24) ஆண்டாள் பாடல் (தங்களது கோரிக்கையை ஏற்றுக் கண்விழித்து எழுந்து வந்த நடையழகைக் கண்டு கண்ணனுக்குத் திருப்பல்லாண்டு வாழ்த்து பாடுதல்) அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். பாசுரப் பொருளுரை "அரக்க வேந்தன் மகாபலியின் கீழ் இந்த உலகங்கள் அனைத்தும் அடிமைப் பட்டிருந்தபோது, வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி மண் இரந்துப் பெற்று, திரிவிக்கிரமனாய் வளர்ந்து,வானத்தைக் கிழித்து , உன் திருவடிகளால் உலகங்களை அளந்தவனே ! உன் திருவடிகள் வாழியே ! சீதா தேவியை மீட்பதற்காக,தென் இலங்கைக்கு வானரப் படையுதவியுடன் சென்று, இராவணனையும் அசுரர்கள் கூட்டத்தையும் அழித்தவனே ! உன் வலிமையும், திறமையும் வாழியே ! வண்டிச் சக்கர உருவில் மறைந்து வந்த சகடாசுரனை காலால் உதைத்து அழித்தவனே ! உன் கீர்த்தி வாழியே ! கன்றின் உருவெடுத்து வந்த வத்சாசுரனை உண்டிவில்லாக்கி அங்கே , விளாங்கனி மர வடிவில் நின்ற கபித்தாசுரன் மீது வீசியெறிந்து, அவ்விரு அரக்கர்களையும் ஒரு சேர மாய்த்தவனே ! உன் திருவடிக் கழல்கள் வாழியே !பகைவர்களை எதிர்கொண்டு வெல்லுகின்ற உன் கையில் ஏந்தியிருக்கும் வேலினைப் போற்றுகின்றோம் ! இப்படிப் பற்பல நற்குணங்களும், ஆற்றலும் கொண்ட உன்னைப் போற்றிப் புகழ்ந்து , உன்னடிக்கீழ் பணி செய்யவே விரும்பி, நீயளிக்கும் பறையைப் பெறுவோம் ! இவ்வளவு நாட்களாக உன்னிடம் வர இயலாமல் இன்று வந்தோம் !அதைப்பற்றிக் கோபம் கொள்ளாமல் எங்கள் மேல் கருணை கொண்டு அருள்வாய் !" பாசுரக் குறிப்பு சென்ற பாசுரத்தில் ஆண்டாள் கேட்டுக் கொண்ட படியே இந்தப் பாசுரத்தில் கண்ணன் நடந்து வருகிறான், அருள் செய்வதற்கு. ஆயினும் அவனை நடக்க வைத்து விட்டோமென்று ஆண்டாளுக்குத் துன்பம் வந்துவிடுகின்றது. ஆகையால் அவனது திருவடிகளுக்கு போற்றி பாடி இப்பாசுரத்தைத் துவங்குகிறாள். கலியுகத்தில் இருப்பதையே மறந்துவிட்ட ஆண்டாள், திரேதா யுகத்திலும் துவாபர யுகத்திலும் நடந்த செய்திகளைப் பாடி அன்றும் இன்றும் என்றென்றும் என்று முக்காலத்தையும் ஒரு பாசுரத்தில் அடக்கி விட்டாள். முந்தைய பாசுரத்தில் ந்ருஸிம்ம அவதாரம் குறிப்பிடப்பட்டது. இப்பாசுரத்தில் அவதாரபஞ்சகத்தின் விபவ அவதாரங்களான வாமன,இராம,கிருஷ்ணாவதாரங்கள் குறிக்கப்படுகின்றன. பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புதல்வியல்லவா ? அவளும் கண்ணனுக்குப் பல்லாண்டு பாடி வாழ்த்துவதாக இப்பாசுரத்தை அமைத்திருக்கிறாள் ஆண்டாள். கண்ணனை எழுப்பி நப்பின்னைப் பிராட்டியோடு சிம்மாசனத்தில் அமர்த்தியபின், போற்றிப் பாடி தாங்கள் நோற்கும் நோன்பிற்குத் தேவையான பறையை வேண்டுகிறாள்.திருப்பாவை ஓதும் வைணவ நெறிப்படி,இறைவனது திருவடி மற்றும் திருக்கரங்களின் பெருமையைப் பாடும் இப்பாசுரத்தை அதன் உயர்ச்சியைக் கொண்டு இருமுறை ஓதுகிறார்கள். இப்பாசுர வரிகளுக்கு வேறொரு பார்வையில்,குருபரம்பரையின் பெருமை கூறும்படியான விளக்கம்- உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வைணவ நெறியைப் பரப்புதல், அந்நெறியை எதிர்ப்போரை அவரது இடத்திற்கே சென்று வாதிட்டு வெல்லுதல், ஏமாற்றும் நாத்திகர்களை முறியடித்தல்,தம்மை வெறுத்து அவமரியாதை செய்பவரைப் பொறுத்தல், தமது நெறியைக் காப்பதற்காகத் த்ரிதண்டம் என்னும் வேலை ஏந்தி தவ வாழ்வில் இருத்தல் - இவையெல்லாம் ஒரு நல்ல ஆச்சார்யரின் இயல்புகள். அதைப் போற்றிப் பணிவது இறையடியார் கடமை என்று கருத்து.
பதார்த்தம்- சொற்பொருள் முன்னொரு காலத்தில் இந்திரனார் இழந்திட்ட மண்ணைத் திருப்புதற்கு வாமனனாய் வந்துதித்து, மூன்றடியிரந்து ஈரடியால் ஈரே ழுலகங்களும் நன்றாய் அளந்திட்டாய் -மூன்றாம் அடியாலே, மன்னன் மாவலிக்குமருள் செய்தாய் -திருவடிகள் தன்னைப் போற்றுகின்றோம் வாழிய வாழியவே ! மண்மகளாய்த் தோன்றிய பெண்ணந்த சீதையினைத் தன்னுடையள் ஆக்கிவிடப் பெருந்தவறு புரிந்திட்டத் தென்னிலங்கை அரக்கனவன் செருக்கு அழிந்திடவே, விண்ணுளார், மண்ணுளார் போற்றிப் பணிந்திடவே, முன்னின்று போரிட்டு வென்றவுன் திறமையினை, நன்றாகப் பாடுகின்றோம், வாழிய வாழியவே ! உன்னைக் கொல்வதற்குக் கஞ்சனவன் ஏவிவிட்ட வண்டியுரு கொண்ட சகடாசுரன் அவனைச் சின்னஞ் சிறுகாலால் உதைத்தே அழித்திட்டக் கண்ணாவுன் பெருமையினைப் போற்றித் துதித்தே, நன்றாய்ப் பாடுகின்றோம் , வாழிய வாழியவே ! இன்னும் உனையழிக்கக் கஞ்சன் அனுப்பியவன் கன்றினுரு கொண்டவனாம் வத்ஸாசுரன் அவனை, மண்ணில் காலூன்றிக் கையால் சுழற்றடித்து உண்டிவில்லாய் எறிகையிலே ஆமரமாய் அவ்விடத்தே நின்றிருந்த இன்னுமோர் அரக்கன் கபித்தாசுரனும் சென்றழிந்து விழுமாப்போல் செய்தவுன் கழல்கள் நன்றாய்ப் பாடுகின்றோம், வாழிய வாழியவே ! விண்ணோர் தலைவனுக்கெடுத்த விழா தடுத்துக், குன்று கோவர்தனத்தைப் பணியச் சொல்கையிலே, தன்னை இழித்ததனால் கோவலரைச் சினந்தே மின்னலிடியோடு மாமழையோர் ஏழு தினம் விண்ணைப் பிளந்தவனும் பொழியச் செய்கையிலே, குன்றைக் குடையாக விரலேற்றிக் காப்பாற்றி, இன்னல் இழைத்திட்ட இந்திரனைப் பொறுத்திட்டக் கண்ணா உந்தன் கருணையினைப் பணிந்தேத்தி நன்றாய்ப் போற்றுகின்றோம், வாழிய வாழியவே ! கன்றினங் கவர்கின்ற பகைவரைப் போரிட்டு, வென்றுயெமைக் காக்கும் உன் கைவேலினையே நன்றாய்ப் பாடுகின்றோம் ,வாழிய வாழியவே ! இன்றைக்கு மென்றைக்குமுன் பணியே செய்ய எண்ணி நீயருளும் பறையினைப் பெறவென்றே, இன்றே வந்துனைப் பணிகின்றோம் எம்மீது நன்றாயுன் கருணைப் பொழிந்து அருள்வாயே ! அன்று உலகம் அளந்தாய் அடிபோற்றி- வாமன அவதாரப் பெருமை, ஈரேழு உலகங்கள் என்று வேதம் உரைப்பது : (மேலிருந்து கீழாக நடுவில் மண்ணுலகம்- பு ) சத்ய ,தப ,ஜன,மஹ ,சுவ புவ ,பு ,அதள ,விதள ,சுதள தளாதள,மஹாதள ,பாதாள உலகங்கள். மகாபலியிடம் மூன்றடி மண் கேட்ட த்ரிவிக்ரமனை, ஆண்டாள் மூன்று பாசுர அடிகளில் போற்றிப் பாடியுள்ளாள். வேதம் ஓதுகையில் சாந்தி சாந்தி,சாந்தி : என்று சொல்கிறார்களல்லவா ? அது போன்றே எந்த ஒரு நல்லதையும் மூன்று முறை செய்வது மரபு. அதன் படியே ஆண்டாள் செயல்பட்டிருக்கிறாள்.இறைவனுடைய திருவடிகளைத் தான் முதலில் பற்ற வேண்டும். அவையே நம்மை அவனிடம் சேர்ப்பவை. ஆகவே முதல் போற்றி திருவடிக்கே ! தன்னுடைய செல்வநிலையைத் திரும்பப்பெற, இழந்ததை மீண்டும் அடைய, தேவர் தலைவன் இந்திரன், இறைவனையே தன்னுடைய இடத்தை விட்டு இறங்கி வரச் செய்து, தன்னிலையிலும் இருந்து சிறிய உருவெடுக்கும் படிச் செய்ததோடு அல்லாமல், தனக்காக மாபலிச் சக்கரவர்த்தியிடம் தானம் பெறும் வகையில் கையேந்தும் படியாகவும் செய்தான். அதை எண்ணி எண்ணி ஆண்டாள் மாய்ந்து போகிறாள். அன்று இந்திரனுக்காக உலகமெல்லாம் அளந்து திருவடி நொந்தாற் போலவே, இன்று ஆயர்குலச் சிறுமிகளுக்காக இறைவன் எழுந்து நடந்து வந்ததைக் கண்டு ஆண்டாள் மருகுகிறாள் ! சென்று தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி - இராமாவதாரப் பெருமை. இராவணனை,அவனது இருப்பிடமான இலங்கைக்கே சென்று வென்றதால், ராமனின் திறல் (வலிமை/திறமை) போற்றப்பட்டது. பாரத தேசத்திலிருந்து பாதம் நோக நடந்தே சென்று கடலைக் கடந்து இலங்கைக்கே சென்று, தவறிழைத்த இராவணனுக்குத் திருந்துவதற்குப் பல வாய்ப்புகளையும் அளித்துக் கடைசியிலே தானே மறவருள் செய்தான்,இராமன் ? இங்கும் இறைவனது திருவடியின் பெருமை பேசப்படுவதைக் காணலாம் ! பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி , கன்று குணில் ஆ வெறிந்தாய் கழல்போற்றி , குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி- கிருஷ்ணாவதார லீலைகள். சகடாசுரனை வதைப்பதற்காகப் பொன்றச் சகடம்" உதைத்தபோது, புகழ் போற்றி விட்டு, "கன்று குணிலா வெறித்து "கன்று வடிவில் வந்த கபித்தாசுர அரக்கனை தடியாகக் கொண்டு, விளாமர வடிவில் நின்ற வத்ஸாசுரனை நோக்கிக், கண்ணன் நின்ற இடத்திலேயே சுழன்று வீசி எறிந்தபோது, ஒரு காலை நிலத்தில் இருத்தி, மற்றதை சற்றே தூக்கி நின்ற கோலத்தில், கண்ணனது தாமரைப் பாதமும் கழலும் பளிச்சென்று கண்ணில் பட, கழல் போற்றப்பட்டது. அந்த சித்சபேசனுடைய குஞ்சிதபாதம் போன்றே, கண்ணனுடைய பாதங்கள் தெரிகின்றன. குன்று குடையாய் எடுத்தாய் குணம் - இதுவரை இறைவன் திருவடிப் பெருமை பேசப்பட்டதல்லவா ? இந்தக் காட்சியில் அவனது திருக்கை மேன்மை கூறப்படுகின்றது.எவ்வளவோ முறை பரந்தாமன் இந்திராதி தேவர்களுக்குக் கருணையோடு அருள் புரிந்திருக்கிறான். ஆனால் அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்திரன் பெரும் சுயநலக்காரன். அவனது பதவியைக் காத்துக் கொள்வதில் எப்போதும் முனைப்போடு இருப்பவன், ஆதலால் கருவி. ஆயர்குலத்தினர் வழக்கமாக ஆண்டுதோறும் மழை பொழிந்து வளம் செய்வதற்காக இந்திரனைச் சிறப்பித்து விழா எடுப்பதைத் தடுத்துக் குட்டிக் கண்ணன், உண்மையிலேயே கோகுலத்திற்கு உதவி செய்யும் கோவர்தன மலைக்கு விழாயெடுக்கச் செய்ததால் கோபங்கொண்டு 7 தினங்கள் அழிவைத்தரும் பெருமழையைப் பொழியச் செய்து துன்புறுத்தினான் இந்திரன். கண்ணன் எண்ணியிருந்தால் இந்திரனை தண்டித்திருக்க முடியும். ஆயினும் அவனைப் பொறுத்துக் கொண்டான். கோவர்த்தன மலையை சுட்டு விரலால் தாங்கிக் குடை பிடித்துப் பெருமழையிலிருந்து ஆயர்பாடியைக் காத்தான் கண்ணன். இந்திரன் மீது கோபம் கொள்ளாமல், அவனது அறியாமையைப் பொறுத்த பெருந்தன்மையுடனான கருணையை, "குணம் போற்றி" என்றாள் ஆண்டாள். பகைகெடுக்கும் நின்கையில் வேல்- முல்லைத் திணையில் ஆவினிங் கவர்தல் ஒரு தொழில். அதைச் செய்யும் பகைவரைப் போரில் வெல்ல கண்ணன் அவனது திருக்கரத்தில் வேல் கொண்டிருந்தான். வேல் பிடித்த சேயோனின் மாமன் அல்லவா அவன் ? கூர்வேல் தொழிலனாம் நந்தகோபன் மகனல்லவா ? கோவலரின் இளவரசனல்லவா ? அடியவர்களைக் காக்கவும், தீமையை அழிக்கவும் அவன் ஸங்கல்பம் செய்திருக்கிறான், அதுவே வேல் ! சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்! வாமன அவதாரத்திலும், இராமாவதாரத்திலும், இறைவனுக்கு ஒரு பகைவர் தாம். ஆகையினால் ஓரோர் அடியில் அவர்களைப் போற்றிவிட்டாள் .ஆனால், கிருஷ்ணாவதாரத்தில் பல திசைகளிலிருந்தும் இறைவனுக்குப் பகை. எனவே தான் கண்ணனுக்குப் பற்பல போற்றிகளைச் சொல்லிக் காவல் படுத்தும் விதத்தில் மங்களாஸாஸனம் செய்தாள் போலும் ! வாமனாவதாரத்தில் காலால் அளந்த போதும் மாவலிச் சக்கரவர்த்தியின் பெருமையை உலகறியச் செய்த குணம் இருந்தது. இராமாவதாரத்தில் சரணாகதம் செய்வதற்கு வேண்டிய வாய்ப்புகளைக் கொடுத்த வாத்ஸல்யமிருந்து. ஆனால் கிருஷ்ணாவதாரத்திலே வெட்டு ஒன்று துண்டிரண்டாக பகைவர்களை அழிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் மற்ற அவதாரங்களில் பரந்தாமனுக்குப் பகைவர்களும் குறைவு, உதவி செய்வதற்கும் நிரம்ப துணையிருந்து. கண்ணனுக்கோ, அவன் தனியொருவனாக அனைவரையும் காக்க வேண்டிய பொறுப்பு. பலராமன் கொஞ்சம் அசந்தாலும் கண்ணன் தன்னந்தனியிலே பகைவரை சமாளிக்க வேண்டுமே என்ற கவலை இந்த ஆயர் சிறுமிகளுக்கு அதிகம் அதனால் அவனுக்குக் காப்பிடும் வகைகளும் அதிகம் தான் ! துஷ்ட நிக்ரஹ அவதாரமானாலும், எல்லாவிடத்திலும் சினத்தோடு அணுகவில்லை, கண்ணன். தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் (அடியவர்கள், நல்லவர்கள்) தீங்கிழைப்பவர்களின் குண நலங்களை சீர் தூக்கிப் பார்த்துத்தான் அறமா மறமா என்று முடிவு செய்தான். இறுமாப்போடு பிழையிழைத்த இந்திரனை குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளும் படியாக , அவனது மற்ற இயல்புகளைக் கருதி, ஆயுதமேந்தி அழிக்க விழையாமல், பொறுமையைக் காத்துத் திருத்த விழைந்தான். அடி , திறல் , புகழ், கழல், குணம், கைவேல் போற்றி - ஆறுவகையிலே , சுவையாக இறைவனைப் பாடிப் பணிதல். பரமனின் திருவடி, திருக்கை, மற்றும் நற்குணங்களின் புகழைப் பாடிப் பணிந்து வீடுபேறு வேண்டுதல் கருத்து. என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்- கண்ணன் தரும் பறைக்காக ஆயர்ச்சிறுமிகள் வரவில்லை, அவனடி பணிந்து தொண்டாற்றவே வந்திருக்கின்றோம் என்று ஆண்டாள் உரைக்கிறாள். இன்றுயாம் வந்தோம் இரங்கு- இவ்வளவு நாட்களாக உன்னிடம் வர இயலாமல் இன்று வந்தோம் ! நீயே வந்து எங்களுக்கு அருளுமுன்னே நாங்களே எங்கள் தடைகளைத் தாண்டி இன்றே உன்னிடம் வந்து சேர்ந்தோம் ! இதுவரை வாயில் காப்போன் முதல், நந்தகோபர், யசோதை, பலதேவன், நப்பின்னை ஆகியோரிடம் உதவி பெற்றுக் கண்ணனுக்கு அருகில் வந்தாயிற்றல்லவா ? இனிமேல் ஆண்டாள் குழுவினருக்குக் கண்ணன் அருள் இருந்தால் மட்டுமே வேண்டிய எண்ணம் நிறைவேறும் என்பதை உணர்த்தவே "இரங்கு" என்று இறைஞ்சுகிறாள் !.
தத்வார்த்தம்- உட்பொருள் ஈரேழு பதினான்கு உலகங்கள் யாவையும் அருளிப் படைத்துக் காக்கும் இறைவனின் திருவடி பணிந்துப் பேற்றினை உறுவோம்! திருவடிப் பேற்றினை நாம் அடைந்திடவே பெருந்தடை செய்கின்ற மனமாதி புலன்களாம் விரோதியை அடக்கும் வகையிலே மண்ணில், கருணை குணத்தோடு அவதாரம் செய்தும், உருகும் அன்போடு வழிபடும் அடியார்க்கு அருளவே மனத்துள்ளே ஒளியாக நின்றும், அரியதாம் இறைஞானம் அடியவர் பெறுமாறு, உரிய நல்லாசானை நமக்கெனப் படைத்தும், திருவருள் செய்யும் இறைவனைப் பணிவோம் ! பெருவெண்ணத் தூண்டலால் சீவர்கள் நாமும், புரிகின்ற வினையின் பயனாக அடைகின்ற, நரக சுவர்கங்களின் அனுபவம் என்கின்ற பெருஞ்சக்கரம் போன்ற சுழலினை நிறுத்திக், கருணையுடன் நம்மை வெளியே விடுவித்து, அருளும் இறைவனைப் பாடிப் பணிகுவோம் ! பரமனடி சேரவே தடைகளை உருவாக்கும், கருமங்களால் பெறும் பாவ புண்ணியங்களை, அருளினால் அழித்துமே வீடென்னும் பேற்றினைத் தருகின்ற இறைவனைப் பாடிப் பணிகுவோம் ! பேரானந்த நிலையெனும் வைகுண்டம் தன்னில், பெரும் வெண்கொற்றக் குடையின் கீழேயமர்ந்து, அருள்கின்ற இறைவனின் நற்குணம் அவற்றின் பெருமையைப் பாடிப் போற்றிப் பணிகுவோம் ! திருவடிகள் வேண்டிடும் அடியவர்கள் தமக்கு, உருவாகும் தடைகளைத் தகர்த்து எறிகின்ற, கூரிய எண்ணமுடை இறைவனைப் பணிகுவோம் ! திருவோடு, ஞானமும், வலிமையும், பொறையும், வீரமொடு, திறப்பொலிவும் இயல்பிலேக் கொண்ட, பரமனுக்குச் செய்கின்ற தொண்டே என்றைக்கும், பேரானந்தம் என்னும் தெளிவினை நாமுற்றுத், திருவடியில் சேர்க்கின்ற பரமனைப் பணிகுவோம் ! உலகம் அளந்தாய் அடிபோற்றி - அண்ட சராசரத்தைப் படைத்துக் காப்பவன் இறைவன். அவனை அடைவதற்கு அவன் திருவடிகளைப் பற்றுவதே வழி. பரமனே உபாயமும் (வழி) உபேயமும் (முக்தி). சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் - இராவணன் புலனடக்கம் இல்லாது போதலின் உருவகம் . இறைவனைச் சரணடைந்து மனமாதி புலன்களை வெல்வதற்கு, உதவியாய் மண்ணுலகில் பிறந்த நமக்கு, அவனது அவதாரங்கள் அருள் செய்கின்றன. அன்போடு வணங்கும் அடியாரின் உள்ளத்திலும் பரம்பொருள் ஒளிவடிவில் அருள்கிறது. இறைவனை அடைய விரும்பும் சீவர்களுக்கு உதவி செய்யும் விதமாக நல்லாச்சார்யர்களையும் இறைவனே நமக்கு அருள்கிறான். திறல்போற்றி-விபவ அவதாரங்களாகவும், உள்ளொளிரும் ஒளியாகவும், அறிவூட்டும் ஆச்சார்யர்களாகவும் இந்த அண்டத்தில் தன்னுடைய இருப்பைத் தெரிவிக்கும் இறைவனது திறமையைப் போற்ற வேண்டும். பொன்றச் சகடம் உதைத்தாய் - சகடாசுரன்,வீடுபேறு அடையத் தடை செய்கின்ற, மீண்டும் மீண்டும் நமைத் தூண்டும் எண்ணங்களின் உருவகம். புகழ்போற்றி- சீவாத்மாக்களின் எண்ணங்களை, மனதின் மாறுபட்ட சிந்தனைகளைத் தடுத்து, அவர்களுடைய கர்மவினைச் சுழலால் ஏற்படும் சுவர்க்க, நன்றாக அனுபவங்களைத் தூக்கியெறிந்து தவிடு பொடியாக்கிப் பரலோகம் அருள்பவனது புகழைப் போற்ற வேண்டும். கன்று குணில்ஆ வெறிந்தாய் - வத்ஸாசுரனும், கபித்தாசுரனும் பாவ புண்ணியங்களின் உருவகம் . கழல்போற்றி- தன்னுடைய வலிமையான அருளென்னும் தண்டத்தையெறிந்து நம் பாவ புண்ணியங்களை அழித்து, வீடுபேறு வாய்க்க வழி வகுக்கும் இறைவனது வீரத்துணிவைப் போற்ற வேண்டும். ஒருவரது புண்ணிய பாவ பலன்கள் சுவர்க்க,நரக நிலையிலேயே உழலச் செய்யும் . இறைவன் கருணையினால் நம் வினைகளை களைந்தெறிந்தால் தான் வீடுபேறு வாய்க்கும். குன்று குடையாய் எடுத்தாய் - கோவர்த்தன கிரி, வைகுண்டத்திலுள்ள பரந்தாமனுடைய வெண்கொற்றக் குடையின் உருவகம்.அரசர்க்கரசனாய் இறைவன் அதன் கீழிருந்து அனைத்த்தையும் காத்தருள்கின்றான். குணம்போற்றி - மாற்றாரையும் அழிக்காமல், மனமாற்றம் ஏற்பாடச் செய்து ஆட்கொள்ளும் இறைவனது கருணை, அன்பு, எளிமை ஆகிய நற்குணங்களைப் போற்றிப் பணிய வேண்டும். வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி - சரணடைந்த அடியவரைக் கைதூக்கி விடுவதிலே குறியாக இருக்கும் பரமனின் உறுதி, ஸங்கல்பத்தைப் போற்றிப் பணிய வேண்டும். அடி , திறல் , புகழ், கழல், குணம், கைவேல் போற்றி - இறைவன் பேரறிவாளன், பேராற்றலாளன் ,திருவாளன், வீரன்,செயற்திறலாளன் ,பொறையாளன். இந்த நற்குணங்களைப் போற்றும் வகையாலே ஆறு போற்றிகள் என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் - வீடுபேறு என்பது பரமனுக்குப் புரிகின்ற தொண்டே என்பதை உணர்ந்து சரணம் செய்தல். என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கு- ஆச்சார்யரின் உபதேசம் பெற்று, இறையடியார்களோடு ஒன்றாய்க் கூடிப் பாடிப் பணிந்து, பிராட்டியிடம் புருஷகாரம் பெற்று, இவர்களது கருணையினால் இறைவன் திருவடியில் சரணம் செய்வதே முறை. அப்படிச் செய்தால் இறைவன் நம் மீது கருணை வைத்து,நம்முடைய இகவுலகப் பற்றுகளை நீக்கிக், கட்டுகளை அறுத்து வீடுபேறு அருளுவான். அப்படி வேண்டும் வீடுபேறும், இறைவனுக்குத் தொண்டு செய்வதான கைங்கர்யம் மட்டுமே வேறொன்றுமில்லையென்று சீவர்கள் உணரவேண்டும் என்பது கருத்து.
பகவான் இப்போது தான் துயிலெழுந்து ஒரு அடி வைத்திருக்கிறான்.அதற்குள் மங்களாசாசனம் செய்கிறாள் ஆண்டாள். அன்று நிஜமாகவே பரமன் உலகத்தை அளந்த போது யாரும் சிறப்பித்துப் பாடவில்லை.இந்திரன் ராஜ்ஜியம் கிடைத்து நிம்மதி அடைந்து விட்டான்.மஹாபலி கீழே போய் விட்டான்.பகவானைப் பாராட்ட யாருமே முன் வர வில்லையாம்.அந்த குறை தீர ஆண்டாள் 'போற்றி' பாடுகிறாள். இந்த பாசுரத்தில் முதல் சொல்'அன்று' இதன் பொருள் 'அந்த காலத்தில் , முன்பு ஒரு நாள்' என்பது மட்டும் அல்ல.. அன்று என்பது 'இல்லை' என்பதையும் குறிக்கும் சொல். பிருஹதாரண்ய உபநிஷத் 'நேதி நேதி 'என்று கூறும். 'ந இதி ந இதி '-இது அவ்வாறு இல்லையில்லை. இப்படி கழித்துக் கொண்டே வந்தால் கடைசியில் மிஞ்சுவது பரப்ரஹ்மம் மட்டுமே.What a great philosophy! Embar vijayaraghavachariyar used to narrate the following anecdote while commenting on this pasuram. நம்மாழவார் அவதரித்த தாமிரபரணி தீரத்திலிருந்து ஒருவர் டில்லி அரசனைக் காணப் போனார்.ராஜாவைப் புகழ்ந்தார். அரசன் நூற்றியோரு ரூபாய் சன்மானம் வழங்கினான். அரசன் உள்ளே போனதும் அந்த பண்டிதர்" இந்த சம்பாவனைக்கு டில்லி வர வேண்டுமா? "சாகாய வா ஸ்யாத் ,லவனாய வா ஸ்யாத் "( இந்த பணம் காய்கறி, உப்புக்குத் தான் பயன்படும்)என்று கேவலமாகச் சொன்னார் . இதைக் கேட்ட ஆஸ்தான வித்வான் அரசரிடம் வத்தி வைத்து விட்டான் உடனே பண்டிதரை வரவழைத்தான் அரசன். "நான் கொடுத்த சன்மானத்தைத் துச்சமாகச் சொன்னீரா?." என்றான் அரசன். " சொன்னது வாஸத்வம் தான். நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.நான் சொல்வதை நிதானமாகக் கேளுங்கள் "என்றான். "டில்லீஸ்வரோவா ஜகதீஸ்வரோவா மனோரதம் பூரயிதும் சமர்த்த; அன்யேன கேனாபி ந்ரூபேண தத்தம் சாகாய வா ஸ்யாத் லவணாய வா ஸ்யாத் " இதைக் கேட்ட அரசன் மன மகிழ்ந்து பத்தாயிரம் ரூபாய் ,சன்மானமும், ஒரு பொற்கிழியும் சாலவையும் பரிசளித்தான். வித்துவான் என்ன தான் சொன்னார்? ஒருவரது மனோரதம் பூர்த்தியாக வேண்டுமானால் அது டில்லி ராஜாவான தங்களால் மட்டுமே முடியும் அல்லது ஜெகதீஸ்வரான பரமாத்மாவால் இயலும்.வேறு அரசர்கள் கொடுக்கும் சன்மானம் உப்பு, காய் கறிக்கு மட்டுமே பயன்படும். சின்னதாக 9 வார்த்தைகளை வைத்து டில்லி அரசனை பகவானுக்கு சமமாக உயர்த்தி விட்டார்.. " கடைசி வரி உங்களை பற்றியது தான் என சொல்லி இருந்தால் நூறு ரூபாயும் போய் தண்டனையும் கிடைத்திருக்கும். God is stated to be 'sthotra priyan. 'karmanyeva athikaarasthe maa paleshu kathaachana' says Krishna in Gita.Having advised thus, can he become a slave to prayers, sthotras etc.Why the nirguna parabrahmam be after sthotra and prayers? What he is going to achieve from our prayers is a question that arises in everyone's mind,including that of believers and devotees. The significance is this. When you utter a sound, a form is being created. There is a whole science of using sounds in a particular way so that it creates the right kind of form. We can create powerful forms by uttering sounds in certain arrangements. This is known as the Nada Yoga, the yoga of sound. If you have mastery over the sound you also have mastery over the form that is attached to it. The sthotras are not for the material benefits but for the valuable vibration it creates . That is why while learning mantras and sthotras 'rote learning' is always advised.When we start analysing word by word meaning' the intensity'sound vibration ' is lost.That is why vedas are taught only orally and listening is stated to more important than reading the veda mantras from printed media. Shiva thandava sthotra by Ravana while his hand was trapped inside Mount kailash is a perfect example of 'sthotra mahima. That is why in music too ,naadham' is more important than language. Pavithra, I think I have deviated much.Yet the word'potri' and 'anru' have made me to cross the line.Sorry Pavitra for the interruption and deviation. Jayasala 42 Reply Reply to All Forward
Madam, I am so glad you chose to share the wealth of knowledge you posses with all of us here. This is not deviation but deep devotion. Please continue . I am grateful.
"இதுவரை வாயில் காப்போன் முதல், நந்தகோபர், யசோதை, பலதேவன், நப்பின்னை ஆகியோரிடம் உதவி பெற்றுக் கண்ணனுக்கு அருகில் வந்தாயிற்றல்லவா ? இனிமேல் ஆண்டாள் குழுவினருக்குக் கண்ணன் அருள் இருந்தால் மட்டுமே வேண்டிய எண்ணம் நிறைவேறும் என்பதை உணர்த்தவே "இரங்கு" என்று இறைஞ்சுகிறாள் பவித்ரா ஆண்டாள் உதவி கேட்கும் வரிசையை பாருங்கள் .முதலில் கண்ணனை பெற்றவர்கள்,பின் சகோதரன் அதன் பின் மனைவி .மிக அருமையான பாரம்பரியம் .