இளங்காலைப் பொழுது. ரயில் நிலையத்தில் காலை நேரப் பரபரப்பு பற்றிக் கொண்டது. சென்னைக்கு போகும் ரயில் கிளம்பத் தயாராகிக் கொண்டு இருந்தது. சம்யுக்தா ரயில் நிலையத்திற்கு கடைசி நிமிடத்தில் வந்து தன் இருக்கையை தேடிக் கொண்டு இருந்தாள். அவள் இருக்கையை கண்டு பிடித்தவுடன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சம்யுக்தா மதுரைக்கு அவள் மாமா வீட்டிற்கு தன் விடுமுறையை கழிக்க வந்து இருந்தாள். விடுமுறையை முடித்தவுடன் சென்னையில் உள்ள தன் அம்மா அப்பாவை ஆவலோடு பார்க்கத் தயாராகிக் கொண்டு இருந்தாள். அவள் அப்பா கிருஷ்ணன் தன்னை சென்னை ரயில் நிலையத்தில் அழைத்துக் கொள்வதாகச் சொன்னார். சென்னை ரயில் பயணம் சுகமான அனுபவமாக இருந்தது. பயணத்தின் போது சகமாணவி ராகவியைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டாள். ராகவியைப் பார்த்தவுடன் அவளை அன்போடு நலம் விசாரித்தாள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். இரவு நேரம் முழுவதும் தூங்காமல் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. மிகவும் இனிமையாக சென்றது பொழுது. படிப்பு, பேச்சு, பாட்டு , ஆட்டம், சாப்பாடு என்று மிகவும் குதூகலித்தார்கள். இப்பயணம் தங்களை மிக நெருங்கிய நண்பர்களாக அமைய வாய்ப்பாக இருந்ததை நினைத்து சந்தோஷப் பட்டார்கள். சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த உடன் சம்யுக்தா தன் அப்பாவைப் பார்த்து ராகவியை அறிமுகம் செய்து வைத்தாள். தங்கள் நட்பை, சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொண்டார்கள். கிருஷ்ணனும் ஆத்மார்த்தமாக அச்சந்தோஷத்தை அனுபவித்தார். இதன் பிறகு சம்யுக்தாவும், ராகவியும் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தனர். ஒரு சமயம் ராகவிக்கு தன் தேர்வுக்கு பணம் கட்ட முடியாமல் போனது. தக்க சமயத்திற்கு சம்யுக்தா தன் தன் அப்பாவிடம் சொல்லி உதவிச் செய்தாள். ராகவி அவளுக்கு மனமுருகிப் போய் நன்றித் தெரிவித்தாள். உணர்ச்சிவசப்பட்டு ராகவி அழுதாள். சம்யுக்தா அவளைத் தேற்றினாள். இன்னொரு சமயத்தில் சம்யுக்தாவை கல்லூரியில் இருந்து வரும் போது ஒருவன் தினமும் அவளை பின் தொடர்ந்தான். அவள் அவ்விஷயத்தைப் பற்றி ஒரு நாள் ராகவியிடம் பகிர்ந்துக் கொண்டாள். அப்பொழுது ராகவி தனக்கு தெரிந்த ஒரு நண்பர் மூலம் அப்பையனிடம் பேசி விவகாரத்தை தீர்த்து வைத்தாள. நாட்கள் மெல்ல நகரத் தொடங்கின. சம்யுகதாவும் ராகவியும் மிகவும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.இருவரும் பட்டப்படிப்பு முடித்து நன்றாகத் தேறி இருந்தனர். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலைக்குப் போகத் துவங்கி இருந்தார்கள். வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் போல ஆகி இருந்தது. அச்சமயத்தில் அவர்களுடன் வேலை பார்க்கும் அசோக் என்பவர் அவர்களுடன் நன்றாகப் பழகத் துவங்கி இருந்தார். அவருக்கு ராகவியை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அதை எப்படி அவளிடம் தெரிவிப்பது என்று தெரியவில்லை. அதனால் அவர் சம்யுக்தாவின் உதவியை நாடினார். சம்யுக்தா முதலில் தயங்கினாள். பிறகு, அவள் தைரியம் கொண்டு ராகவியைத் தேடிச் சென்றாள். ராகவியால் இச்செய்தியை முதலில் கிரஹித்துக் கொள்ள இயலவில்லை. சற்று நேரம் கழித்து, ராகவி சம்யுக்தாவிடம் இதை பற்றி ஆலோசனை கேட்டாள். சம்யுக்தா அசோக்கைப் பற்றி முதலில் விசாரிக்கலாம் என்று முடிவெடுத்தாள். அதனால் ராகவியை இவ்விஷயத்தைப் பொறுமையாக கையாளச் சொன்னாள். சம்யுக்தா அசோக்கைப் பற்றி விசாரித்ததில் எல்லா விஷயமும் நன்றாகவே பட்டது. அதனால் சம்யுக்தா ராகவியிடம் அசோக்கிடம் பேசி சம்மதம் தெரிவிக்கச் சொல்லி அவர்களின் பெற்றோரை வந்து பெண் கேட்கும் படி தெரிவிக்கச் சொன்னாள். ராகவியும் அசோக்கிடம் பேசி அவரின் பெற்றோர்களை வரச் சொன்னாள். அசோக்கின் பெற்றோர்கள் வந்து ராகவியின் பெற்றோர்களிடம் கலந்து பேசி ஆலோசித்தார்கள். ராகவியின் பெற்றோர்களுக்கு அசோக்கை மிகவும் பிடித்து போயிற்று… சம்யுக்தாவின் பெற்றோர்களும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள். அவர்களால் முடிந்த உதவியை ராகவிக்கு செய்து கொடுத்தார்கள். அலுவலகத்தின் எல்லா நண்பர்களும் வந்து கல்யாணத்தில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்….ராகவி சம்யுக்தாவுக்கு மிக்க நன்றி சொன்னாள். ராகவி மிகவும் உணர்ச்சி வசப் பட்டாள். அவள் சம்யுகதாவை கட்டி பிடித்து ஆரத் தழுவினாள். தன் கல்யாணத்தை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்ததற்கு சம்யுக்தாவின் உச்சி முகர்ந்தாள். ராகவியின் மனதில் சம்யுக்தா நீங்கா இடம் பிடித்து விட்டாள். இது அல்லவோ நட்பிற்கு ஓர் இலக்கணம்..!!