அம்புடைக் காமனை அங்கணில் எரித்த, அம்பலவாணனை நெஞ்சில் நேர் இருத்த, வெம்பிடும் மனதிற்குக் கிட்டும் மருந்து ! தெம்புற தேவனை அள்ளி அருந்து ! சடையடைப் பட்டந்த கங்கை விடுத்துத், தடையின்றி மாந்தர்க்குக் கிட்டக் கொடுத்த, விடையேறு நாயகன் விடமுண்ட கண்டன் ! இடையூறு நீக்கிடும் திருநீற்று ஆண்டன் ! தண்ணொளிர் நிலவது தாங்கிய முடியும், மண்ணுளோர் உய்யவே தூக்கிய அடியும், வெண்பனிக் கயிலையன் காட்டிடு அருளாம் ! எண்குணன் அவனை உணர்த்திடு பொருளாம் ! நாகத்தை அணியெனத் தாங்கிடும் நேசன் ! தேகத்தில் தோலுடைப் போர்த்திடும் ஈசன் ! லோகத்தின் மாயையைப் போக்கிடும் மாற்று ! மோகத்தை வென்றிடும் ஞானத்தின் ஊற்று ! இடப்பாகம் மங்கைக்கு ஈந்தானைப் பாடி மடமூடந்தனை மாற்றும் அரனோடு ஆடி, தடமாறும் நிலைநீங்கி நேர்ப்பாதை மாறு ! நடமாடும் தலைவோனும் தருவானே பேறு ! அன்பெனும் பிடியுள் அகப்படும் சிவமாம் ! துன்பமும் துயரமும் போக்கிடும் தவமாம் ! இன்பங்கள் வழங்கிடும் இறைவனின் பாதம் ! என்றென்றும் ஒலித்திடும் உடுக்கையின் நாதம் ! Regards, Pavithra
உங்கள் கவிதையில் உடுக்கையின் நாதம் ஓங்கி ஒலிக்கக் கண்டேன் .உங்கள் கவிதைக்கு பின்னூட்டம் கொடுக்க மிகவும் சிரமம் ..அவ்வளவு அருமையான கவிதைகள்
நன்றி பெரியம்மா ! பெரியம்மா உங்களது பிரியத்தை வெளிப்படுத்தும் சொற்களுக்கு எனக்குத் தகுதியில்லை. உங்கள் அன்பும் ஆசியுமே நான் என்றும் விரும்புவது. ஸுபாஷிணி, GG- புரிதலுக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி !
ஆம் லக்ஷ்மி, உங்கள் கூற்று சரியே ! அன்பின் வழியது உயிர்நிலை, அந்த அன்பே உயர்நிலைக்கும் வழியாகும் ! பின்னூட்டத்திற்கு நன்றி !