இது வரை விதை விதைத்தல் ,நாற்று வளர்த்தல் ,நாற்று நடுதல் ,களை எடுத்தல் ,நீர் பாய்ச்சுதல் பற்றி பார்த்தோம் .இனி முற்றிய நெற் கதிர்களை அறுத்தல் பின் நெல் மணிகளை கதிரிலிருந்து பிரித்து எடுத்தல் வீடு வந்து சேர்த்தல் பற்றி தெரிந்து கொள்ளலாம் . பொதுவாக குறுகிய கால பயிர் நீண்டகால பயிர் என்று இரு வகைகள் உள்ளன.குறுகிய கால பயிர் மூன்று மாதங்களில் விளைந்து விடும் .மற்றொன்று ஆறு மாதகாலம் எடுக்கும் .எனக்கு சில வகை நெல் பெயர்கள் தெரியும் .அவை கொட்டாரம் சம்பா ,அரிக்கிராவி ,ஆனை கொம்பன் ,சம்பா ,அம்பை 36,ஆடுதுறை 27.எங்கள் ஊர் பக்கம் அரிக்கிராவி சம்பா ஆனை கொம்பன் என்ற வகை நெல்விதைகளே விதைக்கப்படும்.ஏன் என்றால் இவை அனைத்தும் வாய்க்கால் பாசனம் அதாவது வாய்க்கால் நீர் பயன்படுத்தப்படும் .வருடத்துக்கு ஒன்பது மாதங்கள் நீர் வரத்து இருக்கும் .அதனால் முதல் மூன்று மாதங்கள் ஒரு பயிர் வளர்த்து அறுவடை செய்வார்கள் .அடுத்த பயிர் ஆறு மாதப் பயிர் .இந்த ஆறு மாதப் பயிரில் விளைந்த நெல்மணிகளே பொங்கலுக்கு உபயோகப்படும் .அநேகமாக அரிக்கிராவி குறுகிய கால பயிராக இருக்கலாம் .ஆனை கொம்பன்,சம்பா ஆறு மாதப் பயிராக இருக்கலாம் . கொட்டாரம் சம்பா என்பது பெரிய அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும் .இது வானம் பார்த்த பூமி என்று சொல்லப்படும் கிராமங்களில் விளைவிக்கப் படும் .இங்கு வாய்க்கால் வசதிகள் இல்லை .மழை பெய்து குளம் நிரம்பியதும் விவசாயம் ஆரம்பிப்பார்கள் .கிணறுகள் உண்டு .குளம் நிரம்பியதும் கிணறுகளும் நிறைந்து விடும் .அதனால் குளத்து நீர் வற்றினாலும் கிணற்று நீர் கை கொடுக்கும் .கடின உழைப்பாளிக்கு கொட்டாரம் சம்பா அரிசி தான் வயிறு நிறைந்து இருக்கும் .சத்து நிறைந்தது . முதலில் நெல் மணிகள் தோன்றியதும் பால் பிடித்து விட்டது என்று சொல்வார்கள் .ஆக நெல் விளைந்ததும் கதிர்களை அறுத்து பெரிய பெரிய கட்டுக்களாக கட்டி களத்து மேட்டுக்கு கொண்டு வருவார்கள் .களத்து மேடு என்பது கதிரில் இருந்து நெல் மணிகளை பிரித்து எடுக்கும் இடம் .பெரிய கட்டில் இருந்து சிறு சிறு கட்டுகள் கதிர்களை பிரித்து அதை சுற்றிலும் கயிறு கட்டி ,அந்த கயிற்றின் முனையை இரு கைகளிலும் பிடித்து கொண்டு தரையில் ஓங்கி அடிப்பார்கள் .அப்போது நெல்மணிகள் கதிரில் இருந்து உதிர்ந்து விடும் .இப்படி இரண்டு மூன்று தடவை அடித்து விட்டு சற்று தள்ளி வீசுவார்கள் .எல்லா கட்டுகளையும் ஓங்கி அடித்து நெல் மணிகளை பிரித்த பின் ஒரு இடத்தில் போடுவார்கள் .அங்கு இரண்டு காளை மாடுகளை ஒரு நீண்ட கம்பில் இரு முனைகளிலும் கட்டி அந்த கதிர் குவியல் மேல் சுத்தி சுத்தி நடக்க விட்டு கதிர்களில் ஏதேனும் நெல் ஒட்டி கொண்டிருந்தால் உதிர்க்க செய்வார்கள் .இதற்கு பெயர் பிணை அடித்தல் .ஒரு ஓரமாக குவித்து வைத்திருக்கும் நெல் மணிகளை முறத்தில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழ செய்வார்கள் .பின் முறங்களால் வீசி நெல்லில் உள்ள தூசு தும்புகளை நீக்குவார்கள் .அதன் பின் சாக்கு மூட்டையில் கட்டி மாட்டு வண்டியில் வீட்டுக்கு கொண்டு வருவார்கள் .முதல் கதிர் அறுத்ததும் ஒரு கைப்பிடி அளவு கதிர்களை தனியாக எடுத்து வைத்து வீட்டுக்கு கொண்டு வந்து வாசல் நிலையில் கட்டி வைப்பார்கள் .இது என்ன சம்ப்ரதாயம் என்று தெரியவில்லை .நாற்கதிர் என்று சொல்வோம் . மீதி நாளைக்கு சொல்றேன் .கை வலிக்குது எழுத முடியவில்லை
பிணை அடித்தல் படம் கிடைக்கவில்லை .உங்கள் யாருக்காவது கிடைத்தால் இங்கு பதியவும் .எத்தனை பேர் இந்த தொடர்களை வாசித்தார்கள் என்று தெரியவில்லை .ஆனாலும் எனக்கு இங்கு பகிர்ந்ததற்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைத்திருக்கிறது .நாளை விவசாயம் நம் வாழ்க்கை முறைகளுக்கு எப்படி உதவுகிறது என்பதை சொல்கிறேன்
அன்புள்ள பெரியம்மா, விவசாயத்தைப் பற்றிய உங்களின் இந்தப் பதிவு இன்னும் பலரைச் சென்று அடைய வேண்டுமென நானும் விரும்புகிறேன். அருமையான விளக்கங்கள், புரிந்து கொள்ள உதவும்படியான படங்களென்று அட்டகாசமான பதிவு ! கைவலித்தாலும்,உடல் சிரமம் பார்க்காமல் இதைத் தட்டெழுதிப் பதிவேற்றம் செய்யும் உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் ! உங்களின் இந்த முயற்சியைப் படிக்கும் வாசகர்கள் தமது கருத்துகளையும் , மேலும் ஏதேனும் தகவல் சேர்க்க விரும்பினால் அவற்றையும்,தத்தமது பின்னூட்டங்களில் அளித்தால் என் போன்றோருக்குப் பெருமகிழ்ச்சியாயும்,உதவியாயும் இருக்கும். செய்வார்களா ? என்றும் அன்புடன், பவித்ரா
@PavithraS பவித்ரா நானும் இந்த தகவல் பலருக்கும் தெரிய வேண்டும் என்று தான் எழுதினேன் .ஆனால் பின்னூட்டங்கள் வரவில்லை .துரதிர்ஷ்டவசமாக இந்த பதிவு தமிழில் அல்லவா வந்திருக்கிறது .பரவாயில்லை .இதை பலரும் படித்திருகிறார்கள் என்று தெரிந்து கொண்டதிலே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி .நான்கு பேர் தந்த பின்னூட்டம் எனக்கு நாலாயிரம் பேர் தந்ததற்கு சமம் .மிக்க நன்றி மா
இன்று இந்த பதிவை படித்தேன். இதை பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும் நீங்கள் விவரமாக எழுதியது மிகவும் உபயோகமாக இருந்தது. சுமார் எத்தனை நாட்கள் இந்த கதிர் அறுத்தல் வேலைகள் நடக்கும்? அரிசி வகைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. எனக்கு தெரிந்தது எல்லாம் சம்பா, ஐ ஆர் 8, சிவப்பு அரிசி, பொன்னி என்ற பெயர்கள் தான். திருமதி பவித்ரா கூறியது போல் இன்னும் பலருக்கு இந்த பதிவுகள் பொய் அடைய வேண்டும். குறிப்பாக சிறுவர்களுக்கு. இதை நீங்கள் சுட்டி விகடன் , கோகுலம் போன்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம். நான் ஐந்தாவது பின்னூட்டம் தந்திருக்கிறேன். அதனால் ஐயாயிரம் பேர் கொடுத்தது போல் .
@kkrish கமலா ஒரே நாளில் கதிர் அறுத்து நெல்மணிகளை கதிரில் இருந்து பிரித்து எடுத்து தூசு போக முறத்தால் நன்கு விசிறி பின் சாக்கு பைகளில் நிரப்பி வீடு கொண்டு சேர்ப்பார்கள் .