமை மறையட்டும் புத்துணர்ச்சி தோன்றட்டும் புது வாழ்வு மலரட்டும் (மன) சாந்தி நிலைக்கட்டும், சஞ்சலங்கள் மறையட்டும் இல்லங்கள் செழிக்கட்டும், இன்பம் நிலைக்கட்டும் (இந்நாட்டில்) இல்லை எனும் சொல்லே இல்லாமல் போகட்டும், அத்தனையும் மனத்தெண்ணி, ஆதவனை தொழுதேத்தி ஆனந்த குரலெடுப்போம் ‘பொங்கலோ பொங்கலென்றே‘. ‘பொங்கலோ பொங்கல்’ என்றே குலவியிட்டு கூப்பிடுவோம் பொங்கும் பொங்கலென மகிழ்ச்சியும் பொங்கிடவே! நண்பர்கள் அனைவர்க்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!! அன்புடன், RRG 14/01/2019