இந்திரியங்களை அடைக்கும் வழி. ++++++++++++++++++++++++++ மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத் தான் செய்யும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லா இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம். ----------------------------------------------------------------------------- நம் பரமாச்சார்யர் நமக்கு மிகவும் முக்கியமான கருத்தை எளிய வார்த்தைகளால் அழகாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட்டார். ஏற்படும் சிறு, சிறு சந்தேகங்களையும் தெளிவுபடுத்திவிட்டார். ஆத்ம சக்தி ஓங்கவேண்டும் உலகிலே...என்ற மகா கவி பாரதியின் வாக்கும் நினைவுக்கு வருகின்றது. முயல்வோம். "பாரதிமணியன்"