நட்சத்திரங்கள் அற்றதோர் இரவில், நிலவும், நானும் தனியிருந்தோம். ஒரு சொல்லேனும் பேசா நிலையில் இருவரும் எரிந்து கொண்டேயிருந்தோம். மௌனம் மலையென முட்ட, என்னுள் ஒரு கேவல் வெடித்துக் கிளம்பியது. பயந்ததோ அறியேன், மேகத்திரைக்குள் நிலவும் விரைந்தே பதுங்கியது. பொய்யைச் சொன்ன குழந்தை போல அதுவும் அன்று தோன்றியது. அழுகை நின்று, நான் சற்றே மீள அதுவும் திரையை மீறியது. எப்போதும் இயற்கையின் பகுதியில் ஒன்று நமக்குத் துணை என இருக்கிறது. எப்போதும் எட்டாத் தொலைவில் நின்று நமை எளிதில் கடந்தே உறைகிறது.