நீ வருவதற்கு முன் இருந்த நாட்கள் யாவும் பரணிலே போட்டு வைத்த பழம்பொருள் போலும், என் நினைவிலே மங்கித் தான் கிடக்கிறது என்ற உண்மையை உன்னிடம் சொன்னால் தான் என்ன? என்று ஒரு மனம் எனைக் கடிந்து கொள்ள, ஏன் இப்பொழுதே? என்ன அவசரம் என்று பிறிதோர் மனம் அதற்கு ஒரு பதிலுரைக்க, நீ அருகிருக்க வேறு சிந்தனை எதற்கென்று, நான் அவ்வப்போது சொல்லிக் கொள்வதுண்டு. உன் மனதில் என் இருப்பைத் தெரிந்து கொண்டு அதிலேயே ஒரு நிறைவைக் கண்டதனாலே இதையெல்லாம் சொல்லிக் கொள்வதில்லை நானே! ஒருவேளை நீ நீங்கிச் சென்றாலும் கண்ணே! தவறு என் மேல் தான் என அறிவேன் நானே! அரியதொரு பொருள் கிட்ட நேர்ந்தால் கூட, அருமை தெரியாதிருக்கும் மூடரைப் போல. எனினும் உன்னிருப்பை நான் உணரச் செய்ய, நீ நீங்கலாகாதென உன்னை வேண்டுகிறேன். இருப்பினும் இறக்கலாம் என நானும் எண்ண வைத்திட மாட்டாய் என்றே சொல்லுகிறேன். -ஸ்ரீ