பள்ளி மாணவ-மாணவியர் ஏற்க வேண்டிய 10 உறுதிமொழிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தினார். ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலையில் தனியார் பள்ளியில் புதன்கிழமை நடந்த விழாவில் பங்கேற்ற அப்துல்கலாம், மாணவ-மாணவியர் 10 உறுதிமொழிகளை ஏற்க வேண்டுமென கூறினார். * நான் வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன். * நன்றாக உழைத்து படித்து, வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முயல்வேன். * எனது விடுமுறை நாள்களில், எழுதப் படிக்கத் தெரியாத 5 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன். * எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாப்பு மரமாக்குவேன். * மது, சூதாடுதல், போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துன்புறும் ஐந்து பேரையாவது அப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த முயல்வேன். * துன்பத்திலிருக்கும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, துயரைத் துடைப்பேன். * ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பார்க்க மாட்டேன். எல்லோரையும் சமமாக பாவிப்பேன். * வாழ்வில் நேர்மையாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன். * என் தாய், தாய்நாட்டை நேசித்து, பெண் குலத்துக்கு உரிய மரியாதையை அளிப்பேன். * நாட்டில் அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன். ஒவ்வொரு உறுதிமொழியையும் படித்த கலாம், "இதை செய்வீர்களா' என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டார். அனைவரும் "செய்வோம்' என்று கோஷமெழுப்பினர்.