ஊரில் மிக பிரசித்தம் பெற்றது அந்த பள்ளிக்கூடம் .இங்கு படித்தவர்கள் மிக பெரிய பதவியில் இருக்கிறார்கள் .பெரிய தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் .இன்றைய பதிவு அந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பற்றியது .ரவி எப்போதும் முதல் மூன்று ராங்குகளில் வருவான் .நன்கு படிப்பான் .எதிலும் தான் மட்டுமே முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பான் .அது நல்ல எண்ணம் என்று சொல்லலாம் .அதே சமயம் வகுப்பில் சுமாராக மதிப்பெண்கள் வாங்குபவரை மிக இகழ்ச்சியாக பார்ப்பான் .இது மற்ற மாணவர்களுக்கு பிடிக்காது .ஆனாலும் அவனிடம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் .சங்கர் என்ற மற்றொரு மாணவனும் நன்கு படிப்பான் .சில சமயங்களில் முதல் ராங் வாங்குவான் .அது ரவிக்கு பிடிக்காது .சங்கரிடம் சென்று உன் பரீட்சை நோட் குடு நான் பார்க்க வேண்டும் என்று கேட்பான் .ஒவ்வொரு பதிலையும் பார்ப்பான் .அதற்கு எவ்வளவு மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறது என்றும் நோட்டம் இடுவான் .மற்ற மாணவர்களின் பரீட்சை தாளையும் வாங்கி பார்ப்பான் . மிகப் பெரிய தவறு அல்லவா .அவன் வகுப்பு ஆசிரியரிடம் மற்ற மாணவர்கள் புகார் சொன்னார்கள் .அவர் ரவியிடம் இதமாக பேசி அவன் செய்வது சரி அல்ல என்று கூறினார் .ஆனாலும் அவன் திருந்தவில்லை .அதே போல் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும் கேலி செய்வான் .அப்போது குமார் என்னும் மாணவன் ரவியிடம் "நீ நூறு மார்க் வாங்கி உயர் வகுப்புக்கு செல்கிறாய் .குறைந்த மார்க் வாங்கினாலும் நானும் தேர்ச்சி பெற்று உயர் வகுப்புக்கு உன் கூடவே வருகிறேன் .ஆதலால் உனக்கும் எனக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை என்று நேரடியாக சொல்லி விட்டான் .ரவி முகம் கறுத்து பேச்சு இழந்து நின்றான் . இது போலவே உலகத்தில் நிறைய மனிதர்கள் உள்ளார்கள் .இவர்கள் எப்போதும் முதல் நிலையிலேயே நிலைக்க வேண்டும் என்று நினைப்பார்கள் .அவர்கள் முன்னால் வேறொருவன் பாரட்டப்பட்டால் இவர்களால் தாங்கி கொள்ள முடியாது .ஆண்டவன் அனைவருக்கும் சமமாகவே அறிவு கொடுத்து இருக்கிறான் .சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு சிலர் கல்வியில் முதலாக வர முடியாது .ஆனால் வேறொரு துறையில் முன்னணியில் இருப்பார்கள் .அதனால் பிறரை எள்ளி நகையாட கூடாது .எந்த நேரம் என்ன நேரும் என்பது நமக்கு தெரியாது .அனைவருடனும் அனுசரித்து செல்வது மிக சிறந்த பண்பு ஆகும் .
நீங்கள் கூறியது மிகவும் சரியே . ஒவ்வொரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. ஒருவர் நன்றாக படுவார், ஒருவர் கணிதத்தில் திறமைசாலியாக இருப்பார், ஒருவர் அழகாக வண்ணம் தீட்டுவார். நாம் எதை செய்தாலும் அதை திறமையாக செய்யவேண்டும் என்று முனைவதில் தவறு இல்லை. ஆனால் அந்த போட்டி நம்முடன் தான் இருக்க வேண்டும். மற்றவருடன் இருக்க கூடாது. மற்றவரை சிறுமை படுத்தும் எண்ணத்திலும் இருக்க கூடாது . அப்படி செய்யும் எந்த செயலும் முழுமை காணாது.