TOP SECRET. காலை ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது . காலிங் பெல் சப்தம் கேட்டு ராமசாமி வாசலுக்கு விரைந்தார் . அங்கே ப்யூன் பாலு சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார். ராமசாமி அவரை வரவேற்று ஹாலில் உள்ள ஒரு சேரில் அமர வைத்தார். "என்ன பாலு, நீங்கள் ஆபீசுக்கு வரவில்லையா ?" "வருவேன் சார், என் மனைவி அவங்க அம்மா வீட்டிலே கொண்டு போய் விட சொன்னாங்க. அதனால கொஞ்சம் லேட்டா வருவேன்". "அதனாலென்ன மெதுவாகவே வாருங்கள் . இன்றைக்குத்தான் வேலை எதுவும் கிடையாதே; வந்து கொஞ்ச நேரம் எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்து விட்டு லஞ்ச் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டியதுதானே !" "ஆமா சார், ஆனா மேனேஜர் சார் எனக்கு ஒரு சின்ன வேலை கொடுத்திருக்கிறார். எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற ஒரு புக் பைண்டிங் கடையிலே ஒரு புத்தகம் கொடுத்திருந்தார். அதை வாங்கிக்கொண்டு இன்றைக்கு காலையிலே ஆபீசுக்கு வரும்போது கொண்டு வரச் சொல்லியிருந்தார். அந்த புத்தகத்தை பைண்டிங் ஷாப்பில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். அவர் காலையில் கொண்டுவரச் சொன்னார். நான் புரசைவாக்கம் போய்விட்டுத் திரும்பி வருவதற்குக் கொஞ்சம் நேரம் ஆகும். அதனால நீங்க கொஞ்சம் இந்த புத்தகத்தை மேனேஜர் சார் கிட்டகொடுத்துவிட முடியுமா?" "அதற்கென்ன, தாராளமாகக் கொடுத்து விடுகிறேன்", என்று ராமசாமி புத்தகம் இருந்த பையை வாங்கிக் கொண்டார். பார்ப்பதற்குக் கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் அவ்வளவு கனமாக இல்லை. பாலு அவசரமாக கிளம்பி சென்றுவிட்டார் ______________________________ ராமசாமி ஆவலுடன் அந்தப் புத்தகத்தை பையில் இருந்து வெளியே எடுத்தார் அதைப் பார்ப்பதற்கு அரைகிலோ ஸ்வீட் பாக்ஸைப் போல இருந்தது. முன்பக்கம் பின்பக்கம் அட்டை சற்று கனமாக இருந்தது . அட்டை கரும்பச்சை நிறத்தில் இருந்தது. நான்கு புறத்திலும் இருந்த பார்டரும் புத்தகத்தின் தலைப்பும் பளிச்சென்று பவுன் நிறத்தில் இருந்தன. அழகான பார்டர் டிசைனுடன் பளபளவென்று இருந்தது.புத்தகத்தை யாரும் பிரித்து விடாதபடி செல்லோ டேப் போட்டுஇரண்டுஅட்டைகளையும்சேர்த்து ஒட்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தார் போல் இருந்தது புத்தகத்தின் பெயர் தான்-- பளிச்சென்று கொட்டை எழுத்துக்களில் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது : "TOP SECRET" ---------------------------------------------------- Cello tape ஐ எடுத்துவிட்டு ஒரு glance அவசரமாக பார்த்து விடலாமா என்று ராமசாமி நினைத்துக் கொண்டு இருக்கையிலேயே அவருடைய மனைவி ஹேமா அடுக்களையில் இருந்து ஹாலுக்கு வந்தார். ராமசாமியின் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தாள். புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும், "என்னங்க இது நீங்கள் வாங்கிய புத்தகமா? அப்படி என்ன secret? " என்று மிகுந்த ஆவலாகக் கேட்டாள். ராமசாமி," இது நான் வாங்கிய புத்தகம் இல்லை. எங்கள் மேனேஜரிடம் கொண்டு போய் இப்பொழுது சேர்க்க வேண்டும்", என்று நடந்ததையெல்லாம் அவருடைய மனைவிக்குக் கூறினார். அந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு ப்ரீத்தி உள்ளே வந்தாள் . ப்ரீத்தியும் ராமசாமி வேலை பார்க்கின்ற அதே வங்கி அதே கிளையில் க்ளார்க்காக சேர்ந்து இரண்டு வருடமாக வேலை பார்க்கிறாள். அவள் வந்ததை ராமசாமியும் அவர் மனைவியும் முதலில் கவனிக்கவில்லை. பிரீத்தி ராமசாமியிடம்," என்ன சார், நம்ம ஆபீஸ் ப்யூன் பாலு வந்து விட்டு போனார் போல தெரிகிறதே என்ன விஷயம்?" என்றாள். ராமசாமியும் புத்தகத்தை பற்றிய விவரத்தை ப்ரீத்தியிடம் கூறிவிட்டு புத்தகத்தை பைக்குள் வைக்க முயன்றார். புத்தகத்தின் தலைப்பைப் பார்த்த பிரீத்தி டக்கென்று ராமசாமியிடமிருந்து அதனை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டாள். 'அப்படி என்னதான் இருக்கிறது அதில்' என்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் ப்ரீத்தியிடம் இருந்தது. ப்ரீத்தியிடமிருந்து புத்தகத்தை வாங்குவதற்காக ராமசாமி கையை நீட்டினார், ஆனால் ப்ரீத்தியோ அதை அவரிடம் கொடுக்காமல்," நம்ம மேனேஜர் கணேசன் சாரிடம் நான் கொடுத்து விடுகிறேன், நீங்கள் கவலைப்படாதீர்கள் " என்று சொல்லிவிட்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டாள், வேகமாகப் போயே போய் விட்டாள். ராமசாமியும் அவரது மனைவி ஹேமாவும் எவ்வளவு முறை "ப்ரீத்தி,ப்ரீத்தி" என்று கத்திக்கூப்பிட்டும் அவள் காதிலேயே வாங்காமல் போய்விட்டாள். "இது என்ன பொல்லாத பெண்ணாக இருக்கிறதே. நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் போய் இப்பொழுதே அவளிடம் இருந்து அதனை வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன் " என்று ஹேமா கிளம்பினாள் . ஹேமாவுடைய கோபத்தைக் கண்டு பயந்து போன ராமசாமி," வேண்டாம் விட்டுவிடு . ஆபிசில் அவளிடமிருந்து வாங்கி மேனேஜரிடம் கொடுத்துவிடுகிறேன்" என்றார் . ஹேமா கேட்பதாக இல்லை. பக்கத்து வீட்டுக்குச்சென்றாள். "இப்பொழுதுதான் அவள் ஆபீசுக்கு ஸ்கூட்டரில் கிளம்பிச்சென்றாள்"என்று ப்ரீத்தியின் மாமியார் கூறியதைக் கேட்டு ஹேமாவுக்கு ஒரே அதிர்ச்சி. ராமசாமியும் ஆபீசுக்கு கிளம்பலானார். __________________________________ ப்ரீத்தி தானும் தன் உயிர்த் தோழி லதாவும் சேர்ந்து இதனை படித்த பிறகு மேனேஜரிடம் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். _______________________________ ஒரு மாதமாகவே வருடாந்திர கணக்கை முடிப்பதற்காக அலுவலர்களும் சில ஊழியர்களும் மிகுந்த கஷ்டத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எந்தக் கிளை கணக்கை முடித்து பேலன்ஸ் ஷீட்டை Zonal officeஇல் கொண்டு போய் முதலில் சமர்ப்பிக்கிறார்களோ அவர்களுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு கேடயம் வழங்கப்படும்; சில சலுகைகளும் உண்டு. எனவே மாதக்கடைசியான நேற்று நான்கு ஊழியர்களும் 4 அதிகாரிகளும் மேனேஜரும் சேர்ந்து கணக்கை முடித்து பேலன்ஸ் ஷீட் தயார் செய்வதற்கு அதிகாலை 4 மணி ஆகிவிட்டது. ----------------------------------------------------- "இன்று ACCOUNT CLOSING DAY--- NO TRANSACTIONS" என்ற அறிவிப்புப்பலகை பாங்குக்கு (Bank)வெளியில் இருந்தது. அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து எல்லோருக்கும் லஞ்ச் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனவே எல்லோரும் சேர்ந்து டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று விடுவார்கள். பாவம் சந்திரசேகரன், சுப்பிரமணியம் ஆகியோருடைய கண்கள் இரவு தூங்காததால் சிவந்து , தூக்கக் கலக்கமாக இருந்தன. டைனிங் ஹாலில் அங்கே இருந்த டேபிளை தவிர மேலும் சில மேஜைகளையும் நாற்காலிகளையும் கொண்டு வந்து போட்டு அனைவரும் ஒன்றாக சாப்பிடுவதற்காக ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒரு பக்கம் பெண்கள், மறுபக்கம் ஆண்கள். ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். ________________________________ உணவு வகைகள் இன்னும் வந்து சேரவில்லை. ப்ரீத்தி, லதா இன்னும் இரண்டு மூன்று பெண்கள் ஒருபக்கம் உட்கார்ந்திருந்தார்கள். எதிர்ப்புறத்தில் நான்கு ஆண்கள் உட்கார்ந்து இருந்தார்கள். எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் ப்ரீத்தி தன்னுடைய ஹேண்ட் பேக்கிலிருந்து அந்த புத்தகத்தை வெளியே எடுத்து லதா மட்டும் பார்க்கிறார்ப்போல மறைவாகக் காண்பித்தாள். அவ்வளவுதான் சுற்றியிருக்கும் பெண்கள் "அது என்ன, அது என்ன? எங்களுக்கெல்லாம் காண்பிக்கக் கூடாதா?" என்று கேட்டுக்கொண்டே புத்தகத்தைப் பார்க்க முயற்சி செய்தார்கள். ப்ரீத்தி " ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை"என்று கூற அப்போது மற்ற பெண்களுக்கும் ஆவல் மிகுதி ஆகிவிட்டது . மறைக்க மறைக்க ஆர்வம் மேலிடும் அல்லவா? மைதிலியின் கண்ணில் புத்தகத்தின் தலைப்பு பட்டுவிட்டது. உடனே அவள், " புத்தகத்தின் தலைப்பை நான் பார்த்து விட்டேன். "TOP SECRET" நாங்களெல்லாம் அதைப் பார்க்கக் கூடாதா?" என்று உரத்த குரலில் கேட்டாள். அவ்வளவுதான். சற்று தொலைவில் இருந்த பெண்களும் ப்ரீத்திக்கு அருகில் வந்து கூடிக் கொண்டார்கள் எல்லோரும் அவள் கையில் இருந்த புத்தகத்தைத் தாங்களே பற்றிக்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். எதிர்ப்பக்கத்தில் இருந்த ஆண்களும் 'என்ன புத்தகம் அது' என்று பார்க்க மேஜைக்கு அருகில் வந்துவிட்டார்கள். அவ்வளவுதான் எல்லோரும் அந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடனே தங்கள் பக்கம் பிடித்து இழுப்பதற்கு முயற்சி செய்தார்கள். "நாங்கள் முதலில் படித்துவிடுகிறோம், நாங்கள் முதலில் படித்து விடுகிறோம்" என்று ஒரே கூக்குரல். அந்த நேரத்தில்தான் ராமசாமியும் மேனேஜரும் டைனிங் ஹாலுக்கு உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். ராமசாமி மன்னிப்பு கோரும் பாவனையில்," மிகவும் வருத்தப்படுகிறேன் சார்", என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மேனேஜரோ சிரித்த முகத்துடன் "பரவாயில்லை,பரவாயில்லை", என்று கூறிக்கொண்டிருந்தார். "அதோ பாருங்கள் உங்கள் புத்தகம் படும்பாட்டை , எல்லோரும் ஆளாளுக்கு பிடித்து இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். புத்தகம் உருப்படியாக உங்கள் கைக்கு வந்து சேரும் என்று எனக்குத் தோன்றவில்லை ",என்று ராமசாமி மேனேஜரிடம் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் மேனேஜர் அதே புன்னகையுடன் கொஞ்சம் கூட கவலைப்படாமல்," நல்லவேளை, நான் எப்படிச்செய்வது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்களே எனக்கு உதவி விட்டீர்கள்", என்று கூறினார் . ராமசாமி," என்ன என்ன, நான் என்ன உதவி செய்துவிட்டேன் ?"என்று கேட்டார். அதற்கு மேனேஜர் "சற்று பொறுங்கள் ராமசாமி. கொஞ்சம்பொறுத்துப் பாருங்கள் ", என்று மிக அமைதியாக் கூறினார் ____________________________ இரண்டு ஆண்களும் 3 பெண்களும் சேர்ந்து பிடித்து இழுத்துக் கொண்டிருந்ததால் செல்லோடேப் பிரிந்துபோய் புத்தகம் மேலே ஏகிறியது. அது ஃபேன் வரை போய் விட்டு கீழே வந்து சரியாக, மிகச்சரியாக டைனிங் டேபிளில் நடுமத்தியில் விழுந்தது. விழுந்த வேகத்தில் அதனுடைய மேலட்டை திறந்தது . உள் பக்கத்தில் அப்படி என்ன புத்தகம் இருக்கிறது என்று எல்லோரும் எட்டிப் பார்த்தார்கள் . ஆவல் தாங்கமாட்டாமல் ,ஒரே நேரத்தில் பதினான்கு தலைகள் அதனைக் குனிந்து பார்த்தன. அதற்குள்ளே ஒரே ஒரு பேப்பர்--- நான்குபுறமும் அழகழகாய் வண்ணமயமாய்ப் பூக்கள் அச்சிடப்பட்டிருந்த பார்டர். உள்ளுக்குள்ளே அதன் நடுவிலே என்ன எழுதி இருந்தது என்றால் ------ " இன்று ஏப்ரல் முதல் தேதி". எல்லோரும் சேர்ந்து "ஹோ,ஹோ,ஹோ ……. என்று கத்தினார்கள் ,சிரித்தார்கள். மேனேஜர் அதே புன்னகை மாறாத முகத்துடன் இருந்தார். ராமசாமி ஒன்றும் புரியாமல் மேனேஜர் முகத்தைப் பார்த்தார்.