“டாஸ்மாக் இல்லா தெருவில் குடியிருக்க வேண்டாம்” “டாஸ்மாக் என்றால் என்ன?” ஒரு பெருங் குடிமகன் கொடுத்த பதில்: “குடிமக்கள் கூடுமிடம், கும்மாளம் போடுமிடம். இங்கு குடிக்க என்று வந்து விட்டால் குறை நிறைகள் மறந்து விடும் அடிதடிகள் சகஜம்; ஆனால் அரை ‘பெக்’கில் அடங்கி விடும்; குடியிருந்த கோயில் இல்லை; ‘குடி’ இருக்கும் கோயில் காண். “சாதி மத பேதமில்லை; சிவப்பா? கருப்பா? பார்ப்பதில்லை; மேட்டுக்குடி, பள்ளக்குடி, காட்டுக்குடி என்பதில்லை. குடி குடி குடி குடி நீயும் குடி நானும் குடி; குடியுரிமை பெற்ற பின்னும் குடிக்காமல் இருப்பதென்ன? “அராஜகம்,கொடுமைகள், களவு, கற்பழிப்பு அனைத்தையும் ஒழித்திடும் அருமருந்து குடியே காண். “இலவசமாய் ஏதேதோ கொடுப்பதை நிறுத்தி விட்டு இலவசக் குடியுரிமை இந் நாட்டில் வர வேண்டும். அத்தனை (சமூகத்தின்) விரோதிகளும் அதிகமாய் குடித்துவிட்டு அங்கங்கே வீழ்ந்திருப்பான்; அமைதிக்கு ஏது குறை? “ஆலயமும், மதுக்கடையும் ஒன்றன்றி வேறில்லை. சாந்திக்கு அலைவோர்கள் தேடுதலின் கடை எல்லை. அங்கே கல்லுக்குள் இறை; இங்கே விஸ்கிக்குள் நுரை. உட்கொண்டு உணர்ந்திடு. இதைத் தவிர ஏது மறை? “ஆலயத்தில் சொர்கவாசல் ஆண்டிற்கு ஒருமுறை தான் திறக்கும். எங்கள் அரு மருந்தின் வாயில்களோ அனுதினமும் திறந்து நிற்கும். மது அருந்தா கடவுளுண்டோ? ரிஷிகளுண்டோ?முனிகளுண்டோ? முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவருண்டோ? பரமசிவன் ‘பாங்‘கடித்து ஆடிடுவான்; போற்றுகின்றீர். (இங்கு) பாமரன் குடி போதையினால் ஆடினால் தூற்று கின்றீர். “படைத்தவனே நேரில் வந்தால் வரமொன்றே கேட்டிடுவேன். பாரிலுள்ள குடி மக்கள் சார்பாக பரிந்துரைப்பேன். “புல்லாய்ப் பிறவி கேட்டவற்கு கொடுத்து விடு; எப்பொழுதும் ப்புல்லாய் இருக்க அருள் எங்களுக்கு அளித்துவிடு” “கவலை மறந்திட டாஸ்மாக், கவிதை பிறந்திட டாஸ்மாக்; கனவுகள் கண்டிட டாஸ்மாக்; கடவுளைக் காட்டிடும் டாஸ்மாக். டாஸ்மாக் அன்றி எம்மை காக்கும் தெய்வம் வேறில்லை டாஸ்மாக் இல்லா தெருவில் குடியிருக்க தேவையில்லை.” ‘பேச்சு, மூச்சு இன்றி ஒருவன் கிடக்கிறானே?’ என்றதற்கு “பேச்சில்லை சரி; மூச்சா இல்லை? முகர்ந்து பார்; மூச்சு முட்டக் குடித்து விட்டு, முழு பணமும் கோட்டை விட்டு மூத்திரத்தில் கிடக்கும் மேதாவி” இவனென்றார். இவர் பேச்சைக் கேட்டு ஆடிப்போய் விட்டேன் நான் இனியும் அங்கு நிற்க மனது இடம் கொடுக்காமல் விரைந்து வெளி வந்தேன்; விழித்திருந்தும் வழி தவறி வெறுங் கனவில் வீழ்ந்தவரை வெளிக்கொணர ஏது வழி? அன்புடன், RRG 14/01/2020