. சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்! . சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்! “கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்காமல் இருப்பது நல்லது”. – ஜெஃப் கோல்ட்ப்ளம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரிய ஒளி மறைக்கப்படுவதை சூரிய கிரகணம் என்கிறோம். 2016ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதை ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிந்தது. சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி. சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் உணவு உண்பதில்லை; பிரார்த்தனைக்கான நேரம் கிரகண காலம் என்பர். பொதுவாக சூரிய கிரகண காலத்தில் ஆளும் மன்னருக்கு ஆகாது என்பது உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வரும் நம்பிக்கை. கிரகணம் பற்றிய சில சுவையான அறிவியல், சமூக மற்றும் ஆன்மீகத் தகவல்களைப் பார்ப்போம்: 1919ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி உலகில் மிக முக்கியமான கிரகணம் ஒன்று ஏற்பட்டது. உலகின் மிக பிரபலமான மேதை ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தத்துவப் படி புவி ஈர்ப்பு விசை ஒளியை வளைக்க வேண்டும். முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் இந்த சூரிய ஒளி பற்றிய ஆய்வுக்கு இரு இடங்களைத் தேர்ந்தெடுத்தது. அங்கு பார்வையாளர்களை அனுப்பியது. சூரியனின் ஒளி தற்காலிகமாகத் தடைப்பட்ட போது வானவியல் விஞ்ஞானியான சர் ஆர்தர் எடிங்டனும் அவரது குழுவினரும் தொலைதூரத்திலுள்ள நட்சத்திரங்களிலிருந்து கிளம்பும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் வளைந்ததைக் கண்டனர், வியந்தனர். இதன் மூலம் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை சரியே என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த கிரகணம் உலகின் மிக பிரம்மாண்டமான அறிவியல் கொள்கையை மெய்ப்பித்தது. ஒரே நாளில் உலகமே ஐன்ஸ்டீனைக் கொண்டாடியது. 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று இந்தியாவில் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானவியல் நிபுணர் ஜூல்ஸ் ஜன்ஸென் (Jules Janssen) அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஸ்பெக்ட்ரோகிராப் கருவியைச் சூரியனை நோக்கித் திருப்பிப் பார்த்தார். சூரியனின் க்ரோமோஸ்பியரில் ஒரு அசாதாரண சிறப்பு அலைமாலையைக் (spectral signature) கண்டார். இது கிரகணத்தின் போது மட்டுமே காணப்பட்ட ஒரு நிகழ்வு. இதில் ஒரு புதிய மூலகத்தை அவர் கண்டு பிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் லேசில் ஏற்கவில்லை. இது மிக மிக இலேசான வாயு. இதன் பெயர் தான் ஹீலியம். கிரேக்க புராணங்களில் வரும் சூரியனுக்கான பெயர் ஹீலியோஸ். அதிலிருந்து இந்தப் பெயர் இந்த வாயுவுக்குச் சூட்டப்பட்டது. கிரகணத்தினால் அறிவியலுக்குக் கிடைத்த ஆதாயங்கள் இவை என்றால் பல சரித்திர சம்பவங்கள் கிரகணத்தின் பாதகமான விளைவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன! முதலில் மஹாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். பீஷ்ம பர்வத்திலும் உத்யோக பர்வத்திலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் வருகின்றன. மஹாபாரத யுத்தம் வருவதைச் சுட்டிக் காட்டும் மோசமான வானியல் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று பதின்மூன்றாம் நாளே அமாவாசை வருவது. ஒரு சந்திர கிரகணமும் அதைத் தொடர்ந்து ஒரு சூரிய கிரகணமும் வருவது உலகில் நடைபெறாத ஒரு சம்பவம். அத்தோடு கிரகங்கள் வக்கிர நிலையை அடைகின்றன. இவை அனைத்தும் உலகில் இதுவரை நிகழாத ஒரு மாபெரும் போர் நிகழ இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள். இதைத் தொடர்ந்து இன்னும் பல துர் சகுனங்களை மஹாபாரதம் விளக்குகிறது. ஆக, அசாதாரணமான இரு கிரகணங்கள் பெரும் போரை உலகில் விளைவித்ததை மஹாபாரதம் தெளிவாக்குகிறது. அடுத்து மிகவும் சிக்கலான ஒரு கிரகணத்தை புனிதர்கள் மார்க், மாத்யூ, ல்யூக் ஆகியோர் பூடகமாக சுட்டிக் காட்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தன்று உலகம் இருளில் மூழ்கியது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது சூரிய கிரகண நிகழ்வா என்ற விவாதம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் புனிதர் ஜான் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. வானியல் வல்லுநர்கள் கி.பி. 29ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மத்திய கிழக்கில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையும் கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்ததையும் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் சிலுவையில் அறையப்படும் தினத்துடன் பொருந்தவில்லையே என்ற விவாதம் தொடர்வதால் சிலுவையில் ஏசு அறையுண்டதற்கும் கிரகணத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியவில்லை. அடுத்து கொலம்பஸை கிரகணத்துடன் தொடர்பு படுத்தும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. புது நாடு காணப் புறப்பட்ட கொலம்பஸுக்கு வானியல் அறிவு நிறையவே உண்டு. வானில் உள்ள கிரக சஞ்சாரம், நட்சத்திர இயக்கம் ஆகியவற்றை வைத்தே அவர் தன் பயணத்தைத் தைரியமாக மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது கப்பல் 1509 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி ஜமைக்கா அருகே விபத்திற்குள்ளாக சுமார் எட்டு மாதங்கள் தன் குழுவினருடன் ஒரு தீவில் அவர் தங்க வேண்டி நேர்ந்தது. சாப்பாட்டிற்கு வழி? அங்கிருந்த பூர்வகுடிகள் அவரது குழுவினருக்கு உதவ முன் வந்தனர். இதற்குக் காரணம் அவரது வானியல் அறிவு தான். அதன் மூலம் பூர்வ குடிகளின் தலைவனை அவர் மிகவும் கவர்ந்தார். ஆனால் இந்த இலவச சாப்பாடு தொடர்ந்து நடக்கவில்லை. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவர்கள் உணவு கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர். தனது வானியல் அறிவால் கொலம்பஸ் அன்று சந்திர கிரகணம் ஏற்படுவதைக் கணக்கிட்டார்.பூர்வ குடியினரின் தலைவனை அழைத்த கொலம்பஸ் அவர்கள் தனது குழுவினருக்கு உணவு அளிப்பதை நிறுத்தி விட்டதால் கடவுளின் சாபம் அவர்கள் மீது ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அன்று சந்திரன் மறைந்தே போவான் என்றும் கூறினா. சற்று நேரத்தில் சந்திரனை முழுவதுமாகக் காணோம்! பூர்வ குடிகளின் தலைவன் தன்னை மன்னிக்குமாறு கூறவே அதை கொலம்பஸ் கடவுளிடம் “எடுத்துச் சொல்லி” சந்திரனை சற்று நேரத்தில் மீட்டுக் கொண்டு வரவே தீவே ஒரே உற்சாகமயமாக ஆனது! கொலம்பஸ் குழுவினருக்கு உணவும் பூர்வ குடிகளுக்கு சந்திரனும் கிடைத்தன! இந்த உண்மை நிகழ்ச்சியை பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் கதையில் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க ஒரு பிரபலமான நாவல் மார்க் ட்வெய்ன் எழுதிய ‘எ கனெக்டிகட் யாங்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட் (A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற நாவலாகும்! இனி கிரகணத்தால் மன்னர்களுக்கு ஏற்பட்ட அபாயங்களைப் பார்ப்போம். அறிவியல் அறிஞர் வாழ்வில் மைக்கேல் ஷெர்மர் உலகப் பகுத்தறிவுக் கழகத்தின் தலைவர். விஞ்ஞானபூர்வமாக இல்லாத எதையும் நம்பக் கூடாது என்று வலியுறுத்தி வருபவர். இவரது கழகத்தில் சுமார் 55000 உறுப்பினர்கள் உள்ளனர். ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் 2001 ஏப்ரல் மாத இதழிலிருந்து பகுத்தறிவுப் பகுதியை எழுதி வருபவர் இவர்.இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவரது திருமண தினமான 2014 ஜூன் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதை இவரே தனது ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் சுவாரசியமான விஷயம்! ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபை அவர் மணமுடிக்க முடிவு செய்தார். ஜென்னிபருக்கு அவரது தாத்தா என்றால் உயிர். ஆனால் அவரது 16ஆம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார். தாத்தா பயன்படுத்திய 1978ஆம் வருட பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார். அது இயங்கவில்லை. எவ்வளவோ முயன்ற போதும் கூட அதை ரிப்பேர் செய்ய முடியவில்லை. கல்யாண நாளன்று திடீரென்று அந்த ரேடியோ பாட ஆரம்பித்தது! பகுத்தறிவுக் கழகத் தலைவர் அசந்து போனார். ஜென்னிபரும் அதே அளவு பகுத்தறிவுவாதி தான்!! அவரும் திகைத்தார். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர். மணநாளன்று மட்டும் ஒலித்த அந்த ரேடியோ மறு நாளிலிருந்து இயங்கவில்லை. தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும். “என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும். என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை” என்று ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்! அற்புதங்கள் என்றும் நிகழும்!