பொம்மைப் பெட்டியைத் திறந்து விடுகிறேன். பிடித்த இனிப்புகள் கை நிறையத் தருகிறேன். பட்டு! செல்லம்! எனக் கொஞ்சி மகிழ்கிறேன். உனைக் கீழிறக்காது தூக்கிக் கொள்கிறேன். சாளரத்தின் வழி இரயிலைப் பார்க்கிறோம். உன் முகம் மலர்வதைத் தனியே இரசிக்கிறேன். இருவரும் பந்தை உதைத்து மகிழ்கிறோம். நேரம் பறப்பதை உணர்ந்து தவிக்கிறேன். மெல்ல உன்னை இறக்கி விடுகிறேன். ஓசையின்றி உடை மாற்றிக் கொள்கிறேன். உன் அன்னை உன் கவனத்தைத் திருப்ப, நானும் விரைவாய் உணவை முடிக்க, உன் நினைவில் ஏதோ பொறி தட்டுகிறது. என் திசை நீ விரைவதனைக் காண்கிறேன். நீ நினைப்பது எனக்கு நன்கு தெரிகிறது. இருந்தும் கல்லாய் மாறிப் போகிறேன்! பூ மலர்வதையும், கூம்புவதையும், உன்னில் தினமும் காண்கின்றேன். என் கண்களும் நீரால் நிறைவதையும், நீ பார்க்கா வண்ணம் மறைக்கின்றேன். இனி உன் சிரிப்பை நாளை தான் காண்பேன் என்பதை உணர்கின்றேன். தயங்கித் தயங்கி நானும் தான் ஒருவழியாய் பணிக்குச் செல்கின்றேன். -ஸ்ரீ
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் காலம் நகரும் போது சிரிப்புக்கும் அழுகைக்கும் நேரம் குறைகிறது! நன்று ஸ்ரீ