போட்டிக் கதை தேவதை.... - பி.அக்ஷயா, பதினொன்றாம் வகுப்பு. ஏ.ஆர்.சி. காமாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை பள்ளியில் இருந்து வீடு திரும்பினாள் எட்டாம் வகுப்பு படிக்கும் நிலா. ஓவியர் சாரதி வரைந்த அழகான பெண்ணோவியம் ஒன்று அவளது வீட்டின் வரவேற்பறையில் மாட்டப்பட்டு இருந்தது. அந்தப் படத்தில் இருக்கும் அழகுப் பெண்ணைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். அடுப்படியில் இருந்து வெளியே வந்த அம்மா நிர்மலா, நிலா! பள்ளியில் இருந்து வந்து ரொம்ப நேரமாச்சா?" என்று கேட்டதுதான் தாமதம் ‘ஓ’வென அழ ஆரம்பித்தாள். அம்மா! இனி நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன். என்னை எல்லாரும் ‘கருப்பி, கருப்பி’ன்னு கிண்டல் பண்றாங்க. என்னுடைய அடையாளமே கருப்பின்னு ஆயிடுச்சும்மா. என் நிஜப்பேரை மறந்துட்டாங்க." அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு நிலா அழுதாள். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் தினமும் நிலா அழுவதும் அம்மா அவளைத் தேற்றுவதுமே வாடிக்கையாகிவிட்டது. நிலாக் கண்ணு! உன் நிறம் கருப்புதான். ஆனால் உன் மனசு அழகும்மா. உன் முகம் அழகா இல்லாட்டிப் பரவாயில்லை. அகம் அழகுதான்" - அம்மா சொல்ல, அம்மா! யாரும்மா அகத்தைப் பார்க்குறாங்க? என்னை ஏன்மா பெத்தீங்க? என்னை உங்க வயிற்றுல இருக்கும்போதே கொன்னுருக்கலாமே" - நிலாவின் பேச்சைக் கேட்ட அவளது அம்மாவிற்கு மனம் கலங்கியது. முதல் மதிப்பெண்களையே பெற்றுவந்த நிலா, வர வரத் தன் தாழ்வு மனப்பான்மையால் மதிப்பெண்கள் குறைவாக எடுக்கிறாள். விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் என்று எல்லாவற்றிலும் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளும் நிலா, இந்த வருடம் எந்தப் போட்டியின் பக்கமும் திரும்பவே இல்லை. அவளுக்குத் தாழ்வு மனப்பான்மை மேலோங்கி விட்டது. இதை நினைத்தபோது அம்மாவின் மனம் கலங்கியது. அப்போது ஆபிஸிலிருந்து உள்ளே நுழைந்த அப்பா, ஏண்டா நிலா அழற?" என்று வினவ, அப்பா! பள்ளிக்கூடத்தில் என் கூடப் படிக்கும் பிரியா, நிஷா, பார்கவி எல்லாம் என்ன ‘கருப்பி, கருப்பி’ன்னு கிண்டல் பண்ணிட்டே இருக்காங்கப்பா. எனக்குப் பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை. நான் ரொம்ப அசிங்கமா இருக்கேன்பா" என்று அழுதுகொண்டே சொல்ல, அப்பாவோ, நிலாக்குட்டி! உன்னை நான் பியூட்டி பார்லருக்கு கூட்டிட்டு போறேன். அதுக்கப்புறம் உன்கூடப் படிக்கிறவங்க எல்லாரும் உன்னை தேவதைன்னு கூப்பிடுவாங்க" என்ற அப்பாவிடம், இல் லப்பா! பார்லருக்குப் போனாலும் என் கோணல் மூக்கு, ஆந்தை முழி, அட்டைக் கரி நிறம் இதை எல்லாம் சரி செய்யவே முடியாதுப்பா. கடைசி வரைக்கும் எனக்கு இதே நிலைமைதான். எனக்கு வாழவே பிடிக்கலைப்பா" என்று அழுத நிலாவை, அப்பா தன் மடியில் படுக்க வைத்து, அவள் தலையை வருடி, ஆறுதல் சொன்னார். அப்பாவின் மனம் முழுக்க கனம் பரவியது. எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் நிலா, இப்போதெல்லாம் சோகமாகவே காட்சி அளிக்கிறாள். முன்பெல்லாம் கலகலவென இருந்த அவள், இப்போது தன் அறைக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறாள். பிறரின் ஏளனத்துக்கு ஆளானதால் வாழ்க்கையையே தொலைத்ததா உணர்ந்தாள். அவளைப் பழைய நிலைக்கு மாற்ற அப்பா வழிகளை யோசித்தார். அன்று ஞாயிற்றுக் கிழமை, நிலாவிடம், நிலாக் கண்ணு. இன்றைக்கு உனக்குப் பிடிச்ச ஓவியர் சாரதி, தன் ஓவியக் கண்காட்சியை சென்னையில் திறக்க வருகிறாராம். நீயும் வா. நாம் இருவரும் போய் அவரைப் பார்த்துவிட்டு வரலாம்" என்று அப்பா சொல்ல, ஒரே துள்ளலில் எழுந்து உட்கார்ந்த நிலா, நிஜமாகவா சொல்றீங்க! நான் வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஓவியர் சாரதியைப் பார்க்க ஆசைப்பட்டேன். உடனே கிளம்பறேம்பா" என்று புறப்பட ஆயத்தம் ஆனாள். அவள் பெற்றோருக்கு அவள் சுறுசுறுப்பானதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கண்காட்சியின் வாயிலில் ஊனமுற்ற ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் பார்க்க பயங்கரக் கருப்பா இருந்தார். அவருக்கு ஒரு கண் பார்வை இல்லை. இரண்டு கால்களும் இல்லை. உள்ளே சென்ற நிலா, கண்காட்சியில் அழகழகான ஓவியங்களைக் கண்டு லயித்தாள். ஓவியர் சாரதியைப் பார்க்க விழைந்தாள். அங்கு கோட், சூட் போட்டு உயரமாக அழகழகான நபர்கள் நிறையப் பேர் ஓவியங்களை விலைக்கு வாங்கி கொண்டும், விலையைக் கேட்டுக் கொண்டும் கூட்டமாக நின்றனர். இவர்களில் யார் சாரதி?’ என்று எண்ணிக் கொண்டே கூட்டத்தில் வினவ, அவர்களில் ஒருவர், பாப்பா! சாரதி சார் காற்றாடக் கண்காட்சி வாயிலில் அமர்ந்திருக்கிறார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாரே, அவர்தான் சாரதி சார்" என்று சொல்ல, நிலா அதிர்ச்சியாகிவிட்டாள். உடனே ஓடிப்போய் அவரைப் பார்க்கச் சென்றாள். அவரின் கையைப் பற்றி, சாரதி சார்! நான் உங்களுடைய தீவிர ரசிகை. ஆனா இதுவரை உங்களுக்கு அங்கஹீனம் என்று எனக்கு தெரியாது சார்" - நிலா சொல்ல, ஓவியர் சாரதி லேசாக சிரித்துக்கோண்டே, தன் கதையை நிலாவிற்குச் சொல்ல ஆரம்பித்தார். நான் 8 வயது வரை நார்மலான குழந்தையாகத்தான் இருந்தேன்.பள்ளிக்கூடத்தில் எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் பரிசு வாங்குவேன். ஒரு சாலை விபத்தில் ஒரு கண்ணையும், இரு கால்களையும் இழந்தேன். அது எனக்குப் பேரிடிதான். ஆனால் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் எழ ஆரம்பித்தேன். ஆண்டவன் என் இரண்டு கைகளை ஒன்றும் செய்யாமல் விட்டு இருக்கிறாரே... நான் ஏதாவது சாதிக்கத்தான் கைகள் இருக்கின்றன என்று தோன்றியது.பெற்றோரின் உதவியோடு ஓவியப் பயிற்சியில் ஈடுபட்டேன். சாதிப்பேன் என்ற என் நம்பிக்கை எனக்கு ஆர்வத்தைக் கொடுத்தது; ஆர்வம் என்னை முயற்சி மேற்கொள்ள வைத்தது; முயற்சி என்னை உழைக்கத் தூண்டியது. உழைப்பு வாழ்வில் என்னை உயர்த்தியது. நான் வரைந்த ஓவியங்களுக்கு உள்நாட்டில் மட்டும் அல்ல... வெளி நாட்டிலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. அதன் மூலம் பணம், புகழ், நிம்மதி எல்லாவற்றையும் ஈட்டி விட்டேன். இன்று உலகம் புகழும் ஓவியர் சாரதியா நிற்கிறேன். பாப்பா! நீயும் வாழ்க்கையில் சாதிக்கணும் புரியுதா? நல்ல விஷயங்களில் கெட்டதைப் பார்ப்பவன் வாழ்வில் வீழ்வான். கெட்ட விஷயங்களிலும் நல்லதைப் பார்ப்பவன் வாழ்க்கையில் வெல்வான்" என்றார் ஓவியர் சாரதி. அவரது வார்த்தைகள் நிலாவின் மனதில் பதிந்தன. ஒரு கண், இரு கால்கள் இல்லாத ஒரு நபர் நம்பிக்கை என்ற கால்களை ஊன்றி வாழ்க்கையில் சாதிக்கிறார் என்றால், எல்லா உறுப்புகளும் நன்றாகப் படைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி நான் ஏன் சாதிக்க முற்படக்கூடாது?" என நினைத்தாள். பத்து மாதங்கள் சென்றன. பள்ளி ஆண்டு விழாவில் நிலா எல்லாத் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்றாள். பேச்சுப் போட்டியில் மூன்று பரிசுகள், கட்டுரைப் போட்டியில் இரண்டு பரிசுகள், விளையாட்டுப் போட்டிகளில் நான்கு பரிசுகள், பாட்டு மற்றும் நடனப் போட்டிகளில் இரண்டு பரிசுகள் எனப் பல பரிசுகளை வாங்கி குவிக்க, நிலாவின் தோழிகள் ‘நிலா, நிலா’ என நிலாவையே கதாநாயகியா நினைத்து வலம் வந்தனர். அப்போது அம்மா பார்தாயாயா நிலா... அன்றைக்குக் கருப்பியாத் தெரிஞ்ச நீ, இன்றைக்கு உன் திறமையால அழகான தேவதையாத் தெரியற.." என்று சொல்ல நிலா மனதில் சந்தோஷ அலை பரவியது. =============================================== ஒரு கண், இரு கால்கள் இல்லாத ஒரு நபர் நம்பிக்கை என்ற கால்களை ஊன்றி வாழ்க்கையில் சாதிக்கிறார் என்றால், எல்லா உறுப்புகளும் நன்றாகப் படைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி நான் ஏன் சாதிக்க முற்படக்கூடாது?" என்ற நினைப்பை பாராட்டியே தீரவேண்டும். "Bharathy Manian" P.S. Comments are welcome.