கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்? எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. (5-99-2 அப்பர் தேவாரம்) புனித யாத்திரை போவது அவசியம்தான். ஆனால் அதை அர்த்தமில்லாத சடங்காகவோ, சுற்றுலாவாகவோ நடத்தக் கூடாது. காசி, கயிலாயம், பத்ரிநாத், கேதார்நாத், திருப்பதி, சபரிமலை, கன்யாகுமரி என்று யாத்திரை போவோரை நினைத்து அப்பர் பாடிய தேவாரத்தை மேலே கண்டோம். துகாராம் சுவாமிகளின் கதை ஒன்றைக் காண்போம். நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான, முக்தாபாய், ஏகநாத், நாம்தேவ், துகாராம், சமர்த்த ராமதாஸ் என்போர் மகாராஷ்டிர பூமியை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்த பெரியோர்களாவர். இவர்களில் ஒருவரான துகாராம் செய்வித்த “பாகற்காய் யாத்திரை” கதையைக் கேளுங்கள். ஒரு முறை கிராம மக்கள் எல்லோரும் தீர்த்த யாத்திரை செய்ய முடிவு செய்தனர். துக்காராம் சுவாமிகளிடம் சென்று அவரும் வரவேண்டுமென்று வேண்டினர். அவர் தான் வரமுடியாதென்றும் ஆனால் தன் கொடுக்கும் பாகற்காய்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று ஆறு, குளம், கடலில் நீராடும்போது அவைகளையும் குளிப்பாட்டி, கோவில்களுக்குச் செல்கையில் பாகற்காய்களையும் தரிசினம் செய்விக்கும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டார். கிராம மக்கள் ஆகையால் ஏன், எதற்காக என்று கேட்காமல் அப்படியே பாகற்காய்களை அவரிடம் பெற்று தாங்கள் சென்ற எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றனர்; புனித நீராடச் செய்தனர். கடவுளரை தரிசினம் செய்யும் போதெல்லாம் அதையும் சந்நிதியில் வைத்தனர். ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் யாத்திரை முடிந்தது. எல்லோரும் பரம திருப்தியுடன் ஊருக்குத் திரும்பி துக்காராம் சுவாமிகளின் காலில் விழுந்து நம்ஸ்கரித்துவிட்டு பாகற்காய்களையும் பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் சொன்னார்: நீங்கள் எல்லோரும் நான் சொன்னபடி செய்து பாகற்காய்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்கள் அனைவருக்கும் விருந்து தர விரும்புகிறேன். வருகின்ற வெள்ளிக் கிழமை எல்லோரும் என்னுடைய ஆசிரமத்துக்கு வாருங்கள் என்றார். அனைவரும் அறுசுவை விருந்துக்கு ஆசைப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமையன்று சந்தித்தனர். வடை, பாயசம், அப்பளம், பொறியலுடன் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. அப்பொழுது துக்காராம் சுவாமிகள், யாத்திரைக்குப் போன பாகற்காயையும் பொறியலாகச் செய்து அனைவர்க்கும் இது பிரசாதம் என்று பரிமாறினார். அனைவரும் அதை வாயில் வைத்த அடுத்த கண்மே “மகா கசப்பு” என்று முகம் சுழித்தனர். துக்காராம் சுவாமிகள், வியப்புடன், கசக்கிறதா? என்ன அதிசயம்? எத்தனை புனிதத் தலங்களுக்கு எடுத்துச் சென்றீர்கள்! எத்தனை புனித நீர் நிலைகளில் நீராட்டினீர்கள்! இன்னும் அதன் பிறவிக்குணமான கசப்பு மாறவில்லையா? என்று வியந்தார். எல்லோருக்கும் சுவாமிகளின் உட்கருத்து விளங்கியது. பின்னர் சொன்னார்: உள்ளன்போடும் தூய்மையோடும் இறைவனை நினைத்துக் கொண்டு செய்வதே தீர்த்த யாத்திரை. அது உல்லாசப் பயணம் இல்லை. மனதில் மாற்றமில்லாமல் செய்யும் யாத்திரை பாகற்காய் யாத்திரை போன கதை போலத்தான் என்றார். Jayasala 42
Fantastic Mami. Interesting and informative about the basic nature of human being with an example. Never read before. Really liked it especially reading in Tamil.