படித்து சிரித்தது தலைக்கவசம் அல்லது மூளை இல்லாதவர்களை சமாளிக்க சில யோசனைகள் . இந்த தலைப்பில் ஒரு புத்தகம் படித்த ஞாபகம் வருகிறதா?கவலைப்படாதீர்கள். வராது ! அதை எழுதியதே நான் தான். அந்தப் புத்தகத்தை எழுதியதும் வேலை பளுவால் அப்படியே வைத்து விட்டேன். பதிப்பாளரிடம் கொடுக்க நேரமில்லை. திடீர் என்று சமீபத்தில் அந்தப் புத்தக manuscript கையில் கிடைத்தது, பல பழைய கோப்புகளுக்கு நடுவே. அப்படியே அதைப் படிக்க ஆரம்பித்தேன். பிரமித்துப்போனேன். அதில் எனக்கு அவசியமான அறிவுரைகள் பல இருப்பது அப்போது தெளிவாய் தெரிந்தது. இவ்வளவு அருமையான உபயோகமுள்ள யோசனைகள் முன்னமேயே தெரிந்திருந்தால் என் வாழ்வே மாறியிருக்கும் என்று நினைக்கையில் இதை வெளியிட வேண்டும், மற்ற என்னைப்போன்ற புத்தி இல்லாத சாமானியர்கள் பலன் அடைய வேண்டும் என்று ஒரு புது எண்ணம் உதித்தது. இது என்ன ‘மூளை இல்லாதவர்களை சமாளிக்க சில யோசனைகள்’ என்று? சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்? அதை ஏன் கேட்கிறீர்கள்... முதலில் 'புத்தி இல்லாதவர்களுக்கு சில அறிவுரைகள்’ என்று தான் தலைப்புக்கொடுத்திருந்தேன். ஆனால் அதைப்படித்த என் பதிப்பாள நண்பர் புத்தி இல்லாதவர்களுக்கு எப்படி அறிவுரை சொல்ல முடியும்? அதுவும் நம் தமிழ் மக்கள் இப்படியெல்லாம் எழுதினால் ரொம்பக் கோவப்பட்டு மொத்தமாக வாங்கி தமக்குப் பிடிக்காத எல்லா நண்பர் களுக்கும் விநியோகிக்க முயல்வார்கள். இது வினையாய் முடியும். வேண்டாம், தலைப்பை மாற்றுங்கள் என்றார். ''சரி, நீங்களே சொல்லுங்கள், எப்படி மாற்றலாம்?'' கொஞ்சம் யோசித்தார். ''மூளை இல்லாதவர்களுக்கு சில அறிவுரைகள் என்று போட்டால் நல்லாயிருக்குமே!'' எப்ப்படி சார் ? மூளை இல்லாதவர், புத்தி இல்லாதவர், அறிவில்லாதவர் எல்லாம் ஒன்றுதானே?'' '' இல்லையே. ஒவ்வொன்றுக்கும் சூக்ஷமமான வித்தியாசம் இருக்கிறது. யோசித்துப்பாருங்கள். புத்தி இல்லாதவர் என்றால் மூளை இருந்தும் அதை உபயோகிக்கத் தெரிந்து கொள்ளாதவர் என்று பொருள். மூளை இல்லாதவர் என்றால் கடவுளே கொடுக்காமல் விட்டது, அதற்கு நாம் பொறுப்பாளி இல்லை என்று சமாளிக்கலாம். அது அவ்வளவு கோபிக்க முடியாத, சினப்படுத்தாத நல்ல தலைப்பு''. எனக்கு அப்போது பாக்கி இருந்த சிறிதளவு மூளைக்கு இது சரியானதாகப் பட்டது. நண்பர் என்னை விட புத்தி உள்ளவர் என்றும் புரிந்தது. ''சரி, அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இன்னும் ஒரு சிறிய சந்தேகம். அறிவில்லாதவர்களுக்கும், புத்தியில்லாதவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்குத் தெரியவில்லை, அதனால் தான் கேட்கிறேன், மன்னித்துக்கொள்ளுங்கள்". '' அதனால் என்ன சார், உங்களுக்குச் சொன்னால் என்ன, என் புத்தி குறைந்தா போய் விடும்... கொஞ்சம் ஆழமாய்ப் பாருங்கள், புத்திக்கும், அறிவுக்கும் மென்மையான வேறுபாடு புலப்படும். .அறிந்து கொள்வது அறிவு. தெரியாத விஷயங்கள் படித்ததும் தெரிகிறது... அல்லது யாராவது சொல்லக் கேட்டால் புரிகிறது. இது அறிவு. புத்தி என்பது அதைவிட ஒரு படி மேலானது. அறிந்ததை அறிந்துகொள்ள முடிந்ததை சமயோசிதமாய் வாழ்க்கையில் உபயோகிக்க தேவையான கருவி புத்தி என்று சொல்லலாம். '' '' சும்மா குழப்பாதிங்க சார் ...நீங்க சொல்றது அவ்வளவு நம்பும்படியாக இல்லை.'' "ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்... அப்போது விளங்கும்.'' '' சொல்லுங்கள்'' ''உதாரணமாக.... என் மனைவிக்கு நான் ஒரு 'லூஸ்' என்று தெரியும். அது அறிவு. ஆனால் இதுவரை அவள் என்னை 'லூஸ்' என்று வெளிப்படையாக சொன்னதே கிடையாது. அது புத்தி.'' '' அட பரவாயில்லையே, இது புரியும்படி தான் இருக்கு. நீங்க புத்தி சாலி சார், உங்க மனைவியும் தான்!'' இப்போது புரிகிறதா இந்த தலைப்பின் மூலம்? இப்போது எனக்கு இன்னொரு கேள்வி உதித்தது. ஆனால் மறுபடி அவரைக் கேட்க பயமாய் இருந்தது. இருந்தும் அவரைக்கேட்டேன். '' மூளை இல்லாதவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால்? '' '' அதனால் என்ன? இந்த உலகில் யாரும் தனக்கு மூளை இல்லை என்று நினைப்பதில்லை, மூளை இல்லாதவர்கள் உட்பட. அறிவுரைகள் உபயோகமானதாக இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பாராட்ட மாட்டர்கள். உபயோகமற்றதாக இருந்தால் நீங்கள் இவ்வளவு மூளை இல்லாமல் எழுதுகிறீர்களே என்று நினைப்பார்கள்.'' '' அது கொஞ்சம் மனக்கஷ்டமாக இருக்காதா?'' ''என்ன மனக்கஷ்டம்? இதற்கெல்லாம் மனதில் இடமளிக்கலாமா? மேலும் இதைப்பற்றியும் ஒரு அறிவுரை எழுதி நீங்களே படித்துவிட்டால் போயிற்று.'' '' சரி, ஆனால் மூளை இருப்பவர்கள் இதைப் படிப்பார்களா?'' '' அதற்கும் இதே பதில் தான். மூளை இல்லாத சக மக்களுக்கு என்ன அறிவுரை தருகிறீர்கள் என்று பார்க்க முனைவார்கள். அதை எழுத உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது வாங்குவார்கள். இருந்தாலும் உங்கள் கவலையைப் போக்க உங்களுக்காக அதைவிட நல்ல தலைப்பைத் தருகிறேன். தலைப்பை இப்படி மாற்றுங்கள்: ’மூளை இல்லாதவர்களை சமாளிக்க சில யோசனைகள்’ உங்கள் புத்தகம் நிச்சயம் லட்சக்கணக்கில் விற்பனை ஆகும். மேலே யோசிக்காதிர்கள். இப்போதே அச்சடிக்கலாம். மீதியை என்னிடம் விடுங்கள்.'' '' இவ்வளவு அவசரமாக செய்யலாமா? அதோடு முன் எச்சரிக்கையாக ஏதாவது செய்ய வேண்டியது இருக்கிறதா?'' '' நல்ல முன் யோசனை உங்களுக்கு. பதிப்பித்து வந்ததும் கொஞ்ச நாளைக்கு 'ஹெல்மெட்' அணிந்து வெளியே செல்வது நல்லது. உங்களிடம் ஸ்கூட்டர் இல்லா விட்டாலும் 'ஹெல்மெட்' [தலைக்கவசம்] வாங்கிவிடுங்கள். it is a good investment for your personal protection, just in case'' என்றார் என் நண்பர். அனுபவப் பூர்வமான அறிவுரை. கொஞ்ச நாளாக நான் தலைக்கவசத்துடன் நடந்து போவதைப் பார்த்தால் தவறாக நினைக்காதீர்கள். இந்தப் புத்தகம் வெளியாகி சில நாட்களிலேயே ப்ரபலம் அடைந்து பலரும் வாங்கிப் பயனடைந்தாக என் பதிப்பாளர் கூறியதுதான் அதற்குக் காரணம். படித்து சிரித்தது