ராமன் 14 வருடம் வனத்துக்குப் புறப்படத் தயாராகி தாயிடம் விடை பெற கெளசல்யாவின் எதிரில் நின்றார். 'தந்தையின் வாக்கைக் காப்பாற்றி அவருக்கும் நான் பிறந்த மண்ணுக்கும் கெளரவத்தை அளிக்க வேண்டும் " என அனுமதி வேண்டினார். லக்ஷ்மணன் வெகுண்டான். வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டத்தின் படி லக்ஷ்மணன் கூறுகிறான் . "தாயே, என்னுடைய தந்தை தன மனைவின் பேச்சால் தர்மத்தை விட்டு விலகி விட்டார்.பெண் பேச்சைக் கேட்டு கொடிய செயலைச் செய்த தசரதர் தண்டிக்கப் படவேண்டியவர்.அவரைக் கொல்வதே முறை.செய்யத் தகாதது என்னவென்று அறியாது,அறிவிழந்து அதர்மத்தில் ஈடுபடுபவர் குருவே ஆனாலும் அவரைத் தண்டிப்பது கடமையாகும்.சூரியன் இருளை போக்குவது போல் என்னுடைய வீரியத்தால்,தாயே, உங்கள் துக்கத்தை அழித்து விடுகிறேன் " கொலையையும் நியாயமெனக் காண்கிறான் லக்ஷ்மணன். இப்போது வெளிப்படுபவை தான் கெளசல்யாவின் களங்க மிக்க சொற்கள். bhraatus te vadataH putra lakSmaNasya shrutam tvayaa | yad atra anantaram tat tvam kuruSva yadi rocate || 2-21-2Valmiki "மகனே, உன் தம்பி லக்ஷ்மணன் சொல்வது உன் காதுகளிலும் விழுந்திருக்கும்.அது உசிதமென்று தோன்றினால் அதன்படி உடனே செய்ய வேண்டியதைச் செய்.' கௌசல்யாவா இப்படிக் கூறுகிறாள்?இந்த ஒரு சுலோகம் போதாதா கௌசல்யாவைக் களங்கப் படுத்த.?ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் . இது கெளசல்யாவின் சரித்திரத்தில் ஒரு கரும் புள்ளி.மகனை இழக்க மாட்டாள்.ஆனால் மணாளனை இழக்கத் துணிந்தாளோ ? இந்த ஒரு சுலோகத்துக்கு ஏகப்பட்ட வ்யாக்யானங்கள்! 'உசிதமென்று தொன்றினால்' எனும் சொற்களே ஒரு escapism தான்.ராமன் 'சரி என்று சொன்னால் தசரதனைக் கொல்வது நியாயம் என்று கெளஸல்யா கருதுவதாகப் பொருள்படுகிறது. ஏன் வால்மீகி குணக் குன்றாம் கெளசல்யாவின் வாக்கில் இந்த வார்த்தைகளை வரவழைக்க வேண்டும்? துயரத்தின் கொடுமை மதியை இழக்கச் செய்கிறது.விதியின் கொடுமையால் மதி தடுமாறினாலும் தர்மத்தை மீறுவது தகாத செயல் என்று உலகுக்கு எடுத்துக் காட்டவே,கௌஸல்யாவின் வாயிலாக ஒரு அதர்ம எண்ணத்தை வெளிப் படுத்தி, அதற்கு ராமன் வாயிலாக ஒரு பெரிய தத்துவத்தையும் ,விதியின் வலிமையையும் வெளிப் படுத்துகிறார் வால்மீகி . விதி என்பது தான் அதிர்ஷ்டம்- அதாவது காணப் படாதது.எந்த செயலுக்கு காரணம் காட்ட முடியாதோ அது தான் விதி.விதி வழிதான் மதியைச் செலுத்தியாக வேண்டும். இதையே கம்பரும் " நதியின் பிழையன்று நறும் புனலின்மை ,அற்றே பதியின் பிழையன்று,பயந்து நம்மை புறந்தாள் , மதியின் பிழையன்று,மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை,நீ இதற்கென்ன வெகுண்டதென்றான் . ஆனால் கெளசல்யாவின் நாவின் மூலம் இந்த அவச் சொற்களைக் கூறச் செய்து அவளுக்குக் களங்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டாமோ என்பது சிலர் கருத்து. ஒரு சிறந்த பண்பாளரின் சறுக்குதல் விதியின் வலிமைக்கு ஏற்றம் அளிக்கும் என வால்மீகி எண்ணினாரோ? jayasala 42