நான் யார் ? ஓடும் நதியா ? வாடும் பயிரா ? தேடும் பொருளா ? முதலா ? முடிவா ? கேள்விகள் பலவும் சிந்தையில் சிறக்கும் ! பதிலைக் காணும் ஆர்வமும் பிறக்கும் ! நான் யார் ? தந்தையின் உருவா ? தாய்க்குத் திருவா ? விந்தை உலகின் மற்றொரு கருவா ? சாட்டையைச் சுழற்றும் வலிமிகு கரமா ? வேட்டையில் இறங்கிடும் விலங்கிற்கு இரையா ? நான் யார் ? பசியா அல்லது புசிக்கும் உணவா ? ருசிக்கும் போது ஏற்படும் உணர்வா ? ரசிக்கும் பாட்டில் உள்ளிடு கருத்தா ? வசிக்கும் உடலா ? பொசுக்கும் நெருப்பா ? நான் யார் ? உடலை இயக்கும் இதயத் துடிப்பா ? கயிற்றால் இயங்கும் பொம்மை நடிப்பா ? சிறகுகள் விரித்தப் பறவையைப் போலே கட்டுகள் அறுத்தத் தனிமைத் தவமா ? நான் யார் ? மண்ணுள் புதைந்த வேரின் தயவால் விண்ணைக் காணும் செடியின் வளர்வா ? கண்ணில் தெரியும் கனிவா ? கனவா ? எண்ணில் அடங்கா எண்ணத்தின் விளைவா ? நான் யார் ? அடையும் வெற்றியா ? அடக்கும் தோல்வியா ? மடையை உடைக்கும் வெள்ளப் பெருக்கா ? குடையால் தடுக்கும் மழையின் துளியா ? உடையும் போது விழிவிடும் நீரா ? நான் யார் ? விதைக்குள் ஒளியும் விருட்சம் போல சதைக்குள் ஒளியும் உயிரெனும் ஒளியா ? கதைக்குள் விரியும் கற்பனை போல இதைத்தான் தேடுதல் மானுட விதியா ? அதுவே நான் ! நானே அது ! விடையைத் தேடி நடக்கும் நாடகம் இறையை நாடித் திரும்பும் காட்சியில் , நானே கடவுள் என்ற இரகசியம் அன்பில் ஆழ்ந்திடத் தானாய்ப் புரிந்திடும் ! நானென்ற ஆணவம் அழிந்த பின்னாலே தோன்றிய காரணம் விளங்கும் தன்னாலே ! ஈன்றவர் பலர் என்றறிந்தாலே நீங்கிச் சென்றிடும் பிறவி நோயும் தன்னாலே ! தன்னைத் தேடித் தொடங்கிய பயணம் தன்னைத் தொலைக்க இனிதாய் முடியும் ! என்னால் , எனக்காய் , என்னும் ஆணவம் தன்னை நீக்கிடத் தெய்வமும் தெரியும் ! Regards, Pavithra
அழகிய தேடல். ஆழமான தேடல் உயிரின் தேடல் இறை தேடல் ஒளியின் வழியில் நிறைவுறும் தேடல். Excellent one Pavithra. Surprisingly my first poem on this site was தேடல்.