*நடமாடும் தெய்வம் நீ! உனக்கே என் முதல் வணக்கம்* உன்னைப் பற்றி கவிதை எழுத உள்ளம் விழைவதோ உண்மை தான் என்னை நானாக உருவாக்கித்தந்த உன்னை என்னவென வடித்திடுவேன்? கல்லாய் களிமண்ணாய் வெறும் கட்டையாய் இருந்தவனை கண்கவரும் சிற்பமாய் மாற்றிய சிற்பி என்பேனா? கானகத்தில் காரிருளில் கலங்காமல் வழிநடக்க காலமெல்லாம் கூட வரும் கைவிளக்கு என்பேனா? எட்டா உயரங்கள் நான் எட்டிப் பிடித்திட ஏதுவாய் துணை நின்ற ஏணி நீ என்பேனா? (என்) கனவு கற்பனை சாதனை அனைத்துக்கும் மூல காரணமாய் விளங்கிட்ட தூண்டுகோல் என்பேனா? என்னவென்று இயம்பிடுவேன் என் வாழ்வில் உன் பங்களிப்பை? நீ விதைத்த விதைதான் இன்று மரமாகி நிற்கின்றேன். உன் கையால் உருவான காடுகளோ ஏராளம் இன்றும் நீ விதைக்கின்றாய்; உடல் உள்ளம் ஊன்றி இடைவிடாது உழைக்கின்றாய். உன் மனதோ தாராளம். உனக்கு இறுதி வரை ஓய்வில்லை. உண்மைக் குடிமகனை உருவாக்கி விடுவதில் உனக்கு நிகர் வேறில்லை. உயிர் உடல் ஈந்ததோ தாயின் கருவறை உண்மை மனிதனாய் மாற்றியதோ உன் வகுப்பறை! படமாடும் தெய்வம் பலவுள்ள நானிலத்தில் நடமாடும் தெய்வம் நீ! உனக்கே என் முதல் வணக்கம். அன்புடன், RRG 05/09/2020 *ஆசிரியர் தினமாம் இன்று என்னைப் படிப்பித்த, என் உயர்விற்கும், பெற்ற பெருமைகளுக்கும் அடிகோலியாயிருந்த நல்லாசிரியர் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கங்கள்.* ராஜகோபாலன்