கிருஷ்ண லீலா-ராதா மாதவ். ராதையுடன் முதல் சந்திப்பு. பீதாம்பரம் இடையில் புரள,மயில் பீலிமணி முடி தரித்து,முத்தாரம் சூட்டி நீல வண்ண மேனியான்,தன செம்பவள உதடுகளில்,மின்னும் புன்னகை தெறிக்க, கண்களில் வசீகரம் கொண்டு,மயக்கும் குழலுடன் வீதியில் விளையாட வந்தான். அங்கே,முத்தின் நிறம் கொண்ட,வண்ண சித்தாடை உடுத்தி,மோகினி போல், பின்னல் அசைந்தாட,சதங்கை சல சலக்க,ஒன்றிணைந்த அழகு ரூபமாய், மானின் மருண்ட விழிகள் கொண்டவளாய்,சிறியவளாய் அன்ன நடை பயின்றிடும், மாதவளை,கண்ட மாதவன் மையலுற்று அவள் பின்னே சென்று வினவுகிறான், பாலின் நிறம் கொண்ட பாவையே நீ யாரோ,யார் தவம் செய்து உன்னை ஈன்றனரோ, எவ்விடத்தில் நீ வீற்றிருந்து அழகு செய்கின்றனையோ,உற்ற பதிலுரைப்பாய் ஆரணங்கே. இத்தனை நாள் வீட்டின் முற்றத்தில்,சிறை இருந்தனையோ வீதியில் இன்று தான் காண்கிறேன், என முதல் பார்வையில் தன் மனதை கொள்ளை கொண்ட நங்கையை நோக்கி வாய் திறக்க, ராதை,மந்தகாச புன்னகை ஒன்றினை உதிர்த்து,பரிகசிக்கும் குரலினில் மறுமொழி சொன்னால், நான் என் அழகிய வீட்டின் முற்றத்திலே விளையாடி திரிந்து மகிழ்ந்திருந்தேன்,நான் செவியுற்றேன் கோகுல வீதிகளில் ,விஷமத் தனம் மிகுந்த பாலகன் ஒருவன் விளையாடி திரிகின்றான் ,அவன் வெண்ணை திருடன்,மண்ணை தின்றவன்,அன்னையினால் கயிற்றில் உரொளோடு கட்டப் பட்டவன் வளர்ந்த பின்னே சிறுவர்களுடன் இணைந்து பெண் பிள்ளைகளுக்கு பல தொல்லை தருபவன், ஆதலால் வீதி வழி,செல்லாதே என அறிவுறுத்தப் பட்டு ,காக்கப்பட்டவள்,இன்று மன தைரியம் பெற்று விஷமம் செய்யும் ,நந்தரின் திருமகனை காண வென வெளி வந்தவள் எனக் கூற அவளின் பதிலினை மறுக்கும் விதமாய்,கிருஷ்ணன் உரைத்தனன் உன்னிடம் இவ்விதமாய் பல பொய் புரட்டுகளை யாரோ ஓதியுள்ளனர்,அவற்றை நீ செவிமடுக்காய் நான் ஒருபோதும் எதையும் திருடியவன் அன்று,நாமிருவரும் இணைந்து விளையாடலாம் வாராய் சகியே. என அன்பான மொழி பேசி அழைத்தான் பரந்தாமன்,முதல் பார்வையில் இருவரும் ஈர்க்கப்பட்டு, மனதில் ஒன்றிணைந்த பின்னும்,உலக வழக்காய் புது மொழிகள் பேசி அறிமுகம் செய்து மகிழ்ந்தனர், காதலால் கட்டுண்டு,கண்ணனுக்காய் தன்னுயிரை ஈந்தவள்,அழகிய ராதை ,அவள் சரிதம் இனி காண்போம்.
இனி ராதையா.... படம் அழகாய் இருக்கிறது அக்கா... எனக்கொரு சந்தேகம்..."சத்யபாமா, ருக்மணி" என்றெல்லாம் கண்ணன் கதையில் பாத்திரங்கள் உள்ளார்களா?