ஆறு வயதுக்குப் பின் அனுபவிக்க முடியாத தாய்மடி ..... தவழ்ந்து எழுகையில் தவறவிட்ட தந்தையின் கைவிரல்கள் ..... கைகளைப் பிடித்து அ ஆ எழுதக் கற்றுக் கொடுத்த தமயந்தி டீச்சர் ...... எட்டு வயது காதலியிடம் கிட்டாத முத்தம் ..... தூக்கத்திற்கு தலையணையாய் துக்கத்திற்கு உறுதுணையாய் தோழன் கொடுத்த தோள்கள் ..... அமாவாசை என்றறியாமல் அடம்பிடித்து கேட்ட நிலாச்சோறு ...... பாதுகாக்கத் தெரியாததால் பறிகொடுத்த பட்டாம்பூச்சி ..... பறக்கவிடத் தெரியாத பனையோலை காத்தாடி..... கள்ளிச் செடியில் கிறுக்க நினைத்த பள்ளிக் காதலியின் பெயர் .... மரக் கிளையில் செதுக்கிய என் முதல் கவிதை ...... என நான் இழந்தவற்றை எல்லாம் பட்டியலிட்டால் இந்த பக்கங்களும் போதாது , இன்றைய நாளும் போதாது ...... என இருபது வயதில் எங்கிருந்தோ வந்தாள் எனக்காகவே வந்தாள் நான் இழந்ததைஎல்லாம் திருப்பித் தந்தாள் இதயத்திற்குள் புகுந்தாள் ரத்தமாய் மாறினாள் காதல், கனவு, காமம், சுவாசம் ,சுதந்திரம் ,சுயமரியாதை, பனித்துளி,பால்நிலவு, பகல் தூக்கம் , தவம் ,தாகம் ,தன்னம்பிக்கை, மஞ்சள் வெயில், மழைத்துளி, மண்வாசனை , மோகம் ,மேகம் என மொத்தமும் அவளாய் மாறினாள்..... தன்னிறைவு நிரம்பி தன்னிலை மாறி தலைக்கணம் ஏறியது எனக்கு அவள் மட்டும் போதும் எனக்கு ஆண்டவன் கூடத் தேவையில்லை என்றெண்ணினேன் ...... சொல்லிவிட்டா வரும் சுனாமி .....? எச்சரித்தா வெடிக்கும் எரிமலை ...? புன்னகையோடு வருமா பூகம்பம் ....? காதலுக்கு எமனும் அப்படித்தான் ....... எங்கு போனாள்..? என்ன ஆனாள்...? ஏன் போனாள் ..? எப்படி இருக்கிறாள் ...? நிமிடங்களுக்கு நூறுமுறை என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்...... இருதயத்தைப் பிடுங்கிவிட்டு அது இருந்த இடத்தில் இலந்தைமுள் செடியை நட்டு வைத்துவிட்டு பன்னீராய் இரு சொட்டுக் கண்ணீரை மட்டும் ஊற்றிவிட்டு பட்டாம்பூச்சியாய் பறந்து போய்விட்டாள்..... இலந்தைச் செடியானாலும் வைத்தது அவளல்லவா ..... இரட்டை ரோஜா பூக்குமென்று இரண்டு வருடங்களாய் காத்திருக்கிறேன் .... இருபது வருடங்களில் நான் இழந்ததைஎல்லாம் தந்த அவளால் .... சத்தியமாகச் சொல்கிறேன் நான் அவளைப் பிரிந்து இந்த இரண்டு வருடங்களில் இழந்ததைத் தரவேண்டுமென்றால் அதற்கே அவள் இரண்டு ஜென்மங்கள் எடுக்க வேண்டும் ......
விவரிக்க முடியாத உணர்வை அப்பட்டமாய் அழுத்தமாய் செதுக்கிய வரிகள்! உங்களுக்கு பிடித்த கவிதையை இங்கு பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சுதா!