1. சடசடவென்று மழை பெய்தாலோ அல்லது பலத்த வேகத்தில் காற்று வீசும்போதோ நட்சத்திரா தன் தலையை சாய்த்துக்கொண்டும் உதடுகளை குவித்துக்கொண்டும் ஏதேதோ செய்தபடியே இருக்கிறாள். மூளை வளர்ச்சியற்ற குழந்தைக்கான எவ்வித அறிகுறியும் இல்லாமலிருந்தும் அவளை சுற்றிய உலகம் அருகில் வர எத்தனிக்கவில்லை. இன்று, வகுப்பு முடிந்தவுடன் ஓடிச்சென்று ஜன்னலோரம் விழுந்திருந்த அணில்குட்டியை எடுத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பிக்கிறாள். மெதுவாய் மிக மெதுவாய் அவளுக்கு தேவதையின் சிறகுகள் முளைக்கத்துவங்கியதை அணில் தவிர வேறெவரும் கவனிக்கவேயில்லை. 2. மின்னல்கள் நர்த்தனமிடும் கண்களை பெற்றிருக்கிறாள் நட்சத்திரா. அம்மா என்றழைக்கும் போதும் உறக்கத்திலிருந்து விழிக்கும் அதிகாலையிலும் அவளது கண்களில் மின்னல்களின் நர்த்தனம் நடந்தேறும். பட்டுப்பாவாடையுடன் கோவில் திருவிழாவிற்கு செல்லும் வழியில் கால்தடுக்கி கீழே விழுந்தபோது மின்னல்களை தொலைத்துவிட்டாள். அழுதுகொண்டே எழுந்து நடந்தவள், மிட்டாய் கிடைத்து அழுகை நின்றவுடன் தொலைந்த மின்னல்கள் ஓடோடி வந்து, கண்சிமிட்டும் நட்சத்திரங்களை பரிசளித்து அவளுடன் சிரித்தன.