மழைத்துளி மழலைகள் தவழ்வதைக் கண்டு குழைந்திடும் பூமகள் நெஞ்சம் - கன்னக் குழிவிழும் சிரிப்பை சேயிடம் காண விழிவழி வெளிப்படும் தாய்மை . குளக்கரை மேட்டில் தவசியைப் போலே உளமொன்றி நிற்கும் கொக்கு - இறை விளக்கத்தைத் தேடி அலைகின்ற மனிதர்க்கு குளக்கரைக் கொக்கே மனது . சேற்றில் முளைத்த செந்தாமரை என்ற கூற்றும் இங்கே உண்டு - மழைக் காற்றும் குப்பையைக் கோபுரம் தன்னில் ஏற்றிடும் காட்சியும் உண்டு . கோர்த்த மாலையில் கோதையின் காதலைப் பார்த்தான் துயிலும் அரங்கன் - அன்பிலே வார்த்த அவளது பாவைப் பாடலால் சேர்த்தான் திருவடி தன்னில் . நவிலும் சொற்களால் நலிந்தவர் பயனுற குவியும் புண்ணியம் பாரீர்- மடல் அவிழ்ந்த மலர்களில் வழிந்திடும் தேனென செவிக்ககுணவாகும் நற் சொற்கள் . தேயும் நிலவின் தண்ணொளி பூமியில் பாயும் இரவுப் பொழுது - குளிர் காயும் குளத்தில் பூத்த அல்லியும் ஓயும் ஓர்பாதி உலகு . காலைப் பரிதியின் பேரொளி பட்டு சோலை மலர்வதைக் கண்டு - பூ மாலை தாங்கிய கொடிகளின் திருமண ஓலை ஏற்றிடும் வண்டு . இருமனம் தன்னை அன்பிலே இணைத்து ஒருமனம் ஆக்கும் காதல் - அதைத் திருமணம் தன்னில் முடிப்பது காதலர் இருவரும் கொண்ட ஆழம் . மாதர் தீங்குரல் பாட்டில் வடிவது கோதகன்ற தேன் அமுது- அவர் கீதம் இசைக்க அமைதியில் ஆழும் நாதன் படைத்த நல்லுலகு . கரத்தில் வீணையை ஏந்தும் வாணியைக் கருத்தில் நிறைப்பது சிறப்பு - கல்வி வரத்தை அருளிடும் தேவியின் பாதங்கள் சிரத்தில் ஏற்பது உவப்பு . Regards, Pavithra (பி . கு @saidevo , ஐயா , இவை மரபில் சேருமா ? )