பாரம்பர்யம் அப்படியே இருப்பதில்லை. அதுவும் மாறும். மொழியின் நடை, மரபுகள் கூட நாளாவட்டத்தில் மாறும். விகடன், கல்கி, குமுதம் கூட ஆரம்பித்த காலத்தில் உருவம், உள்ளடக்கம், எழுத்து நடை வரவர மாறிவந்த உண்மை அவற்றின் முன்னாள் வால்யூம்களைப் புரட்டினால் புரியும். அன்று அவற்றின் வாசகர்கள் பெரும்பாலும் படித்த வர்க்கத்தினர். அவர்கள் மட்டுமே படித்த காலம் அது. சஞ்சிகைகளையும் அவர்கள் மட்டுமே படித்தார்கள். அவர்கள் மட்டுமே அவர்களை மட்டுமே கருத்தில் நிறுத்தி எழுதினார்கள். போகப்போகப் படித்தவர்கள், வாசகர்கள், படைப்பாளிகள் பரவலானார்கள். மொழியும் உள்ளடக்கமும் ஜன ரஞ்சகமாயின. ஜன ரஞ்சகம் ஒருவகையில் தரக்குறைவாகவும் முகம் சுளிக்கும்படியும் தென்படும். அதுவும் பழகிவிடும். அவர்களும் பழகிவிடுவார்கள். எல்லோருக்கும் அது அன்னியோன்யம் ஆகிவிடும். எழுத்தாளர்கள், எழுத்து நடை, வட்டாரவழக்கு எல்லாமே உயர்மட்டத்திலிருந்து கீழே இறங்கி எங்கும் வியாபித்த போது முதலில் கேட்ட புகார்க் குரல் பிரபுக்களுடையது. அல்லது அன்றைய தாத்தா பாட்டிகளுடையது. காலம் கெட்டுப்போச்சு, கலி முத்திப்போச்சு - எனும் புலம்பல். ஒவ்வொரு முன்னாள் தலைமுறையும் பின்னாள் தலைமுறை மீது படிக்கும் குற்றப் பத்திரிகை. தாத்தாக்கள், பாட்டிகள், பிரபுக்கள் எக்காலத்திலும் இருப்பார்கள். அதே குரல் இப்போதும் கேட்கிறது. நாளையும் ஒலிக்கும். இனி அச்சு இதழ்களுக்கு வேலையில்லை. மின்னிதழ்கள் காலம் இது. படிப்பவர்கள் குறைந்து பார்ப்பவர்கள் பல்கிவிட்டனர். நாளிதழ்கள் கூட அப்படியே. நாவல், தொடர்கதை, கவிதை எல்லாமே உருவம், அடக்கம் மாறியும் இலக்கணம் மீறியும் நீர்த்துப்போவது போல் தோற்றம். இப்படித் தோன்றுவதும் பிரபுத்துவம் தான். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே என்பது நன்னூல். இந்து உட்பட வாசகர்களை இழப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. முன்புபோல் அரசு விளம்பரம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. விகடன், குமுதம், கல்கி எல்லாமே 80 களில் உச்ச விற்பனை. 90 முதல் இறங்குமுகம். 7,8 லட்சம் விற்பனை 2000 இல் 3 லட்சமாய்ச்சுருங்கியது. கணினியின் காலம் செய்த கோலம். இப்போதெல்லாம் நூலகம் போகவேண்டாம். கைபேசியிலேயே நூலகம் பதிந்து கொண்டு நாமே நடமாடும் நூலகமாகி விட்டோமே ! jayasala42