துணியினை விரித்து ஓடையில் மீன் பிடிப்பதைப் பற்றி நான் கேட்டதுண்டு. அவன் விழி விரிய அதிலே நான், விழுந்ததை நீவிர் அறிந்ததுண்டோ? ஒரு முறை குழந்தையெனத் தோன்றும், பின்னொரு முறை தந்தையாய்க் காட்டும். கொஞ்சுகையில் கணவனென மாறும், அம்முகமே ஒரு விந்தையெனத் தெரியும். காதல் எனும் அம்மெல்லிய உணர்வு, என்னவென்று அறியாமல் இருந்தேன். அவனிடம் நான் கொண்டுள்ள உறவு அது தானோ என இன்னும் அறியேன். பிறருக்காக உழைப்பதில் சுகம் உண்டு, எனத் தெரிந்து கொண்டது அவனாலே! அவனுக்கென வாழ்வதில் சுகம் கண்டு, மகிழத் தான் முடிகிறது என்னாலே! என் முகம் கோண ஒரு வார்த்தை சொல்லாது, என் செயல்களில் ஒரு போதும் குறுக்கிடாது, எனை விட என்னை அதிகம் நம்புகிறவனை, என்றும் பிரிந்திடாது இருந்திடவே என்னை, படைத்தவனை நான் தினமும் வேண்டி, பணிகளைத் தொடங்குவேன் விரைவாய். அவனை எனக்கு ஈந்ததற்காய் நன்றி கூறி நிறைந்திடுமே என் விழிகள் நிறைவாய்! -ஸ்ரீ