சிவத் தலங்களில் சிவபிரானையும் ,வைணவத் தலங்களில் திருமாலையும் ஏற்றமுறப் பாடுவது தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் திருமாலுக்கே உரித்தான சக்கரம் சிவபெருமானிடமிருந்து பெறப் பெற்றது என்பது சுவையான தகவல். திருவிற்குடி வீரட்டானம் திருவாரூருக்கு அருகில் உள்ளது.இங்கு சலந்தரன் என்ற அசுரன் தான் பெற்ற வரத்தினால் கர்வம் அடைந்து எல்லோரையும் துன்புறுத்தி வந்தான். விஷ்ணுவாலும் அவனை வெல்ல முடியவில்லை.மேலும் மகாவிஷ்ணு அசுரனின் மனைவியான பிருந்தையின் எழிலில் மயங்கி விட்டார்.தேவர்கள் மிகவும் வருந்தினர். அவ்வமயம் சிவ பெருமான் ஒரு முதியவராக வெளிப் பட்டார்.தன்னைக் கண்டு அச்சம் கொள்ளாத முதியவரைக் கண்டு அசுரன் கோபம் கொண்டான்.வயோதிகர் கால் பெரு விரலால் மௌனமாக நிலத்தில் வட்டம் வரைந்து கொண்டிருந்தார் .அசுரன் கேலி செய்யவும், முதியவர் " முடிந்தால் இந்த மண் வட்டத்தைப் பெயர்த்து எடுத்து விட்டு மேலே செல்"என்று கூறினார். சலந்தரன் மண் வட்டத்தை எடுத்ததும் அது அசுரனை இரண்டாகப் பிளந்து ஈஸ்வரனின் கையில் சக்கரமாகப் பரிணமித்தது.இதுவே சுதர்சன சக்கரம். சிவபெருமானை பூஜித்த விஷ்ணுவும் காம நிலை நீங்கி வைகுந்தம் ஏகினார் சுதாசன சக்கரத்தின் மகிமை அறிந்த மஹா விஷ்ணு சக்கரத்தை அடைய விரும்பினார். வைகுண்டத்திலிருந்து விமானம் கொணர்ந்து தினமும் ஆயிரம் மலர்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தார்.வானத்திலிருந்த விமானம் பூமிக்கு வந்ததால் இந்த திருத்தலம் திருவீழிமிழலை என்று பெயர் பெற்றது. ஒரு நாள் ஒரு மலர் குறையவே ,விஷ்ணு தன கண்ணைப் பறித்து வைத்து பூஜையை முடித்தார்.பூஜையின் பலனாக சிவ பெருமான் விஷ்ணுவுக்குக் கண்ணையும் அளித்து சக்கரத்தையும் அளித்ததாக வரலாறு.இதனால் சிவன்' 'கண் ஈந்த பெருமான்' என்றும் 'ஆழி ஈந்த பெருமான் 'என்றும் போற்றப் படுகிறார். " சலமுடைய சலந்தரன்தன் உடல் தடிந்த நல் ஆழி நலமுடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்னே! நலமுடைய நாரணன் தன நயனம் இடந்து அரன் அடிக்கீழ் அலராக இட ஆழி அருளினன் காண் சாழலோ " என்பது மாணிக்க வாசகர் பாடல். சக்கரத்தைப் பெற்றுக் கொண்ட திருமாலால் அதன் அளவு கடந்த சக்தியைத் தாங்க முடியவில்லை.மீண்டும் சிவலிங்கத்தை வழிபடவும்,சிவபெருமான் சக்கரத்தின் சக்தியை பின்னமாகக் குறைத்து அருளினார்.திருமால் சக்கரதாரி ஆனார். "சக்கரம் பெற்ற நல தாமோதரன் தானும் சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால் மிக்கு அரண் தன்னை விருப்புடன் அர்ச்சிக்க தக்க நல சத்தியைக் கூறு செய்தே" என்பது திருமூலர் திரு மந்திரம். திருவிற்குடியில் 'சக்கரம் தாங்கிய உத்சவ மூர்த்தி உண்டு. திரு வீழி மிழலையில் சங்கு சக்கரம் இன்றி கை கூப்பிய நிலையில் சிவனை தியானிக்கும் விஷ்ணுவின் உற்சவமூர்தியும் உள்ளது. திருவீழிமிழலையில் அப்பரும் சம்பந்தரும் சிவபெருமானிடம் தினம் ஒரு பொற்காசு பெற்று மக்களின் பசிப் பிணி தீர்த்ததாக வரலாறு. சிவ லிங்கத்துக்குப் பின்னால் கல்யாண கோலத்தில் ஈசனும் பராசக்தியும் காட்சி அளிக்கிறார்கள்.இவ்வூர் மக்கள் சிவபெருமானை அருமையாக மாப்பிள்ளை சாமி என்று அழைக்கிறார்கள். jayasala42