1. நிழல் விழுகின்ற மதியப்பொழுதுகளில் உயிர்க்கூடு உடைகிற சப்தத்துடன் துவங்குகிறது யுத்தம். நதியென பெருக்கெடுத்து ஓடுகின்ற குருதியை நாவால் தீண்டி மகிழ்கின்றன கருமை நிற பூனைகள். சுழலும் காற்றில் கலக்கிறது மரணத்தின் வாசம் யாரும் அறியாமல் மெல்ல சிரித்துக்கொள்கிறாய் வீழ்ந்துகிடக்கும் என்னை கடந்தபடி. 2. எங்கிருந்து துவங்கியதென்பதும் எதற்காக இந்த யுத்தமென்பதும் நாம் அறிந்துகொள்ளும் முன்பே நிறைவடைந்துவிட்டது. காயங்களுடன் நம் பழைய பாதையில் பயணிக்கிறோம். அன்று நாம் இணைந்திருந்த புள்ளியில் மரணித்து கிடக்கிறது பன்னீர்ப்பூவொன்று. 3. தீராப்பசியுடன் வலம் வருகின்ற பறவை அல்லது விலங்கு முழுமை பெறாத ஓவியத்தை அழித்து திரியும் விசித்திரன். வெப்பம் உதிர்க்கும் வார்த்தைகள் சுமந்து அலைபவன். விதவிதமான குற்றங்களை யுத்தம் சுமத்தியபோதும் கரையாமலிருந்தேன். உன் தணல் மெளனத்தால் என் கனவுகளை எரிக்கிறாய். இந்த இருண்ட பகலை வெளிச்சமாக்குகின்றன எரியூட்டப்படும் கனவுகளின் சுவாலைகள். தொலைவில், வீறிட்டழும் குழந்தைக்கு மார்பை பொருத்த மறந்து உறங்குகிறாள் ஒருத்தி. -நிலாரசிகன்.