ஓர் எழுத்தில் 'ம்' என்று உணர்த்தி விட்டுச் செல்லலாம், ஈரெழுத்தில் 'சரி' என்று சுருக்கமாகச் சொல்லலாம். மூன்றெழுத்தில் 'ஆமாம்' என எனக்கு பதில் கூறலாம், நான்கெழுத்தில் 'வேண்டும்' என நாணத்துடன் நவிலலாம். ஐந்தெழுத்தில் 'சம்மதம்' என சபையோர் முன் பகரலாம் ஆறெழுத்தில் 'பிடிக்கிறது' என இனிக்க மொழியலாம், ஏழெழுத்து இசையாலே உன் இசைவை உணர்த்தலாம் எட்டெழுத்து பத்திரிக்கையை அச்சடிக்கச் சொல்லலாம். ஒன்பதெழுத்து விழா என்று எனக் குறிப்பாய்க் கேட்கலாம், பத்தெழுத்தாலே வந்தோர் வயிறும் வாழ்த்தச் செய்யலாம். பதினொரு எழுத்தால் நம்மை அதன் பிறகும் புகழலாம். பன்னிரு எழுத்தால் எத்தனை குழந்தைகள் எனக் கூறலாம். குறிப்பு: பெண் பார்க்கும் படலத்தில், மாப்பிள்ளைக்கு, பெண்ணைப் பிடித்து விடுகிறது. அவள் பதிலுக்குக் காத்திருக்கையில் இவ்வாறு நினைக்கிறான். ஏழெழுத்து இசை - சரிகமபதநி ஸ்வரங்களால் ஆன இசை எட்டெழுத்து பத்திரிக்கை - திருமண அழைப்பு ஒன்பதெழுத்து விழா - நிச்சய தாம்பூலம் பத்தெழுத்து உணர்த்துவது - வயிறு முட்ட விருந்து பதினொரு எழுத்து - மனமொத்த தம்பதிகள் பன்னிரு எழுத்து - நமக்கு இரு குழந்தைகள். -ஸ்ரீ
எதிலோ நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இங்கு வந்தபின்பு தான் கவிதை எழுதவே தொடங்கியதாக... நானும் நம்பத்தான் முயற்சிக்கிறேன்.. ஆனால் நம்பும் படியாக இருப்பதில்லை உங்கள் ஒவ்வொரு கவிதையும் படித்த பின்பு!!!!!!!!
தமிழில் கவிதை எழுதத் தொடங்கியது ஐஎல் தளத்தில் தான் தேவப்ரியா. ஆங்கிலத்தில், பல வருடங்களுக்கு முன்பே நிறைய கிறுக்கி இருக்கிறேன். அவற்றில் பெரும்பகுதியும், இங்கு ஆங்கிலக் கவிதைகளில் உள்ளது. உங்களைப் போன்றோர் தரும் ஊக்கத்தில் தினமும் எழுத முயற்சிக்கிறேன். பாராட்டுக்கு நன்றி. -ஸ்ரீ