நகரமா? இல்லை நரகமா?? கிராமத்திலே தினம் தினமும் காலாற நடந்து வந்தோம்; காத தூரம் போவதற்கும் கால்களையே நம்பி வந்தோம். சுற்றமெல்லாம் சூழ்ந்திருக்க சுகமாத்தான் வளைய வந்தோம்; பெத்தவங்க கடைசி வரை மத்தவங்க ஆனதில்ல! காய்கறி வேணுமுன்னா கடை தேடி போனதில்ல; கந்து வட்டி, மீட்டர் வட்டி கதையெல்லாம் கேட்டதில்ல. களவுக்கு கவலையில்ல, கதவடச்சு பழக்கமில்ல களவாட ஏதுமில்ல கள்வருக்கு பயந்ததில்ல. காலையிலே பழஞ்சோறு கடிச்சு கொள்ள பச்ச மிளகா, காலத்திலே சூடு சோறும் அரைச்சு விட்ட குழம்பு முண்டு. மாலையிலும் மீந்து போன சோறு விட்டா பலகாரம், மொத்தமும் அன்றாடம் முறையாதான் செய்துண்டோம். கிணத்து தண்ணீரு உடல் குளிரவைக்கும் இளநீரு தேன் கதலி பழங்களுடன் தினை மாவும் பிடிச்சுண்போம். இடையிடையே கூழு முண்டு, புட்டு முண்டு, கஞ்சி யுண்டு, எடை ஏறிப் போனதுன்னு என்னிக்குமே சொன்னதில்ல. கருக்கலில் எழுந்திருந்து கழனிக்கு போய்விடுவோம், கடனென்று எண்ணாமல் கடமையாக உழைத்திடுவோம். கல்யாணம் கார்த்தியின்னா கிராமமே கூடுமில்ல கருமாதி யானாலும் பகிர்ந்து கொள்ள தயக்க மில்ல. கோயிலிலே திருவிழான்னா ஊர்முழுதும் கொண்டாட்டம் கொடியேற்றம் ஆனாலே மைதானத்தில் பெருங் கூட்டம் பொய்க்கால் குதிரை மற்றும் புலியாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் காண்போரின் உள்ளம் கொள்ளை கொண்டுவிடும் வியக்க வைக்கும் சருக்கசு, வழக்கமான மல்யுத்தம் காளை பிடி விளையாட்டு, கயிறு இழுக்கும் பந்தயமும் கோல் சுற்றும் விளையாட்டும் கோலாகலமாய் நடந்தேறும் வேகமாய் ஓடிவரும் ரேக்ளா ரேஸ், ராட்டினமும் கும்மி அடிப்பதுடன் குழு குழுவா நாட்டியங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகட்கோ கொஞ்சமும் பஞ்சமில்லை. வண்ண வண்ண வளையல்களும், விளையாட்டு சாமான்களும், கண்ணைப் பறித்து விடும் கலர் கலரா விளக்குமுண்டு; பூக்கடை ஒரு பக்கம், புடவைக்கடைகள் ஒருபக்கம், பாய்க்கடை ஒரு பக்கம், பழங்கள் எங்கும் குவிந்திருக்கும். சின்னக் குழந்தை முதல் சிறுசுகளும் பெரிசுகளும் சிரிப்பொலி சேர்ந்தொலிக்கும்; மைதானமே கல கலக்கும். சடுகுடு போட்டியுண்டு, சருகு கொட்டாய் தேட்டரிலே சந்தோஷ மாய் தலைவர் சரசங்களை ரசித்ததுண்டு. வீட்டிலே உண்ணாமல் விதவிதமா தின்பண்டம் வெளியிலே உண்டுபுட்டு விடியும் வரை தெருக்கூத்து! இத்தனையும் விட்டுப்புட்டு ஏதேதோ நினச்சு கிட்டு தோப்பு துறவு வித்துப்புட்டு தொழில் தேடி இடம் பெயர்ந்தோம்! வந்தாலும் வந்தோமய்யா பட்டணம் தான் வந்து சேர்ந்தோம்; வந்தவுடன் கண்டுகொண்டோம் விதியோட விளையாட்ட. குடிக்க தண்ணியில்ல, குழாயிலே காத்தோட்டம் நடக்க பாதையில்லே, நாள் முழுதும் திண்டாட்டம். காய்கறி வேணுமின்னா காஞ்சு போன கறிகாய் தான் காத்து வேணுமுன்னா கடல் கரைக்கு போனால்தான். எந்த பக்கம் பார்த்தாலும் கூட்டத்துக்கு கொறச்சலில்லே எல்லோர்க்கும் அவசரம் தான் நின்னு பேச நேரமில்ல பக்கத்துக்கு வீட்டு காரர் பழக கூட விரும்பவில்ல காரியம் ஆவனுண்ணா கலகலப்புக்கு பஞ்சமில்ல பஸ்சிலே பெருங்கூட்டம் ஏறிடவே போராட்டம் பருவ மழை வந்தாலோ வீதியெல்லாம் நீரோட்டம் பேச்சிலே மறுவாதே பேருக்கும் இல்லை யுங்க பேசுவது புரிவதற்கே பலகாலம் ஆவுதுங்க. பேமானி, கசுமாலம், பொறம்போக்கு, கழ பாண்டு, மொள்ளமாரி, முடிச்சவுக்கி, நாயி, பன்னி, பரதேசி, பஜாரி, பிக்காலி, பேக்கு, பிட்டு, டுபாக்கூரு , சாவு கிராக்கி, சோமாரி, மொக்க, சப்ப, மர மண்ட இத்தனையும் இங்கே வந்து என் பேரு ஆனதுங்க. இன்னும் என்னென்னவோ சொல்ல நா கூசுதுங்க. இங்கே தண்ணியின்னா மது பானம் தாராளமாய் ஓடுதுங்க தெருத் தெருவா டாஸ்மாக்கு கூட்டம் நெறிச்சு தள்ளுதுங்க குடும்பம் வாடினாலும் குடி மக்கள் கொண்டாட்டம் குடிச்சபின் வீடு போயி சேருவதே திண்டாட்டம் கிடைக்கும் வருவாயோ செலவுக்கு பத்தவில்ல குடம் முதல் சாமான்கள் இருப்பதிப்போ வட்டி கட நகையையும் அடகு வச்சோம், நாலா பக்கமும் கடன் தொல்ல (புன்) நகையையே மறந்து விட்டோம் பிடி அரிசிக்கு வழி இல்ல மீட்டர் வட்டி, மின்னல் வட்டி, ரன்னு வட்டி, ராக்கெட் வட்டி, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி எல்லாம் இப்போ அத்துப்படி . மீத இப்போ எங்களிடம் இருப்பது வெறும் தன்மானம் வெளியிலே எடுத்து சொன்னா வந்து சேரும் அவமானம் திரும்பி ஊரு போனாலும் வீடு வாசல் ஒண்ணுமில்ல- இங்கே திருட்டு புரட்டு இல்லாமல் வாழ வழி தெரிய வில்ல ஏன்தான் வந்தோமின்னு இப்போ தான் தோணுதுங்க இந்த நகரம் எங்களுக்கு நரகமாத்தான் தெரியுதுங்க. நாளை நல்ல நாளாகும், நமக்கும் நிலமை மாறுமென்ற நம்பிக்கை ஒன்றேதான் எமை நடத்தி போவுதுங்க! அன்புடன், RRG (19/12/2019)
அருமையாக புனைந்தீர் - நாடும் நகரமும் ஓன்ரே ஆயின நாகரீகத்தினாலே அந்தக்காலம் மீண்டும் வருமா சாமி? நன்றி. கடவுள் நம் பக்கம்.
வேரு சில காட்சிகள் மனதை தொட்டது Google Image Result for https://i.ytimg.com/vi/ohMq3Dbb2fg/maxresdefault.jpg
வேரு சில காட்சிகள் மனதை தொட்டது Google Image Result for https://i.ytimg.com/vi/ohMq3Dbb2fg/maxresdefault.jpg