பயணக் க(வி)தைகள் ..... பயணம் சென்று வந்தோர், அனுபவக் கதை சொல்ல விழைவார்! பயண அனுபவங்களைக் கவிதையாகச் சொன்னால் என்ன, என்று மனத்தில் எழுந்த கேள்விக்கு விடையாக வருகின்றன, பயணங்கள் கணத்தில் எனக்குள் தோற்றுவித்த, இந்த எளிய நடைக் கவிதைகள்! வள்ளுவர் மீது உள்ள ஆழ்ந்த மதிப்பால், இரு வரிக் கண்ணிகளாக, தெள்ளு தமிழ்; ஆனால் கொஞ்சம் ஆங்கிலம் கலந்து அமைத்தேன்! அன்புடன் என்னை ஊக்குவிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு, எந்தன் அன்பான வணக்கம் கூறி, தொடரைத் தொடங்குகின்றேன்! நன்றி! உலகம் உய்ய வேண்டும், :thumbsup ராஜி ராம்
மயங்க வைக்கும் மலேசியா – 1 இறையருள் இருந்தால்தான் வரும் நெடும் பயணங்கள்; குறையின்றிக் கிடைக்கும் பலவிதமாய் அனுபவங்கள்! எண்பது தாண்டிய அன்னை பாஸ்போர்ட் எடுத்ததும், அன்புடன் அழைப்பு வந்தது மலேசியப் பயணத்துக்கு! பல்கலைக்கழக DEAN ஆகப் பணிபுரியும் அண்ணன் பல இடங்கள் சுற்றி வர ஆசைகாட்டி அழைக்க, தேடல் பல இன்டெர்நெட்டில் செய்து, ஒரு வித ஆவல் உந்த, நாங்கள் எண்ணினோம் பயணம் செய்ய. புதிய அறிமுகமாய் சென்னை பினாங்கு பாதையில் புதிய விமானங்கள் பறப்பது ஏப்ரல் மாதம் தொடங்க, கொளுத்தும் அக்னி நட்சத்திர சூட்டையும் பாராது, எடுத்தோம் டிக்கட்டுகள் மே பத்தாம் தேதி பறந்திட. விருந்தும் மருந்தும் மூன்று நாள் எனினும், நன்கு விருந்தோம்பும் அவர்களிடம் ஆறுநாட்கள் இருப்போம்! சென்னை ஏர்போர்ட்டில் முதல் அனுபவமே அன்னையை மிகவும் இக்கட்டில் மாட்டியது! சக்கர நாற்காலிக்கு வேண்டுகோள் விடுத்தும், அக்கறையாகப் பணி புரியும் ஆட்களுக்கோ பஞ்சம்! எங்கள் விமான அலுவலகமே திறக்காது மூடிக்கிடக்க, தங்கள் வேலைகளையே அவரவர் பார்த்து நடக்க, நேரம் செல்லச் செல்ல என்னவர் பரிதவிக்க, ஓரமாய்க் கிடக்கும் டிராலியில் ஒன்றை எடுத்து, ‘ஏறுங்கள்’ என அன்னையிடம் கூறி, அதில் அமர்த்தி வேறு வழியின்றி, ‘புறப்பாடு’ கதவு வரை உருட்டி, முதல் கோணல், முற்றும் கோணல் ஆகக்கூடாதென முதல் வேலையாக இறைவனை வேண்டி இருக்க, ஒருவழியாக ஊழியர் ஒருவர் உதவி செய்ய வந்திட, இருவர் சென்று போர்டிங் பாஸ் வாங்கி வந்தோம். பயணிகளின் கூட்டம் ஹஜ் யாத்திரையால் நிரம்ப, பயம் வந்தது சரியாக விமானம் ஏற முடியுமா என்று! நல்ல வேளையாக போர்டிங் பாஸ் எடுத்தவர்களை அந்த வரிசைகளைத் தாண்டி வரவைத்து உதவினர்! இருக்கையில் அமர்ந்ததும்தான் பயணம் உறுதியானது! இருக்கிறான் மேலே ஒருவன் காத்திட எனப் புரிந்தது! அதிகாலை தயாரித்த சிற்றுண்டியை உண்டபின், புதிதாகத் தயாரித்த காபியை வாங்க விழைய, நம் இந்திய ரூபாயே கொடுக்கலாமே எனக்கூறிக் கையில் ஏந்திய கால்குலேட்டரில் கணக்கிட்டு, மூன்று நூறு நோட்டுக்களை வாங்கிய அழகி தந்தாள் மலேசிய நோட்டுக்கள் நான்கு மட்டும் என்னவர் கைகளிலே! அதற்குப்பின் பசியேது? அடுத்த உணவு வீட்டிலேதான்! அதன்பின் காலி இருக்கைகள் பல கண்ட நாங்கள், அன்னையைப் படுக்க வைத்தோம் 3 இருக்கைகளில்; தன்னை மறந்து இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்தார். :wave . . தொடரும் ...
மயங்க வைக்கும் மலேசியா – 2 சென்னை நேரத்தில் இரண்டரைமணி தொலைந்தாலும், சென்னை திரும்புகையில் அது திரும்பக் கிடைக்குமே! மலேசிய நேரம் மாலை மூன்று மணிக்கு அடைந்தோம் மலேசிய விமான நிலையத்தை, மன மகிழ்ச்சியுடன்! பறக்கும் வழியில் பல குட்டித் தீவுகள். பச்சை நிறத்தில் மரங்கள் அடர்ந்து இருக்க, சுற்றிலும் கடல் நீரும் பச்சை, நீலமாய் மிளிர, அது கப்பல்கள் கடலில் சிந்தும் எண்ணெய்க் கசிவுகள் என அறிந்தோம்! இயற்கை அன்னைக்கு மனித இனத்தால் துயரமே! செயற்கைச் சாதனங்களால் சுற்றுச் சூழல் மாசுபடுமே! முடிந்தவரை காமராக்களில் இயற்கையின் அழகைப் பதித்து வைத்தோம் பல அழகிய புகைப்படங்களாக! வெய்யில் வெளியில் சுட்டெரித்தாலும், விமானத்தில் வெய்யிலின் தாக்கம் துளிகூடத் தெரியவில்லை! ஆங்கிலம் மலாய் மொழிகளில் மட்டுமின்றிப் பாங்காகத் தமிழிலும் அறிவிப்புச் செய்கின்றார்! செல்போன் – கைபேசி; LAP TOP – மடிக்கணினி; என்று சொல் வளத்தால் கொஞ்சம் அசரவே வைக்கின்றார்! விமானத்திலிருந்து இறங்கும்போது, சக்கர நாற்காலி விமானத்தின் படிகள் இறங்கியவுடனே கிடைத்தது. நம்மையே தள்ளிச் செல்லுமாறு சொன்னாலும், அங்கு நன்மை செய்யும் மனிதர்களைக் கண்டதும் நிம்மதியே! வெளியில், அண்ணன் அழைத்துச் செல்ல நிற்க, துளியும் அசதி தெரியாது வீட்டிற்குப் பயணித்தோம்! :cool2: . .தொடரும் ...
பயணக் கட்டுரைகள் நம்மில் பிரபலம். பயணக் கவிதை தர விளைந்திருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள். நன்கு அமைந்துள்ளது,உங்கள் துவக்கம், தொடருங்கள் உங்கள் பயணத்தை, நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்.
தோழி நீங்கள் சயனித்த தொலை தூர பயணம் இங்கே கவிப் பயணமாய் பவனி வர ஆவலுடன் நாங்களும் கவனித்து, கணித்து பச்சை கொடி காட்டுகிறோம். உங்கள் பயணம் இன்பாய் இருக்கட்டும் .இனிதே தொடரட்டும் என்றும் செந்தமிழோடு வாழ்த்துக்கள் ராஜி உங்கள் முதல் பதிவுக்கு
சகோதரிகளுக்கு நன்றி! பயணக் க(வி)தைக்கு ஊக்கம் அளிக்கும் சகோதரிகளுக்கு நன்றி! பயணம் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லுவேன்! இது உறுதி! அன்புடன், ராஜி ராம்
ராஜி உங்கள் புதுமையான, எளிமையான பயணக் கவிதைகள் அருமை. இரண்டடியில் வாழ்க்கைப் பயணத்தை நெறிப்படுத்தினார் நம் வள்ளுவர். இரண்டடியில் வாழ்க்கையில் பயணத்தை அவர் வழி வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அங்கு தமிழில் கூட அறிவிப்பா? பரவாயில்லையே..."மடிக்கணினி" என்பதெல்லாம் நம் தமிழர்களுக்கே புரியுமா என்ன? ஆங்கிலம் கலந்த தமிழ் அல்லவா நடைமுறையில் இருக்கிறது? உங்கள் பயண அனுபவத்தை வித்தியாசமாக பகிர்ந்துக்கொள்கிறீர்கள் ராஜி..கற்பனை கதையை விட இந்த உண்மை பயணக் கதை ரசிக்கும்படி இருக்கிறது..தொடருங்கள்.
மயங்க வைக்கும் மலேசியா – 3 மயங்க வைக்கும் மலேசியா – 3 சுத்தத் தமிழ் மணக்கும் மலேசிய மண்ணில், நாம் சுத்தமாக ஆங்கில மொழி மறக்கவும் வகையுண்டு! ஒலியை மையப்படுத்தி எழுதும் சொற்களால், மொழி கொஞ்சம் மறப்பதும் இயற்கைதானே! EXPRESS ஐ EKSPRES என, COFFEE ஐ KOPI என CENTRAL ஐ SENTRAL என எழுதுகின்றார் இங்கு! ஒருவகையில் மிகவும் எளிதான ஆங்கிலமாயினும், மறுபடியும் சரியாக எழுத வருமோ என ஐயம் எழும்! இன்னுமொரு விசேஷம் இந்த ஊர் மொழியில் காபிக் கடை என்பதை கடை காபி என்றிடுவார் ! ஒரு சில நாள் இதேபோலப் படித்தால் என் பெயரை ஒரு வேளை ஈஸ்வரி-ராஜ என்பேனோ என்னவோ! அமெரிக்க நாட்டை முன்மாதிரியாகக் கொண்டாலும், அமெரிக்கா போல DRY CLEAN கழிவறைகள் இல்லை! நிறைய நீர் வளம் இருப்பதால், இங்கு குழாய்களில் நிறைய நீர் கொட்டுகிறது நயாகரா வெள்ளம்போல! பொது மக்கள் உலவும் எல்லாயிடங்களிலும் கட்டாயம் பொதுவான தொழுகை அறை அமைத்து வைத்துள்ளார்! கைகால்களை சுத்தம் செய்து, வேளை தவறாது மெய்யான பக்தியுடன் தொழுகை செய்கின்றார்! மேலைநாட்டு பாணியில் சீன மக்கள் ‘சிக்’ உடை, தலைவிரிகோலம் என வெளியில் உலவிடுவார்; முகமதியர், உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிய வண்ணமய அழகிய உடைகளில் வலம் வருவார்! பார்வைக் குறை உள்ளவருக்கு, நடை பாதைகளில் நேர்த்தியான ஜாலிகள் நெடுகிலும் வழி காட்டும்! :rotflதொடரும்.......