அஷ்டமா அஷ்டைஸ்வர்ய சக்திகளை அருளும் திருநாளே பூரட்டாதியும், உத்திரட்டாதியும் இணையும் பௌர்ணமித் திதி. அனந்த சயனக் கோலம் கொண்ட மூர்த்திகளைத் தரிசிப்பது எத்தனையோ துயரங்களுக்கு, துன்பங்களுக்கு இடையிலும், நல்ல மன ஆனந்தத்தைப் பெற்றுத் தருவதாகும். அனந்த சயனம் என்பது (யோகப் பூர்வமான) கோலமாகும். வெறும் உறங்கும் கோலம் மட்டுமன்று. ஆனந்த யோகம், சயன யோகம் என்ற வகையில், ஸ்ரீரங்கநாத மூர்த்தியும், ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணரும், சிவ மூர்த்தியும் பல விதமான அனந்த சயனக் கோல வடிவுகளைக் கொண்டு அருள்கின்றனர். இத்தலங்களில் பௌர்ணமி ஆராதனைகளை ஆற்றுவது மிகவும் விசேஷமானது. பக்திப் பூர்வமாக வழிபட்டிட, அனந்தமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் உரித்தான விசேஷமான மகத்துவங்கள் உண்டு. இவ்வகையில் பூரட்டாதி, உத்திரட்டாதி என இரு புரோட்டப் பத நட்சத்திரக் கால்களில் பௌர்ணமித் திதி நிலவும்போது அற்புதமான பலன்கள் பெருகுகின்றன. பூரட்டாதி நட்சத்திரத்தின் ஒரு பாத்த்தில் பௌர்ணமி திதி ஆரம்பித்து உத்ரட்டாதி நட்சத்திரத்தின் ஒரு பாத்த்தில் பௌர்ணமி திதி நிறைவு அடைவது சிவபுரோட்டாதி பௌர்ணமி எனப்படும்.