மகாளய பட்சம் மகிமை (2-9-20 முதல் 17-9-20 வரை) மகாளய பட்சம் என்பது ஒரு காலத்தில் ஆசியா முழுக்க இருந்த நம்பிக்கை, ஆசியா முழுக்க இந்துமதம் இருந்ததற்கான பெரும் ஆதாரம். சீனருக்கும் இம்மாதம் முன்னோர்களுக்கான மாதமே, அவர்கள் நம்பிக்கைபடி இரு வகையில் கொண்டாடுவார்கள், முதலில் நம்மை போல இந்த மாதத்தின் தேய்பிறை காலம் முன்னோர்கள் வந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என பூஜை, படையல் என அனுசரிப்பார்கள். இரண்டாம் பட்சம் அதாவது வளர்பிறை காலம் என்பது பேய் வரும் காலமாம் அதை வெடிபோட்டு விரட்டி அடிப்பார்கள். இம்மாதம் முதல்பாதியில் சொர்க்கமும் பின் இரண்டாம் பாதியில் நரகமும் திறக்கபடும் என்பது அவர்கள் நம்பிக்கை. முன்னோர்கள் சொர்க்கத்தில் இருந்தால் மாதத்தின் முதல் பாதியில் சந்திக்கவும், நரகத்தில் இருந்தால் இரண்டாம் பாதியில் சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்களோ என்னமோ? இது இன்றைய சீன மக்களின் கிழக்காசிய மக்களின் நம்பிக்கை என்றாலும் நம் இந்தியாவின் மகாளாய பட்சத்தின் நம்பிக்கையோடு பொருந்தி வருதலை நீங்கள் உணரலாம். மகாளயம் என்றால் கூட்டம், பட்சம் என்றால் பதினைந்து நாட்கள், அன்று முன்னோர்கள் பெரும் கூட்டமாக வருவார்கள் என்பதே அதன் பொருள் இந்து தர்ம சாஸ்திரம் மூன்று முக்கிய கடமைகளை சொல்கின்றது. சந்ததிகளை வழிநடத்தி பாதுகாத்தல், பெற்றவர்களை பராமரித்தல் அப்படியே முன்னோரின் ஆத்மாவிற்கான வழிபாடுகளை சரியாக செய்தல். ஆம், பெற்றவருக்கும் பிள்ளைகளுக்கும் செய்யும் அதே கடமைகளை மறைந்தோருக்கும் நல்ல இந்து செய்ய வேண்டும் என்கின்றது அது. அவர்கள் நினைவுகளை மறப்பது பாவம் என்றும், அவர்களுக்கான திதியினை மிக சரியாக செய்யாதது மகா பாவம் என்றும் சொல்கின்றது ஒரு மனிதனின் வாழ்வு அவன் மரணத்தோடு முடிவதில்லை, சூட்சும சக்தியாக குறிப்பிட்ட காலம் வரை அந்த ஆன்மா தன் குடும்பத்தை காக்கின்றது, அரூப சக்தியாக பல நலங்களை தன் சந்ததிக்கு வழங்குகின்றது என்பது இந்துக்களின் நம்பிக்கை. அப்படி ஆவணி மாதத்தின் தேய்பிறை காலமான 15 நாட்கள் இங்கு மகா முக்கிய மகாளய காலம், கடைசியில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை. தை அமாவாசை, ஆடி அமாவாசையினை போல மிக சிறந்தது மகாளய அமாவாசை அன்று மட்டும் அல்ல, மற்ற 15 நாட்களும் அவர்களை நினைந்து பிரார்த்தித்தலும் அவசியம் ஒவ்வொரு நாள் பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு, 15ம் நாள் மொத்த ஆசியும் கிடைக்கும். இந்த 15 நாளில் தன் வீட்டு முன்னோர்கள் தவிர யாரும் நினையாத ஆத்மாக்களுக்கும் நமக்கு நல்வழி காட்டிய ஆத்மாக்களுக்கும் ஒரு நாள் உண்டு. ஆண்டுக்கு முன்னோருக்கு 96 தர்பணங்கள் கொடுக்க வேண்டும் என்பது விதி, ஆனால் 3 முதல் 4 தர்பணங்களே கொடுக்கபடுகின்றன அதையும் முறையாய் கொடுத்தல் நலம். இந்த சாஸ்திரங்களையெல்லாம் முன்னோரின் ஆன்மாவுக்கு இதனால் பலன் உண்டா என பகுத்தறிவில் கேட்டால் அது மடமை. முன்னோரின் அருளோ ஆசியோ அது ஒருபக்கம் நிச்சயம் கிடைக்கும் என்றாலும் அதைவிட முக்கியமானது நாம் காட்டும் நன்றிகடன். முன்னோர்கள் எவ்வளவோ காரியங்களை உழைத்து வைத்து உருவாக்கி சென்றார்கள், காட்டை திருத்தி கழனியாக்கியது முதல் காட்டு மாட்டை பிடித்து பழக்கி பால் கண்டு நெய்கண்டது முதல்வெறும் பயிரை பெரும் விளைச்சலாக்கி உணவினை கொடுத்து, சிந்தனை மூலம் மொழி கொடுத்து வழி கொடுத்து வாழும் நெறி கொடுத்தெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. ஒரு குவளை சாதம் வைத்து அதில் ஒரு அகப்பை குழம்பு ஊற்றும்பொழுது ஒரு கணம் சிந்தியுங்கள். வீடு கட்ட செங்கலை கண்டறிந்தது ஒருவன், மரம் அறுக்க இரும்பை செய்தவன் ஒருவன், வீடு கட்டும் வழி அறிந்தவன் ஒருவன் அதில் நாம் அமர்ந்திருக்கின்றோம்நெல்லை கண்டறிந்தவன் ஒருவன், வளர்க்கும் முறை அறிந்தவன் ஒருவன் , அதை அரிசியாக்கும் வழி கண்டவன் ஒருவன் ஒரு அகப்பை குழம்பில் எத்தனை வகை பொருள் சேர்க்க வேண்டும் அதை விளையவைத்தவன் யார்? சேர்க்க சொல்லி கொடுத்தவன் யார்?, எத்தனை வகை சமையல், எவ்வளவு கலவை, எவ்வளவு பொருட்கள் இதையெல்லாம் சேர்த்தது யார்? சமையல் கலையினை உருவாக்கியது யார்? ஒவ்வொன்றையும் இப்படி நினைத்து பாருங்கள், தலைக்கு எண்ணெய் வைப்பதில் இருந்து, அந்த எண்ணெயினை எப்படி கண்டறிந்தார்கள் என்பதிலிருந்து , அணியும் உடை நகையில் இருந்து காலில் மாட்டும் செருப்புவரை நினைத்தாலே மலைப்பாகும். வீடு,காடு, கழனி, கிணறு என ஒவ்வொன்றாய் சிந்தியுங்கள் மாபெரும் உழைப்பினை அவர்கள் கொட்டியிருப்பது தெரியும். அவர்கள் வெட்டிய குளங்களையும் கட்டி வைத்த ஆலயங்களையும் பாருங்கள் நன்றாய் புரியும். நாமெல்லாம் சுகமாய் வாழ அவர்கள் செய்திருக்கும் காரியம் மிக உன்னதமானது, யாருக்காய் செய்து வைத்தார்கள், நமக்காய் உழைத்தார்கள். அந்த நன்றிகடனில் அவர்களுக்கு சில மணிதுளிகளை தினமும் ஒதுக்க சொல்வதே இந்த மகாளய பட்சம் நாட்கள். ,இந்துக்களின் ஒவ்வொரு ஏற்பாடும் அர்த்தமுள்ளது, ஆழ்ந்த ஞானமிக்கது. ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் நினைவு என சொன்னார்களே, இந்த தை அமாவாசை, ஆடி அமாவாசை ,மகாளய அமாவாசை என முன்னோரை வணங்க சொன்னார்களே ஏன்? அவர்கள் நினைவு அடிக்கடி ஒருமனிதனுக்கு வரவேண்டும் , அது வர வர அவர்கள் பாடுபட்டு உருவாக்கியதை காக்கும் கடப்பாடும் நினைவும் மனிதனுக்கு வரும். , அரும்பாடுபட்டு முன்னோர் உருவாக்கியதை இப்படி அழியவிட கூடாது எனும் எண்ணம் பெருகும், அதில் வீட்டின் சொத்து முதல் செல்வம் வரை நிலைத்திருக்கும்அந்த நினைப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் இருந்திருந்தால் இந்து ஆலயங்கள் இப்படி பாழ்பட்டிருக்காது. முன்னோர் நினைவு சரியாக கொண்டிருந்தால் அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய சிலைகள் கொள்ளை போயிருக்காது. முன்னோரின் தியாகம் அடிக்கடி நினைவுகூறபட்டால் குளங்களும் ஏரிகளும் இப்படி நாசமாயிராது, கால்வாய்கள் மறைந்திருக்காது. முன்னோரின் தியாகம் அடிக்கடி நினைவுகூறபட்டால் சுதந்திர இந்தியாவில் இவ்வளவு லஞ்சமும் லாவண்யமும் பெருகியிருக்காது. ஆம் முன்னோர்களின் நினைவு அவசியம், அது எக்காலமும் இருந்து ஒருவனை வழிநடத்துதல் வேண்டும். இஸ்ரேலிய யூதர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பது விஷயமல்ல ஆனால் பலம் வாய்ந்தவர்கள் பணக்காரர்கள், எப்படி அப்படி உருவானார்கள்? முன்னோர் வாழ்ந்த இஸ்ரேலை காக்க வேண்டும், அவர்கள் ஆசைபட்டபடி அது யூதநாடாக வீற்றிருக்க வேண்டும் எனும் முன்னோர் நினைவே அவர்களை இவ்வளவு தூரம் வளர்த்திருக்கின்றது. இது யூத இனத்தில் மட்டுமல்ல, பல குடும்பங்களில் கூட காணலாம். முன்னோர் மேல் கொண்ட பற்றும் பாசமும் ஒருவனை நல்வழிபடுத்தும், உழைக்க சொல்லும், கடமையினை சரியாக செய்ய சொல்லும் அதில் நல்வழியில் தானே அவன் நடப்பான். எந்த முன்னோரும் நாசமாகும் வழியினை சொல்லியிருக்க மாட்டார்கள், எந்த முன்னோரும் தன் வாரிசுகள் சண்டையிட்டு சாகும் வழியினை சொல்லியிருக்கமாட்டார்கள், அவர்கள் தன் வாரிசு உருப்பட நிச்சயம் ஒரு நல்வழி சொல்லியிருபார்கள் அதை மிக சரியாக பிடித்து நடத்தல் வேண்டும். அப்படி நடந்தால் அவன் மிக சரியானவனாக இருப்பான் முன்னோர் விட்டு சென்ற பாரம்பரியத்தையும் பொருளையும் உழைப்பையும் காப்பான் அதை இன்னும் மேம்படுத்தி தன் சந்ததிக்கு விட்டு செல்வான். இந்த நுட்பத்திலே இந்துக்கள் மூதாதையரை வழிபட சொன்னார்கள். அதை அமாவாசையில் வைத்தார்களே ஏன்? ஏ முன்னோர்களே நீங்கள் இல்லாவிடில் நாங்கள் இருட்டிலே இருப்போம், அமாவாசைக்கு அடுத்து வளர்பிறை வருவது போல உங்களால் நாங்கள் வளர்ந்தோம் என குறிப்பால் உணர்த்துவதற்காக ஆற்றங்கரையிலே, குளத்து கரையிலே தர்ப்பணம் என சொன்னார்களே ஏன்? ஆற்றங்கரையில்தான் , குளத்து வரப்பிலேதான் முன்னோர்கள் உழைத்தார்கள் என்பதை சொல்வதற்காக, அந்த பிண்டத்தையும் தானியத்தையும் வைக்க சொன்னார்களே ஏன்? இந்த சோற்றதைத்தான் இந்த தானியத்தைத்தான் அவர்கள் விளையவைத்து உனக்கு ஊட்ட பாடுபட்டார்கள், இன்று நீ நலமாய் உண்ண அவர்கள் உருவாக்கிய வயலும் கழனியும் காரணம் அவர்களை மறக்காதே என சொல்வதற்காக. தெய்வத்தின் முன்னால் செய்ய சொல்லி சூரியனை நோக்க வைத்தார்களே ஏன்? இந்த தெய்வம் உன் மூதாதையர் வணங்கியது, இந்த சூரியன் அவர்கள் வழிபட்டது இதையெல்லாம் நீயும் தொடரவேண்டும் என்பதற்காக. முன்னோர் வழிபாட்டின் ஒவ்வொரு செயலும் ஆழ்ந்த அர்த்தமும் சிந்தனையும் கொண்டவை, சில ஏற்பாடுகள் அப்படியே கண்ணீரை வரவழைப்பவை. மிக ஞானமான இந்து சமூகம் மானிட மனம் அறிந்து குணம் அறிந்து அன்றே அந்த ஏற்பாடுகளை செய்திருந்தது. வழிபடல் என்பது அவர்களை நினைத்து மந்திரம் சொல்லி வணங்கிவிட்டு வருவதல்ல, அவர்கள் நினைவில் கலந்திருப்பதும் அவர்கள் விட்டு சென்றவற்றை காத்து நிற்பதுமாகும். அந்த பொறுப்பும் நினைவும் ஒவ்வொருவனுக்கும் வந்துவிட்டால் வீடு நலமாகும் ஊர் நலமாகும் , நீர் நிலையும் ஏரிகளும் ஆலயங்களும் ஆலய நிலங்களும் அப்படி காக்கபடும், எதுவும் அழியாது. முன்னோர்களை வணங்கினால் எல்லா நலமும் கைகூடும் என்பது இதனாலே, மகாளய பட்சத்தின் ஏற்பாடும் வழிபாடும் இந்த நோக்கத்தினாலே. ஒவ்வொருவரும் இந்நாட்களில் அவர்கள் முன்னோரை வணங்கலாம், பிரார்த்திக்கலாம், விரதமிருந்து படையலிட்டு வழிபடலாம். முன்னோர்கள் என்றால் உங்கள் வீட்டு முன்னோர்கள் மட்டுமல்ல. குளம் வெட்டியவர்கள், அணை கட்டியவர்கள், விவசாயம் சொல்லி தந்தவர்கள். ஆலயம் அமைத்தவர்கள், வழிபாட்டு முறையினை சொல்லிதந்தவர்கள், கலைகளையும் இன்னும் பலவற்றையும் வளர்த்தெடுத்தவர்கள் தொடங்கி நாட்டின் சுதந்திர போராட்ட தலைவர்களும் இப்பொழுதும் நாட்டுக்காய் செத்தவர்கள் வரை நீண்ட வரிசை உண்டு. உங்களுக்கு கல்வி தந்த ஆசிரியரும் உண்டு அதற்கான சாலைகள் அமைத்த பெரியவர்களும் உண்டு. அவர்களுக்காக இக்காலகட்டத்தில் பிரார்த்தியுங்கள், மனம் விட்டு பிரார்த்தியுங்கள், எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவு மனமார செய்து பிரார்த்தியுங்கள் நிச்சயம் அவர்கள் வந்து ஆசீர்வதிப்பார்கள், ஒருவேளை அவர்கள் வராவிட்டால் அந்த நன்றி உணர்வுக்காக தெய்வமே வந்து உங்களை ஆசீர்வதிக்கும், உங்கள் வாழ்வு செழிக்கும். வாட்ஸ்ஆஃப் நன்றி.